About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, May 10, 2019

256. சபாபதியின் தயக்கம்

"சாயந்திரம் வனிதாவைப் பெண் பாக்க வராங்க. நீங்க ரெண்டு பேரும் வரணும்" என்று அழைத்தார் சபாபதி.

"நாங்க எதுக்குப்பா?" என்றார் குருமூர்த்தி தயக்கத்துடன்.

"நீ இல்லாம என் வீட்டில எந்த நல்ல காரியமும் நடக்காது குரு. என் சொந்தக்காரங்களை விடவும் உன் குடும்பம்தானே எனக்கு நெருக்கம்?" என்றார் சபாபதி.

"சரி. அதுக்கு ஏன் நேர்ல வந்து கூப்பிடணும்? ஃ போன்ல சொல்லியிருந்தா போதுமே!"

"எங்கே? நேர்ல வந்து கூப்பிட்டப்பவே தயங்கறே! ஃபோன்ல கூப்பிட்டிருந்தா எப்படி சரியா இருந்திருக்கும்?"

குருமூர்த்தியும் அவர் மனைவியும் பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தனர்.

பெண் பார்க்கும் படலம் சுருக்கமாக முடிந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண்ணைப் பிடித்திருந்தது போல்தான் தோன்றியது. 

ஆயினும், போகும்போது, "பெண்ணுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டு வைங்க. நாங்களும் பையன்கிட்ட பேசிட்டு ரெண்டு நாள்ள ஃபோன் பண்றோம்" என்று சொல்லி விட்டுப் போனார்கள்.

"என்னம்மா பையனை உனக்குப் பிடிச்சிருக்கா?" என்றார் குருமூர்த்தி, சபாபதியின் மகளிடம்.

"அப்பா அம்மாதான் தீர்மானிக்கணும் அங்க்கிள்" என்றாள் அவள் சிரித்தபடி.

ஆனால் சபாபதியின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்பதை குருமூர்த்தி கவனித்தார்.

"அப்ப நாங்க கிளம்பறோம். வீட்டில எல்லார்கிட்டயும் கேட்டு முடிவு செய்!" என்று சபாபதியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார் குருமூர்த்தி.

ன்று இரவு மீண்டும் குருமூர்த்தியின் வீட்டுக்கு சபாபதி வந்திருந்தார்.

"என்ன முடிவு செஞ்சிருக்க?" என்றார் குருமூர்த்தி.

"என் மனைவி, பொண்ணு ரெண்டு பேரும் சரின்னு சொல்லிட்டாங்க. எனக்குத்தான் கொஞ்சம் யோசனையா இருக்கு" என்றார் சபாபதி.

"என்ன யோசனை?"

"பையனோட தொழிலைப் பத்தித்தான்."

"பையன் ஏதோ பிசினஸ் பண்றான்னு சொன்னே. நான் கூட என்ன பிசினஸ்னு கேட்கலாம்னு நினைச்சேன். அப்புறம் கேட்டுக்கலாம்னு இருந்துட்டேன். ஏன், பையனோட வியாபாரம் சரியில்லையாமா?"

"வியாபாரம் நல்லாத்தான் போகுது. ஆனா..."

"சொல்லு."

"நானும் முதல்ல வியாபாரம் பத்தி சரியா கேட்டுக்கல. ஏற்றுமதித் தொழில்னு சொன்னாங்க. என்ன ஏற்றுமதின்னு கேக்காம விட்டுட்டேன். இன்னிக்குத்தான் தெரிஞ்சுது. பையன் இறைச்சி ஏற்றுமதி செய்யறானாம். கடையும் வச்சிருக்கானாம்."

"ஓ!" என்றார் குருமூர்த்தி.

"அதான் எனக்குத் தயக்கமா இருக்கு."

"சரி. நீ, நான் எல்லாம் இறைச்சி சாப்பிடறவங்கதானே?"

"அது சரிதான். ஆனாலும் இறைச்சி வியாபாரம்னா எனக்குத் தயக்கமா இருக்கு."

"சபாபதி! உனக்கு மாப்பிள்ளையா வரவரு எப்படிப்பட்டவரா இருக்கணும்னு தீர்மானிக்கறது உன் விருப்பம். ஆனா நீ தயங்கறதுக்கான காரணம் சரின்னு எனக்குத் தோணல. உலகத்தில இறைச்சி சாப்பிடறவங்க இருக்கறப்ப, இறைச்சி விக்கறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க?"

சபாபதி பதில் சொல்லவில்லை.

துறவறவியல்
     அதிகாரம் 26      
புலால் மறுத்தல்  
குறள் 256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

பொருள்:  
புலால் உண்பதற்காக உலகத்தார் உயிர்களைக் கொல்லாமல் இருந்தால், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்










No comments:

Post a Comment