About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, June 18, 2015

7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை

"என்னுடைய முதியோர் ஊதிய விண்ணப்பம் கலெக்டர் ஆஃபிசில் ஒரு மாதமாகத் தூங்கிக்  கொண்டிருக்கிறது. இன்னும் அது பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை" என்றார் அந்த முதியவர்.

"கலெக்டர் அலுவலகத்துக்குப் போய் விசாரித்தீர்களா? என்ன சொல்கிறார்கள்?"

"பலமுறை போய் வந்து விட்டேன். ஒரு மாத ஊதியத்தொகை எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு தொகை செலவழிந்து விட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைக் கை காட்டுகிறார்கள். செக்‌ஷனில் கேட்டால் தாசில்தாரைக் கேட்கச் சொல்கிறார்கள். தாசில்தாரைக் கேட்டால் ரெவின்யூ இன்ஸ்பெக்டரைக் கேட்கச் சொல்கிறார். ரெவின்யூ இன்ஸ்பெக்டர் அலுவலகத்திலேயே இருப்பதில்லை. எப்போது வருவார், எப்போது வெளியே போவார் என்று யாருக்கும் தெரியவில்லை."

"கலெக்டரைப் பார்த்தீர்களா?"

"என் போன்ற சாமானியர்கள் எல்லாம் கலெக்டரைப் பார்க்க முடியுமா?" என்றார் பெரியவர்.

"நம் போன்ற சாமானியர்களுக்கு உதவுவதற்காகத்தான் கலெக்டர் என்ற பதவியே உருவாக்கப் பட்டிருக்கிறது. நாளைக்கு நானும் உங்களுடன் வருகிறேன். கலெக்டரைப் பார்த்து விடலாம்" என்றேன்.

"அதனால் மற்ற அதிகாரிகள் கோபித்துக் கொண்டு விட மாட்டார்களே?" என்றார் பெரியவர் கவலையுடன்.

"கவலைப்படாதிர்கள். பெரிய அதிகாரியிடம் போனால் பிரச்னை நிச்சயம் தீரும்" என்று அவருக்கு உறுதி சொன்னேன்.

மறுநாள் கலெக்டர் அலுவலகத்துக்குப் போனபோது, அங்கே ஒரு பெரிய கூட்டமே கலெக்டரைப் பார்க்கக் காத்திருந்தது. பார்வையாளர் நேரம் 3 முதல் 4 மணி வரை என்று போட்டிருந்தது. ஆனால் வெளியே போயிருந்த  கலெக்டர் அலுவலகத்துக்கு வரும்போதே 4.30 மணி ஆகி விட்டது. 

'இன்று கலெக்டரைப் பார்க்க முடியாது' என்று ஊழியர்கள் கூறியதால் பெரும்பாலோர் திரும்பிப் போய் விட்டார்கள். சுமார் பத்து பேர்தான் பொறுமையாகக் காத்திருந்தோம்.

சுமார் ஐந்து மணிக்கு கலெக்டர் மணியை அடித்து பியூனை அழைத்தார். பியூனுக்குப் பின்னால் நானும் நுழைந்து விட்டேன். கலெக்டர் முகத்தில் களைப்பும் சலிப்பும் தெரிந்தது.

"என்ன?" என்றார் என்னைப் பார்த்து.

"சார்! பார்வையாளர் நேரத்தின்போது உங்களைப் பார்க்க சுமார் நூறு பேர் காத்திருந்தார்கள். பெரும்பாலோர் திரும்பிப் போய் விட்டனர். நாங்கள் பத்து பேர் இருக்கிறோம். தயை கூர்ந்து நீங்கள் எங்களைப் பார்க்க வேண்டும்" என்றேன் பணிவாக.

பியூன் என்னிடம் திரும்பி, "அதெல்லாம் பார்க்க முடியாது. யாரைக் கேட்டு உள்ளே வந்தே? வெளியே போ!" என்று விரட்டினார்.

கலெக்டர் குறுக்கிட்டு, "இரு இரு" என்று பியூனை அடக்கி விட்டு, என்னிடம் "சார். ஒரு ஐந்து நிமிடம் கழித்து நான் ஒவ்வொருவராகக் கூப்பிடுகிறேன். கொஞ்சம் காத்திருங்கள்" என்றார்.

சொன்னது போலவே, சில நிமிடங்கள் கழித்து ஒவ்வொருவராக வரச் சொல்லி அவர்கள் குறைகளைக் கேட்டார். எங்கள் முறை வந்தபோது, பெரியவரின் பிரச்னையைச் சொன்னேன்.

கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து விசாரித்தார்.

"இதை ஏன் இன்னும் நீங்கள் பரிசீலிக்கவில்லை?"என்று அதிகாரியைக் கடிந்து கொண்டார்.

"நாளைக்கு இந்த விண்ணப்பம் என் மேஜைக்கு வர வேண்டும்" என்று அதிகாரியிடம் சொல்லி விட்டு, அருகிலிருந்த உதவியாளரிடம், "இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு எனக்கு இது பற்றி நினைவூட்டுங்கள்" என்று சொன்னவர், பெரியவரைப் பார்த்து, "கவலைப் படாதீர்கள். நீங்கள் எல்லா விவரங்களும் சரியாகக் கொடுத்திருந்தால் இன்னும் ஒரு வாரத்துக்குள் உங்கள் ஓய்வூதியம் சாங்ஷன் ஆகி விடும்" என்றார். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியே வந்தோம்.

கலெக்டர் உறுதியளித்தபடியே ஒரு வாரத்துக்குள் பெரியவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டிருப்பதாகக் கடிதம் வந்தது.

பெரியவருக்கு மிகவும் ஆச்சரியம். "எப்படி தம்பி இது?" என்றார் என்னிடம், நம்ப முடியாமல்.

"பெரியவரே! ஒரு பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடத்தை அணுகினால்தான் நடக்கும்" என்றேன்.
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
குறள் 7
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

பொருள்:
தனக்கு நிகரில்லாத கடவுளின் திருவடிகளைப் பற்றினாலே ஒழிய, இவ்வுலகில் கவலை இல்லாமல் வாழ முடியாது. (இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்களுக்குக் கவலை எதுவும் இருக்காது.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்













No comments:

Post a Comment