About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, July 3, 2018

189. துணைத் தலைவர்

"ஐயா, இவருதான் நம்ப கட்சியோட சமூக ஊடகப்  பொறுப்பாளர்  அருண்மொழி" என்று அறிமுகம் செய்தார் முத்து. அவர் கட்சியின் ஒரு மூத்த தலைவர்.

"வணக்கம் ஐயா" என்றான் அருண். அவனுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுக்கும்போதே அருண் என்ற அவன் பெயரை அருண்மொழி என்று நீட்டி விட்டார் கட்சித் தலைவர் வெற்றிவேந்தன்.

"சமூக ஊடகப் பொறுப்பாளரா? அப்படீன்னா?" என்றார் கட்சியின் துணைத் தலைவர் வையாபுரி, அவன் வணக்கத்தைப் பொருட்படுத்தாமல்.

"அதாங்க இந்த ஃபேஸ்புக், ட்விட்டர்னு எல்லாம் சொல்றாங்களே, அது மாதிரி சமூக வலைத்தளங்கள்ள நம்ப கட்சிக் கொள்கைகளைப் பரப்புவது, மத்த கட்சிகள், ஊடகங்களோட விமரிசனங்களுக்கு பதில் சொல்றது இந்த மாதிரி வேலை. இப்பதான் தலைவர் இவரை நியமிச்சாரு. நியமிச்ச உடனேயே உங்ககிட்ட அழைச்சுக்கிட்டுப் போய் அறிமுகப்படுத்தச் சொன்னாரு" என்று விளக்கினார் முத்து.

துணைத்தலைவர் என்ற முறையில் வையாபுரியை எந்த விஷயத்திலும் கலந்தாலோசிக்காவிட்டாலும், இது போன்ற மரியாதைகளைத் தரத் தவறுவதில்லை கட்சித் தலைவர் வெற்றிவேந்தன்.

"நல்லா வேலை பாரு தம்பி!" என்று சொல்லி அருணை அனுப்பி வைத்தார் வையாபுரி.

அருண் சென்றதும், "எதுக்குய்யா இதெல்லாம்? எல்லா விமரிசனங்களுக்கும் சரியானபடி பதில் கொடுக்க அதிர்வேட்டு அய்யாக்கண்ணு மாதிரி பேச்சாளர்கள் எல்லாம் இருக்காங்களே!" என்றார் வையாபுரி.

"இப்பல்லாம் இந்த சமூக வலைத்தளங்கள் ரொம்ப முக்கியமாயிடுச்சு ஐயா. இதோட முக்கியத்துவம் தெரிஞ்சுதான் தலைவர் ஒரு பெரிய ஐடி கம்பெனியில நல்ல வேலையில் இருந்த இந்தப் பையனை  நிறைய சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்திருக்காரு" என்றார் முத்து. 

'தலைவர் ஏன் உங்களைக் கலந்து ஆலோசிக்கறதில்லைன்னு இப்பத்தான் தெரியுது!' என்று  மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

ருண்மொழி வேலைக்குச் சேர்ந்து சில வாரங்களில், அவனுடைய செயல்பாடுகளால் கட்சியின் சமூக வலைத்தளப் பிரசாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. 

தன் தொழில் நுட்ப அறிவையும், கட்சியில் இருந்த கற்பனை வளம் மிகுந்த சில இளைஞர்களின் படைப்பாற்றலையும் இணைத்து சிறப்பாகப் பணியாற்றி வந்தான்அருண்.

இரண்டு முறை தலைவரைச் சந்தித்தான். அவர் அவனுடைய பணியைப் பாராட்டினார். அவனுடைய சில நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியதிலிருந்து அவர் அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார் என்று புரிந்து கொண்டான் அருண்.

துணைத்தலைவர் வையாபுரியையும் இரண்டு மூன்று முறை சந்தித்தான். அவர் அவனிடம் அதிகம் பேசவில்லை. "என்ன தம்பி, நல்லா வேலை செய்யறதா சொல்றாங்க. வாழ்த்துக்கள்!" என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.

ஆனால் சில தலைவர்களிடம் அவர் அவனைப் பற்றிக் கடுமையாக விமரிசித்து வருவது அவன் காதுக்கு எட்டியது.

"என்னய்யா செய்யறான் அவன்? தெண்டச் சம்பளம். தலைவர் எங்கிட்ட கேட்டா இந்த மாதிரி வேலையெல்லாம் கட்சிக்குத் தேவையில்லன்னு சொல்லுவேன். தொண்டர்கள் எல்லாம் எங்கிட்ட வந்து புலம்பறாங்க" என்று சொன்னாராம்.

நேரில் சந்திக்கும்போது அவர் தன்னைக் குறை கூறினால், தான் செய்வதை அவருக்கு விளக்கலாம் என்று நினைத்தான் அருண். அதற்காகவே அவரை சிலமுறை நேரில் சந்தித்தான். ஆனால் அப்போதெல்லாம் அவர் அவனிடம் எதுவும் சொல்லவில்லை. 

ஒருமுறை, "ஐயா, குறை ஏதாவது இருந்தா சொல்லுங்க" என்று கூடச் சொன்னான்.

