About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, July 1, 2018

187. நண்பனிடம் ஒரு குறை!

"தீபக் எங்கடா?"

"முகேஷோடதான் சுத்திக்கிட்டிருப்பான். கழுதை கெட்டா குட்டிச்சுவரு."

"தீபக்கைக் கழுதைன்னு சொல்லு. முகேஷை ஏன் குட்டிச்சுவருன்னு சொல்ற? அவன் அரண்மனை மாதிரி வீட்டிலல்ல இருக்கான்!"

நண்பர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது, தீபக் முகேஷின் அரண்மனை போன்ற வீட்டில்தான் இருந்தான்.

"நாளைக்கு என்னடா ப்ரொக்ராம்?" என்றான் முகேஷ்.

"திங்கட்கிழமை செமினார் இருக்கே. அதுக்குத் தயார் பண்ணணும்."

"ஆமாம் சொன்னியே! மதுராந்தகம் பக்கத்தில இருக்கே அந்த காலேஜ், அங்கதானே?"

"ஆமாம்."

"நம்ப கார்லியே போயிடு. டிரைவரை அனுப்பறேன்."

"எதுக்குடா? நாங்க மூணு பேரு சேர்ந்து போறோம். பஸ்லியே போய்க்கறோம்."

"பரவாயில்ல. காரும் சும்மாதான் இருக்கப் போகுது. டிரைவரும் சும்மாதான் இருக்கப் போறாரு" என்றான் முகேஷ். "நானும் உங்களோட வரலாம், ஆனா, அன்னிக்கு ஒரு டெஸ்ட் இருக்கு."

"நீ வராதபோது எதுக்குடா காரு? நாங்க போய்க்கறோம்" என்றான் தீபக்.

"ரெண்டு பஸ் மாறிப் போகணும். நீங்க போய்ச் சேர்ரதுக்குள்ள செமினார் முடிஞ்சுடும். என் கார் உனக்குப் பயன்படக் கூடாதா என்ன?"

'இவனுக்கு என் மேல் ஏன் இத்தனை அன்பு?' என்று நினைத்துக் கொண்டான் தீபக்.

தீபக்கின் அப்பா ஒரு கட்டிட ஒப்பந்தக்காரரிடம் சூப்பர்வைசராகப் பணிபுரிபவர். அவர்கள் குடும்பம் அவ்வளவு வசதியான குடும்பம் அல்ல. கல்லூரியில் தீபக்குக்கு முகேஷின் நட்புக் கிடைத்து அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமானபோது தீபக்கின் அப்பா, "முகேஷோட அப்பா பெரிய பிசினஸ்மேன். அவன்கிட்ட ஜாக்கிரதையாப் பழகு. ரொம்ப வச்சுக்காதே. பணக்காரங்களோட சிநேகம் எப்பவுமே ஆபத்தானது" என்று எச்சரித்தார்.

ஆனால் முகேஷ் எந்த வித்தியாசமும் பாராட்டவில்லை. தீபக்கின் பெற்றோர்களிடம் மரியாதையுடனும், அக்கறையுடனும்தான் நடந்து கொண்டான். தீபக்கின் வீட்டுக்கு வரும்போது தன் வீடு போல் உரிமையுடன் நடந்து கொண்டான்.

தீபக்கின் அம்மாவிடம், "ஆன்ட்டி, அன்னிக்கு தீபக்குக்கு லஞ்சுக்கு சப்பாத்தியும் ஒரு அருமையான கூட்டும் செஞ்சு கொடுத்திருந்தீங்களே, அது மாதிரி இன்னிக்கு எனக்கு செஞ்சு கொடுங்களேன்!" என்பான்.

தீபக்கின் அப்பாவே மனம் மாறி, "இவ்வளவு நல்லவனா இருக்கானே! அவன் பணத்தை விடு. இவ்வளவு அருமையான குணமுள்ளவன் உனக்கு நண்பனாக் கிடைக்கறதுக்கு நீ ரொம்பக் கொடுத்து வச்சிருக்கணும்" என்றார்.

