About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, February 25, 2018

135. இலக்கை எட்டினாலும்...

ஒரு சேல்ஸ் மேனேஜர் என்ற முறையில் என் குழுவில் வேலை செய்யும் எல்லா சேல்ஸ் எக்ஸிக்யூடிவ்களின் வளர்ச்சியிலும் எனக்கு அக்கறை உண்டு.

என் குழுவில் இருக்கும் 15 சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்களில் இருவர் பற்றி எனக்குக் கொஞ்சம் கவலை உண்டு. இத்தனைக்கும் இருவருமே திறமைசாலிகள். திறமை இருந்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் இருக்கிறார்களே என்பதுதான் என் கவலை.

இருவரில் நரேஷின் பிரச்னை என்னவென்று எனக்குத் தெரியும். ஏன், அவனைத் தவிர எல்லோருக்குமே இது தெரியும்! எப்போதும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பதுதான் அவன் வேலை. யாராவது அவனை விட அதிகமாக விற்பனை செய்து விட்டால், அவர்கள் மீது ஏதாவது புகார் சொல்வான்.

அவனுடைய புகார்களில் அர்த்தமோ, வலுவோ இருக்காது. "மத்தவங்க என்ன பண்றாங்கன்னு நீ ஏன் பாக்கறே? உன்னோட டார்கெட்டை எப்படி அச்சீவ் பண்றதுன்னு பாரு" என்று நான் அவனிடம் பலமுறை சொல்லி விட்டேன். ஆனால் அவன் மாறவில்லை. 

அவனுடைய இந்த மனப்போக்கினால் அவனால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. அத்துடன் மற்றவர்களுடன் அவனுக்கு நல்லுறவு இல்லாமல் போய் விட்டது. இனி அவனே உணர்ந்து தன்னை மாற்றிக் கொண்டாலொழிய அவனுக்கு எதிர்காலம் இல்லை.

இன்னொருவன் பிரசாத். அவனுடைய பிரச்னை என்னவென்று எனக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு சேல்ஸ் எக்ஸிக்யூடிவுக்கும் ஒரு மாதாந்திர இலக்கு உண்டு. இலக்குக்கு மேல் அவர்கள் விற்பனை செய்தால் ஊக்கத்தொகை உண்டு. பல சேல்ஸ் எக்ஸிக்யூடிவ்கள் தங்கள் இலக்கை அடையக் கஷ்டப்படுவார்கள். கடுமையாக உழைப்பார்கள். 

ஆனால் பிரசாத் பத்து அல்லது பதினைந்து தினங்களுக்குள் தன் மாதாந்திர இலக்கை எட்டி விடுவான். ஆனால் இலக்கை எட்டிய பிறகு அதற்கு மேல் விற்பனை எதுவும் வராது. கேட்டால், முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்' என்பான்.

சில மாதங்களில் 20 தேதி வரை ஒரு விற்பனை கூட இருக்காது. ஆனால் இருபது தேதிக்கு மேல் ஆர்டர்கள் வரும். மாத இறுதிக்குள் இலக்கை எட்டி விடுவான்!

ஒரு மாதத்தில் பத்து அல்லது பதினைந்து நாட்கள் மட்டும்தான் உழைக்கிறான். மற்ற நாட்களில் விற்பனையில் கவனம் செலுத்துவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. மற்ற நாட்களிலும் நன்கு உழைத்தால் ஊக்கத்தொகையாகவே நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் அவன் ஏன் அப்படிச் செய்வதில்லை என்பது எனக்குப் புரியவில்லை.

பிரசாத்துக்குக் குடும்பப் பிரச்னை ஏதாவது இருக்குமோ என்று தோன்றியது. அதனால்தான் இலக்கை அடையும் வரை மட்டும் உழைத்து விட்டு, மற்ற நாட்களில் வேறு எதிலாவது கவனத்தைச் செலுத்துகிறானோ?

அவன் வீட்டிலேயே போய் விசாரித்து விட்டு வந்து விடலாம் என்று ஒரு நாள் அவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவன் வீட்டுக்குப் போனேன். வீட்டில் பிரசாத்தின் தந்தை இருந்தார்.

நான் யார் என்று சொன்னதும் அவர் பதறிப் போய் விட்டார். 

"என்ன சார்! ஏதாவது பிரச்னையா?" என்றார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. பிரசாத்துக்கு நல்லது செய்யலாம்னு நெனைச்சுத்தான் வந்திருக்கேன். அவரைப் பத்தி சில விஷயங்கள் உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கணும்" என்றேன்.

"சார்! பிரசாத் ரொம்ப நல்ல பையன். தப்பு எதுவும் பண்ண மாட்டான். இந்தப் பாழாப்போன குடிப்பழக்கம்தான் அவனோட எதிரி..."

"என்ன சார் சொல்றீங்க?" என்றேன் அதிர்ச்சியுடன்.

"ஆமாம் சார். அவன் வாங்கற சம்பளத்தில பாதி குடிக்கே போயிடுது. எனக்குக் கொஞ்சம் பென்ஷன் வருது. அதனால குடும்பம் ஓடிக்கிட்டிருக்கு. ஆனா, ஆஃபீஸ் வேலையில கரெக்டா இருக்கேன், அங்க ஒண்ணும் பிரச்னை இல்லைன்னு எங்கிட்ட சொல்லியிருக்கானே! ஏதாவது தப்புப் பண்ணியிருந்தான்னா அவசரப்பட்டு வேலையை விட்டுத் தூக்கிடாதீங்க சார்!" என்றார் அவர் பதட்டம் தணியாதவராக.

பிரசாத்தின் பிரச்னை எனக்குப் புரிந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு மாதத்தில் சில நாட்கள் கடுமையாக உழைத்து விற்பனை இலக்கை எட்டி விடுகிறான். அதற்குப் பிறகு வேலையில் கவனம் செலுத்தாமல் குடித்து விட்டு வீணே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறான்! ஒரு தவறான பழக்கம் எப்படி ஒருவனின் திறமையையே மழுங்க அடித்து விடுகிறது என்று நினைத்து வருந்தினேன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை 
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

பொருள்:  
பொறாமை உள்ளவனிடம் செல்வம் சேராது. அதுபோல் ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு ஏற்படாது.
        பொருட்பால்                                                                                         காமத்துப்பால்






















No comments:

Post a Comment