About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, December 7, 2017

111. யுதிஷ்டிரனின் வியூகம்

ராஜசூய யாகத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. பல்வேறு வகை மனிதர்களும் யாகத்தைக் காணவும், அதில் பங்கு கொள்ளவும் வந்த வண்ணம் இருந்தனர்.

வியாசர் முதலான முனிவர்களை வரவேற்று அவர்களை யாக மண்டபத்தில் உரிய ஆசனங்களில் அமர வைத்தான் யுதிஷ்டிரன்.

பிறகு, யுதிஷ்டிரன், தன் சகோதரர்களை அழைத்து, "இனி பீஷ்மர், துரோணர், விதுரர், துரியோதனன், அவனது தம்பிகள், பல நாடுகளைச் சேர்ந்த அரசர்கள் ஆகியோர் வருவார்கள். அரசர்களை அர்ஜுனன் உபசரித்து அழைத்துப் போய் அவர்களை உணவருந்தச் செய்து அவர்களை யாக மண்டபத்தில் அமர்த்த வேண்டும்" என்றான்.

அர்ஜுனன் சரி என்று தலையை ஆட்டினான்.

"பீமா! துரியோதனனையும் அவன் தம்பிகளையும் நீதான் வரவேற்க வேண்டும்"

"நானா?" என்றான் பீமன் அதிருப்தியுடன்.

"ஆமாம். அவர்களை உணவருந்த வைத்தபின், துரியோதனனிடம் கஜானா பொறுப்பைக் கொடுத்து யாகத்துக்கு வருபவர்களுக்கு தானங்கள் அளிக்கும் பணியை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்" என்றான் யுதிஷ்டிரன்.

"நமக்குக் கெடுதல் நினைப்பவன் துரியோதனன். அவனிடம் ஏன் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்?" என்றான் அர்ஜுனன்.

"காரணமாகத்தான்!" என்றான் யுதிஷ்டிரன். "பீஷ்மர், துரோணர், விதுரர், நமது பிற உறவினர்கள் ஆகியோரை நான் வரவேற்று உபசரிக்கிறேன்"

"எனக்கும் சகாதேவனுக்கும் என்ன பணி?" என்றான் நகுலன்.

"நீங்கள் இருவரும் உணவு மண்டபத்தில் இருந்தபடி எல்லோரையும் நன்கு உபசரித்து உணவருந்த வைத்து அவர்கள் திருப்தி அடையும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். உணவளிக்கும் விஷயத்தில் எந்தப் பாரபட்சமும் இருக்கக் கூடாது. பந்தியில் அமர்ந்திருக்கும் அனைவருமே அதிதிகளாகக் கருதப்பட்டு சமமாகப் போற்றப்பட வேண்டியவர்கள்."

யாகம் முடிந்து அனைவரும் விடைபெற்ற பின், இரவில் பாண்டவர்கள் ஐவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

"யாகம் சிறப்பாக நடந்து முடிந்தது" என்றான் யுதிஷ்டிரன்.

"நீங்கள் செய்த ஏற்பாடுகள்தான் காரணம் அண்ணா!" என்றான் சகாதேவன்.

"உணவு மண்டபத்தில் இருந்தபடி விருந்தினர்களை உபசரித்தது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது" என்றான் நகுலன்.

"மன்னர்களை நான் கவனித்துக் கொண்டதில் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி" என்றான் அர்ஜுனன்.

"பீஷ்மர், துரோணர், விதுரர், கிருபர் முதலியோரும் நம் உபசாரத்தினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்" என்றான் யுதிஷ்டிரன்.

சற்று நேரம் மௌனம் நிலவியது.

"நீ ஒன்றுமே சொல்லவில்லையே, பீமா?" என்றான் யுதிஷ்டிரன்.

"சொல்வதற்கு என்ன இருக்கிறது? துரியோதனனுக்கு மிகவும் மகிழ்ச்சிதான். நம் கஜானாவைக் காலி செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் அதைச் சும்மா விடுவானா அவன்? வந்தவர்கள் எல்லோருக்கும் வாரி வாரிக் கொடுத்து நம் கஜானாவையே காலி செய்து விட்டான்" என்றான் பீமன் எரிச்சலுடன்.