முகேஷின் காரில் செமினாருக்குச் சென்று விட்டு வந்த சில நாட்களுக்குப் பிறகு ராஜு என்ற நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தான் தீபக்.

"முகேஷ் ரொம்ப நல்லவன்தான். ஆனா அவன்கிட்ட பணக்காரத் திமிர் கொஞ்சம் இருக்கு" என்றான் தீபக்.

"என்னடா இப்படிச் சொல்ற? அவன் உன்னோட பெஸ்ட் ஃபிரண்ட் ஆச்சே!" என்றான் ராஜு.

"நம்மளைப் பொறுத்தவரையிலே அவன் ரொம்ப நல்லவன்தான். ஆனா அவங்க வீட்டில வேலைக்காங்க கிட்ட கொஞ்சம் கூட மனிதாபிமானம்  இல்லாம நடந்துக்கறாங்க."

"அவங்க அப்பா அம்மா அப்படி இருந்தா, அதுக்கு முகேஷ் என்ன செய்வான்? ஆமாம், இது உனக்கு எப்படித் தெரியும்?" என்றான் ராஜு.

"அன்னிக்கு மதுராந்தகத்துக்கு அவன் கார்லதானே போனோம்? அப்ப டிரைவர் எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டார். அவரையே ரொம்ப வாட்டி வதைக்கறாங்களாம். வேலை இல்லாட்டா கூட சீக்கிரம் வீட்டுக்குப் போகவோ, லீவு எடுக்கவோ அனுமதிக்க மாட்டாங்களாம். முகேஷ் கூடக்  கடுமையாத்தான் நடந்துப்பான்னு அவர் சொன்னாரே! நம்ப முகேஷ் இப்படி இருக்கறது எனக்கு வருத்தமா இருக்கு" என்றான் தீபக்.

சில நாட்களில் முகேஷிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. தீபக்கிடம் பேசுவதைத் தவிர்த்தான். மற்ற நண்பர்களிடம் அதிகம் பேசினான். தீபக் தானே சென்று பேசியபோதெல்லாம் கூட வேலை இருப்பதாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டான்.

தீபக்குக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவேளை தான் ராஜுவிடம் பேசியதை, அவன் முகேஷிடம் சொல்லியிருப்பானோ?

ராஜுவிடமே கேட்டான். முதலில் மறுத்த ராஜு, தீபக் திரும்பத் திரும்பக் கேட்டதும் தான் சொன்னதாக ஒப்புக் கொண்டான்.

"ஏண்டா சொன்ன?" என்றான் தீபக், கோபத்துடன்.

"பேச்சுவாக்கில் வாய் தவறிச் சொல்லிட்டேன். முகேஷ் குடைஞ்சு கேட்டதும் எல்லாத்தையும் சொல்ல வேண்டியதாயிடுச்சு" என்றான் ராஜு.

"ஏண்டா, ஒன்னை நம்பி நான் ஒரு விஷயம் சொன்னா, அதைப் போய் முகேஷ் கிட்ட சொல்லி இருக்கியே?  இது தப்புன்னு தோணல உனக்கு?"

"நிறுத்துடா! உன்னோட பெஸ்ட் ஃபிரண்டைப் பத்தி நீ எங்கிட்ட குறை சொல்லிப் பேசியிருக்கே. அது உனக்குத் தப்பாத் தெரியல. நான் அதை அவன்கிட்ட சொன்னதுதான் தப்பாத் தெரியுதா?" என்றான் ராஜு.

தீபக் பதில் சொல்லவில்லை.

அறத்துப்பால் 
இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி 
நட்பாடல் தேற்றா தவர்.

பொருள்:  
இனிமையாகப் பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர்கள் நண்பர்களைப்  பற்றி மற்றவர்களிடம் தவறாகப் பேசி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்










2 comments:

  1. நல்லதொரு கதை மூலம் குறள் அறிமுகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ஸ்ரீராம்.

      Delete