About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, February 22, 2018

133. நல்லதொரு குடும்பம்!

பள்ளியிலிருந்து தொலைபேசிச் செய்தி வந்ததும் மஞ்சுளா, அலுவலகத்திலிருந்த தன் கணவன் சாமிநாதனுக்குக் கைபேசி மூலம் தகவல் தெரிவித்து விட்டு, மகன் குணசீல் படிக்கும் பள்ளிக்கு விரைந்தாள். அவள் உள்ளே நுழையும்போதே சாமிநாதனின் காரும் பள்ளி வாசலில் வந்து நின்றது.

இருவரும் பள்ளி முதல்வர் அறைக்குச் சென்றனர்.

"வாங்க" என்று இறுக்கமான முகத்துடன் அவர்களை வரவேற்ற முதல்வர் அவர்களை உட்காரச் சொன்னார்.

"குணசீல் எங்கே?" என்றான் சாமிநாதன்.

"ரூம்ல படுத்துக்கிட்டிருக்கான். கொஞ்ச நேரத்தில தெளிஞ்சுடுவான்னு நினைக்கறேன். அதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். உங்க பையனுக்கு குடிப்பழக்கம் இருக்கறது உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா?" என்றார் முதல்வர்.

"என்ன சார் பேசறீங்க? குணசீல் தங்கமான பையன். நீங்க ஃபோன்ல சொன்னதை என்னால நம்பவே முடியல. முதல்ல நாங்க அவனைப் பாக்கணும்" என்றாள் மஞ்சுளா.

"ஒன்பதாவது படிக்கிற பையனுக்கு குடிப்பழக்கம் இருக்கறது எனக்கே அதிர்ச்சியாத்தான் இருக்கு. ஆனா அவனை டாஸ்மாக் கடையில ரெண்டு மூணு தடவை பாத்திருக்கறதா சில மாணவர்கள் சொல்றாங்க" என்றார் முதல்வர்.

"எங்க பையனை நாங்க அப்படி வளக்கல சார். சகவாச தோஷம்தான் காரணமா இருக்கணும். சேரக்கூடாதவங்களோட சேர்ந்துதான் இந்தப் பழக்கம் அவனுக்கு வந்திருக்கும்" என்றான் சாமிநாதன்.

"நீங்க அவனுக்கு தாராளமா கொடுக்கற பாக்கெட் மணியும் காரணமா இருக்கலாம்!" என்று முதல்வர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, குணசீலை அழைத்துக்கொண்டு ஒரு ஆசிரியர் முதல்வரின் அறைக்குள் வந்தார். கூடவே இன்னொரு பையனும் வந்தான். பாதித் தூக்கத்தில் எழுப்பப்பட்டவன் போல் நடந்து வந்த குணசீல், சோர்ந்திருந்த கண்களால் பெற்றோரைப் பார்த்தான்.

"எப்படிடா வந்தது உனக்கு இந்தப் பழக்கம்? நம்ப குடும்பத்தில யாருக்குமே இந்தப் பழக்கம் இருந்ததில்லையே?" என்றான் சாமிநாதன் கோபமாக.

குணசீல் பேசாமல் நின்றான்.

"அந்தப் பையன் யாரு?" என்றாள் மஞ்சுளா, குணசீலுடன் வந்த பையனைக் காட்டி.

"அவன்தான் ரோட்டில மயங்கி விழப்போன குணசீலை எழுப்பி, கையைப் பிடிச்சு இங்கே அழைச்சுக்கிட்டு வந்தான்" என்றார் முதல்வர்.

"இவனோட சேர்ந்து போய்தான் குடிச்சுட்டு வந்திருக்கானா? சகவாச தோஷம்னு நான் அப்பவே சொல்லல?" என்ற சாமிநாதன், முதல்வரிடம் திரும்பி, "உங்க ஸ்கூல்ல எப்படிப்பட்டவங்களை சேர்க்கறதுன்னு ஒரு தராதரம் வேண்டாம்?" என்றான் குற்றம் சாட்டும் தொனியில்.

"இந்தப் பையன் எங்க ஸ்கூல்ல படிக்கிற பையன் இல்ல" என்றார் முதல்வர்.

"பின்ன இவன்கிட்ட எப்படிடா உனக்கு சிநேகிதம்? தெருவில போற பையங்ககிட்டல்லாம் சகவாசம் வச்சுக்கிட்டு, அவங்களோட சேர்ந்து குடியைப் பழக்கிக்கற அளவுக்கு வந்துட்ட பாரு!" என்றாள் மஞ்சுளா, மகனிடம்.

"மேடம்! யூ ஆர் மிஸ்டேகன். இவனோட சேர்ந்து உங்க பையன் குடிக்கல. லஞ்ச் இண்டர்வல்ல உங்க பையன் பக்கத்தில இருக்கற டாஸ்மாக் கடைக்குப் போய் எதையோ வாங்கிக் குடிச்சுட்டு, தெருவில நடந்து வரப்ப தள்ளாடிக் கீழே விழப் பாத்திருக்கான். அப்ப ரோட்டில நடந்து போய்க்கிட்டிருந்த இந்தப் பையன் அவனைத் தாங்கிப் புடிச்சு, இந்த ஸ்கூல்ல படிக்கிற பையனாத்தான் இருக்கணும்னு நெனச்சு இங்க கொண்டு விட்டிருக்கான். நான்தான் நீங்க வந்துட்டுப் போறவரையிலும் அவனை இங்க இருக்கச் சொன்னேன். உங்க பையன் பண்ணின தப்புக்கு இந்த அப்பாவிப் பையன் மேல ஏன் பழி போடறீங்க? உங்க பையனைக் கீழே விழாம தாங்கிப் புடிச்சு அழைச்சுக்கிட்டு வந்ததுக்கு அவனுக்கு நீங்க கொடுக்கற பரிசா இது?" என்றார் முதல்வர், கடுமையான குரலில்.

அந்தப் பையன் சற்றுத் தயங்கி விட்டு, "சார்! எங்கப்பா குடிகாரர்தான். ஆனா நான் குடிக்கறதில்ல" என்றான்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 133
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் 
இழிந்த பிறப்பாய் விடும்

பொருள்:  
ஒழுக்கத்துடன் இருப்பதே ஒருவர் நல்ல குடியில் பிறந்தவர் என்பதற்கான அடையாளம். ஒழுக்கம் தவறுவது ஒருவரை இழிந்த குடியில் பிறந்தவராகக் காட்டி விடும்.
      பொருட்பால்                                                                                           காமத்துப்பால்
















No comments:

Post a Comment