"யாகம் செய்வதை விட தானம் செய்வதுதானே சிறந்தது? நம்மில் யாராவது  தானம் செய்திருந்தால் எங்கே கஜானா காலியாகி விடுமோ என்று பயந்து சிறிதளவே தானம் செய்திருப்போம்! துரியோதனன் நம் கஜானாவைக் காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவருக்கும் வாரிக் கொடுத்தான். அவன் தீய நோக்கத்துடன் செய்தாலும் அவன் செய்த தானத்தின் பயன் நமக்குத்தான் கிடைக்கும்! இதை மனதில் கொண்டுதான் துரியோதனனிடம் தானம் கொடுக்கும் பொறுப்பைக் கொடுக்கச் சொன்னேன்" என்றான் யுதிஷ்டிரன்.

"அண்ணா! யுத்தத்தில் வியூகம் வகுப்பது பற்றி துரோணாச்சாரியர் நம் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த யாகத்துக்கே நீங்கள் ஒரு வியூகம் வகுத்துச் செயல்பட்டிருக்கிறீர்கள். உங்கள் வியூகத்தை விளக்க முடியுமா?" என்றான் சகாதேவன்.

"சகாதேவா! நீ அறியாதது இல்லை. நம் ஐவரில் நீயே ஞானத்தில் சிறந்தவன். ஆயினும் ஐவரில் வயதில் சிறியவன் என்பதால் அடக்கத்துடன் ஏதும் அறியாதவன் போல் கேட்கிறாய்! சொல்கிறேன். இன்று யாகத்துக்கு வந்தவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நண்பர்கள், பகைவர்கள், நடுநிலையாளர்கள்.

"முதல் வகை நம் உறவினர்கள், ஆச்சாரியர்கள் ஆகியோர். இவர்களை, நம் ஐவரில் மூத்தவனான நானே கவனிப்பதுதானே அவர்களுக்கு உகந்ததாக இருக்கும்?

"இரண்டாவதாக நடுநிலையாளர்களான மன்னர்கள். அவர்களில் பலரை ராஜசூய யாகத்துக்காக நாம் போரில் வென்றிருந்தாலும், இது வழிவழியாக வரும் வழக்கம் என்பதால் அவர்கள் நம் மீது விரோதம் பாராட்டியிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்களுக்கு நம்மிடம் நட்பும் இருக்காது. அவர்களை நண்பர்களாக மாற்றிக் கொள்ள நாம் முயல வேண்டும், குறைந்தது அவர்கள் நமக்கு விரோதிகளாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் அவர்களைப் போரில் வென்ற அர்ஜுனனைக் கொண்டே அவர்களை உபசரித்து மரியாதையாக நடத்தி, அவர்களை மனம் குளிரச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

"மூன்றாவது வகை நம் பகைவர்கள். துரியோதனனையும் அவன் தம்பிகளையும் நாம் பகைவராக நினைக்காவிட்டாலும், அவர்கள் நம்மை அப்படித்தானே நினைக்கிறார்கள்? ஆயினும் நம் விருந்தினர்களாக வந்திருப்பவர்களை நாம் மதித்து நடந்து, அவர்களது கௌரவத்துக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துரியோதனனுக்கு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்ததன் மூலம் நாம் அவனை கௌரவித்தோம். அத்துடன் அவன் அந்தப் பொறுப்பில் இருந்ததால் நமக்கு என்ன தீங்கு செய்யலாம் என்ற சிந்தனையில் ஈடுபட அவனுக்கு நேரமில்லாமல் போய் விட்டது. அவன் தாராளமாக தானம் செய்ததும் நமக்கு நன்மை பயக்கக் கூடிய செயலாக இருந்தது."

"அண்ணா! நீங்கள் என்னை விட வயதில் மட்டும் பெரியவர் இல்லை, அறிவிலும்தான். அத்துடன் அறம் எது என்பதை உங்களை விடச் சிறப்பாக அறிந்தவர் வேறு யார் இருக்க முடியும்?" என்றான் பீமன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

பொருள்:  
பகைவர், அயலார், நண்பர் என்ற மூன்று பிரிவினரிடமும் அவரவர்களுக்கு உரிய முறையில் நடந்து கொள்வதே நடு நிலைமை என்று கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 112

குறள் 110
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


















No comments:

Post a Comment