ஆனால் அவர் "எனக்கு இது பத்தியெல்லாம் எதுவும் தெரியாதுப்பா, நான் பழைய ஆளு. கட்சிப் பத்திரிகையைப் படிச்சுட்டு அதில ஏதாவது குறை இருந்தா சொல்லுவேனே தவிர, இந்த க்விட்டர் எல்லாம் படிக்கிறதில்லை" என்று சொல்லி விட்டார்.

ஆனால் இதற்குப் பிறகும், அவனைப் பற்றி அவர் சிலரிடம் தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டிருந்தார் என்பது அவனுக்குத் தெரிந்தது.

தலைவர் தன்னைப் பாராட்டும்போது, துணைத்தலைவர் சொல்வதை, அதுவும் யாரிடமோ சொல்வதை ஏன் பொருட்படுத்த வேண்டும் என்று சில சமயம் நினைப்பான். 

ஆயினும் அவர் தன்னைக் குறை கூறி வந்தது அவனுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்து வந்தது.

ஒருமுறை கட்சித் தலைவரிடம் தனியாகப் பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது, அவரிடம், "ஐயா! தப்பா நினைச்சுக்காதீங்க. துணைத்தலைவருக்கு என் மேல ஏதோ குறை இருக்கிற மாதிரி இருக்கு. எங்கிட்ட ஒண்ணும் சொல்லல. ஆனா மத்தவங்ககிட்ட சொல்றாரு. நீங்க பாராட்டறீங்க. ஆனா அவரு இப்படிப் பேசறதைக் கேள்விப்படும்போது வருத்தமா இருக்கு. என்ன தப்பு பண்றேன்னே தெரியல" என்றான்.

தலைவர் உடனே பதில் சொல்லவில்லை. சற்று நேரம் கழித்து, "பாக்கலாம். நீ கவலைப்படாதே!" என்றார்.

ரண்டு நாட்கள் கழித்து, தலைவருக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட செங்கை சிங்கம் என்ற மூத்த தலைவரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

அவன் அலுவலகம் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே ஒரு தனி அறையில் இருந்த செங்கை சிங்கத்தைச் சந்தித்தான் அருண்.

"தலைவர் கிட்ட ஏதோ குறைப்பட்டுக்கிட்டீங்களாமே!" என்றார் சிங்கம்.

"தப்பா ஒண்ணும் இல்லீங்க. துணைத்தலைவர்..." என்று ஆரம்பித்தான் அருண். தான் துணைத்தலைவர் மீது குற்றம் சொன்னதாகக் கருதப்பட்டு விஷயம் பெரிதாகி விட்டதோ என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது.

"இருங்க" என்று  குறுக்கிட்டார் சிங்கம். "உங்ககிட்ட விளக்கம் கேக்க உங்களைக் கூப்பிடல. உங்களுக்கு சில விஷயங்களைத் தெளிவுபடுத்தத்தான் கூப்பிட்டேன்" என்று ஆரம்பித்தார்.

"வையாபுரி அண்ணனைப் பத்தி நம்ப கட்சியில எல்லாருக்கும் தெரியும். நீங்க புதுசா வந்ததால உங்களுக்குத் தெரியல. அவரு எல்லாரைப் பத்தியும் குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாரு. அதுதான் அவரோட வேலை. அதுவும் நேரா சொல்ல மாட்டாரு. மத்தவங்ககிட்டதான் சொல்லுவாரு."ஏன், தலைவரைப் பத்தியே சில பேர்கிட்ட குறை சொல்லிக்கிட்டிருப்பாரு. தலைவருக்கும் இது தெரியும். 

"வையாபுரி அண்ணன் கட்சியில ஒரு மூத்த தலைவர்ங்கறதுக்காக துணைத்தலைவர்ங்கற, அதிகாரம் இல்லாத ஒரு பதவியைத் தலைவர் அவருக்குக் கொடுத்திருக்காரு! அவரால கட்சிக்கு ஒரு பயனும் கிடையாது. சொல்லப் போனா அவரு ஒரு பாரம்தான். ஒரு கடமை உணர்வோடு தலைவர் இந்த பாரத்தை சுமந்துக்கிட்டிருக்காரு. அது தலைவரோட பெருந்தன்மை!

"அதனால நீங்க வையாபுரி அண்ணன் சொல்றதைப் பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம். தலைவருக்கு உங்க செயல்பாடு ரொம்பப் பிடிச்சிருக்கு. 

"துணைத்தலைவர் பத்தின இந்த விஷயங்களையெல்லாம் தலைவரே உங்ககிட்ட சொல்ல முடியாது. அதனாலதான் எங்கிட்ட சொல்லி சொல்லச் சொன்னாரு. போய் சந்தோஷமா வேலையைப் பாருங்க!"

அறத்துப்பால்     
இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் 
புன்சொல் உரைப்பான் பொறை.

பொருள்:  
ஒருவன் இல்லாதபோது அவனைப் பழித்துப் பேசுபவரின் உடல் பாரத்தைச் சுமப்பதும் அறம் (கடன்) என்று கருதித்தான் பூமி சுமக்கிறதோ!

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்










2 comments: