About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, June 24, 2015

13. அம்மாவின் மீது அக்கறை


"என்ன அரிசி விலை இவ்வளவு ஏறிடுச்சு?" என்று அதிர்ச்சியுடன் கேட்டார் செல்வராஜ்.

"என்னங்க செய்யறது? நாட்டில எங்கியுமே சரியா மழை பெய்யல. அரிசி உற்பத்தி கொறைஞ்சு போச்சு. விலை ஏறாம என்ன செய்யும்?" என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் பொருளாதார நிபுணர் போல் விளக்கினார் கடைக்காரர். 

செல்வராஜ் முணுமுணுத்தபடியே அரிசியை வாங்கிச் சென்றார்.

ஆனால் செல்வராஜ் போன்ற சிலர் போல் எல்லோராலும் விலை கொடுத்து அரிசி வாங்க முடியவில்லை. 

உதாரணத்துக்கு, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்யும் சண்முகத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் சண்முகம் வீட்டில் அரிசிச் சோறு என்பது மின்சாரம் போல் அவ்வப்போது வந்து போகும் சமாசாரம் ஆகி விட்டது.

அரிசி உற்பத்திக் குறைவு அரசாங்கத்தின் உணவுப் பொருள் கையிருப்பையும் பாதித்து விட்டது.

ரேஷன் கார்டுகளுக்கு வழக்கம் போல் அரிசி வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பே பிரச்னை இருப்பதைச் சுட்டிக் காட்டியது.

சில மாதங்கள் ரேஷன் அரிசி வினியோகம் தாமதமாகவும், சில மாதங்களில் அடியோடு இல்லாமலும் இருந்தது.

ரேஷன் அரிசி வழங்கப்பட்டாலும் பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு அது மாதம் முழுவதற்கும் போதாது என்பதால் மாதத்தின் கடைசி வாரத்துக்கான அரிசியை வெளிச் சந்தையில்தான் வாங்க வேண்டி இருந்தது, 

கடும் விலை உயர்வினால் வெளிச் சந்தையில் அரிசி வாங்குவது சண்முகத்துக்குப் பெரும்பாலும் இயலாத ஒன்றாக ஆகி விட்டது.

அவன் மனைவி முத்தழகுதான் பாவம் தினமும் குழந்தைகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது.

அன்று மாலை பள்ளியிலிருந்து வந்ததும் அவள் மகன் முருகேஷும், மகள் திவ்யாவும் கேட்ட ஒரே கேள்வி, "இன்னைக்காவது, ராத்திரி சோறு உண்டா?" என்பதுதான்.

அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல், முத்தழகு அவர்களிடம் கேட்டாள் "இன்னிக்கு ஸ்கூல்ல முட்டை போட்டாங்களா?"

"போட்டாங்க. ஆனா முட்டை அழுகலா இருந்ததால எனக்குச் சாப்பிடப் புடிக்கலே" என்றாள் திவ்யா. "அது சரி. ராத்திரி அரிசிச் சோறு உண்டா இல்லையா?" என்றாள் விடாமல்.

"இல்லடி கண்ணு. இன்னிக்கும் அரிசி கெடைக்கல. உங்கப்பா  நாளைக்குக் காலையில கோயம்பேடுலேர்ந்து வரப்ப அரிசி வாங்கிட்டு வரேன்னு சொல்லி இருக்காரு" என்றாள் முத்தழகு.

"அப்ப ராத்திரிக்கு என்ன?" என்றான் முருகேஷ்.

"ரொட்டி வாங்கித் தரேன்" என்றாள் முத்தழகு.

"அய்ய! அந்தக் காஞ்ச ரொட்டிய யாரு திம்பாங்க? பரவாயில்ல. நாளைக்கு மதியம்தான் ஸ்கூல்ல அரிசிச் சோறு போடுவாங்களே. அதுவரை பசி தாங்கிக்கிறோம்" என்றாள் திவ்யா.

"அது சரிம்மா. அப்பா வேலை செய்யற இடத்திலியே எதாவது சாப்பிட்டுக்குவாரு. எங்களுக்கு மதிய உணவு இருக்கு. நீ என்ன பண்ணுவ?" என்று கேட்டபடி தாயின் கையைப் பாசத்துடன் பற்றினான் முருகேஷ்.

சாப்பாடு இல்லை என்பதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மகள், தன் பசியைப் பற்றிக் கவலைப் படாமல் அம்மா பட்டினி கிடக்கிறாளே என்று ஏங்கும் மகன், இவர்களை நினைத்தபோது, முத்தழகுக்கு வயிறு நிறைந்து விட்டது போல் இருந்தது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

பொருள்:
நீர் சூழ்ந்த உலகம் இது  என்றாலும், வானம் பொய்த்து விட்டால், உலகின் உள்ளிருந்து பசிக்கொடுமை (மக்களை) வாட்டும்.

No comments:

Post a Comment