About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, December 9, 2017

112. சுந்தரலிங்கத்தின் சொத்து

"ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி - தான் போய்
விழுமாம் கழனிப் பானையில் துள்ளி!" என்றாள் தனபாக்கியம்.

தன் அம்மா ஆதங்கத்துடன் இப்படிப் பேசுவதை முருகையன் பலமுறை கேட்டிருக்கிறான்.

அவன் அப்பா சுந்தரலிங்கம் ஊரில் பொருளாதார நிலையில் மிகச் சாதாரணமான மனிதர். சிறிதளவு நிலத்தை வைத்துக்கொண்டு அதில் வரும் குறைந்த வருவாயில் எப்படியோ குடும்பத்தை நடத்தி வந்தவர்.

ஆனால் ஊரார் அவரை ஒரு நீதிமான் என்று மதித்தார்கள். அவருடைய ஊர் மக்கள் மட்டுமின்றி, சுற்று வட்டத்தில் இருந்த பல ஊர்களிலிருந்தும் பலர் தங்கள் வழக்குகளை அவரிடம் கொண்டு வருவார்கள்.  குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள், கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றத் தவறியது, வரப்புத் தகராறு, தண்ணீர்ப் பங்கீடு என்று பலவிதமான வழக்குகளுக்கும் அவரிடம் நீதி கேட்டு வருவார்கள்.

இரு தரப்பினர் கூறுவதையும் பொறுமையாகக் கேட்டு, அவர்களிடம் கேள்விகள் கேட்டு, விளக்கங்கள் பெற்று, நியாயங்களை எடுத்துச் சொல்லி அவர் கொடுக்கும் தீர்ப்பை அநேகமாக எல்லோருமே ஏற்றுக் கொள்வார்கள். அவருடைய நியாயமான அணுகுமுறையில் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. அவர் தீர்ப்பை ஏற்காமல் நீதிமன்றங்களை நாடியவர்கள் மிகச் சிலரே.

இப்படி ஊருக்கெல்லாம் நியாயம் சொல்பவர், தன் அண்ணன் தன்னை ஏமாற்றித் சொத்தைப் பிடுங்க அனுமதித்து விட்டாரே என்பதுதான் தனபாக்கியத்தின் ஆதங்கம்.

சுந்தரலிங்கம் அவர் பெற்றோருக்கு இரண்டாவது மகன். அவருக்குப் பத்து வயது இருக்கும்போது ஊரில் அவர்களுடைய தூரத்துச் சொந்தக்காரர் ஒருவருக்குக் கொள்ளி போடப் பிள்ளை இல்லை என்பதால் அவர் இறக்கும் தருவாயில் சுந்தரலிங்கத்தை அவருக்குத் தத்துக் கொடுத்தார் அவர் அப்பா.

இது பெயரளவுக்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். தத்துக்  கொடுத்தபிறகும் சுந்தரலிங்கம் தன் பெற்றோருடன்தான் இருந்தார். அவருடைய சுவீகாரத் தந்தை இறந்ததும் அவருக்குக் கொள்ளி போட்டதுடன் அந்த பந்தம் முடிந்து விட்டது. அவருடைய சுவீகாரத் தந்தைக்கு இருந்த சிறிதளவு நிலமும், ஒரு சிறிய வீடும் அவரது மரணத்துக்குப் பின் சுந்தரலிங்கத்துக்குச் சொந்தம் என்று ஆனது மட்டும்தான் அவருக்குக் கிடைத்த சிறிய நன்மை.

சுந்தரலிங்கத்தின் அண்ணன் குணசேகரன் எஸ் எஸ் எல் சி முடித்த இரண்டு வருடங்களில் அரசாங்க வேலை கிடைத்து தஞ்சாவூருக்குப் போய் விட்டார். சுந்தரலிங்கம் கிராமத்திலேயே இருந்து தன் தந்தையுடன் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டார்.

இருவருக்கும் திருமணம் ஆன சில வருடங்களில் அவர்களுடைய பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக மறைந்து விட்டனர்.

ஊரில் ஒரு சில பிரச்னைகளை சுந்தரலிங்கம் சுமுகமாகத் தீர்த்து வைத்ததால், பலரும் தங்கள் வழக்குகளை அவரிடம் கொண்டு வர, வழக்குகளை நியாயமாகவும், சமூகமாகவும் தீர்த்து வைக்கக் கூடியவர் என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. அவரது புகழ் சுற்று வட்டாரங்களிலும் பரவியது.

இதற்காக அவர் பணம் எதுவும் வாங்குவதில்லை. இரு தரப்பினரும் தாங்கள் விரும்பிய தொகையை ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கலாம் என்று அவர் கூறியதை ஏற்றுக்கொண்டு கோயில்களுக்கு அவர்கள் கொடுத்த நன்கொடையால் ஊர்க்கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள், திருவிழாக்கள் என்று சிறப்பாக இருந்தன..

தஞ்சையிலேயே வாசம் என்று ஆகி விட்ட குணசேகரனுக்கு யாரோ சொல்லிக் கொடுத்த யோசனையின் பேரில் அவர் தன் தம்பிக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். சுந்தரலிங்கம் சுவீகாரம் போய் விட்டதால் அவர்கள் தந்தையின் சொத்துக்களில் அவருக்கு உரிமை கிடையாது என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுந்தரலிங்கம் சிறிது கூடத் தயங்காமல் தன் தந்தையின் சொத்துக்களில் தனக்கு உரிமையில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டார். ஊரில் இருந்த சில விஷயம் அறிந்தவர்கள் "இதெல்லாம் சட்டப்படி செல்லாது. குணசேகரன் கோர்ட்டுக்குப் போனாலும் வழக்கு முடியப் பல வருடங்கள் ஆகும். உங்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும். ஒருவேளை தீர்ப்பு உங்களுக்கு எதிராக அமைந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்" என்று ஆலோசனை கூறினர்.

ஆனால் சுந்தரலிங்கம் கேட்கவில்லை. "எப்ப என் அண்ணன் இப்படி நினைக்கிறானோ, அதுக்கப்பறம் எனக்கு இந்த சொத்து எதுக்கு?" என்று சொல்லி விட்டார்.

அதற்குப்பிறகு ஊருக்கு வந்த குணசேகரன் சொத்துக்கள் அனைத்தையும் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டபின் நிலங்களை இன்னொருவரிடம் குத்தகைக்கு விட்டு விட்டார்.

சுந்தரலிங்கத்துக்கு அவருடைய சுவீகாரத் தந்தையின் வீடும், சிறிதளவு நிலமும் மட்டுமே சொந்தம் என்று ஆயிற்று. சுந்தரலிங்கம் தன் தந்தையின் பெரிய வீட்டைக் காலி செய்து விட்டுத் தன் சுவீகாரத் தந்தையின் பழைய, சிறிய, உடைந்த வீட்டுக்குக் குடி பெயர்ந்தார்.

குடும்பத்தை நடத்துவதே சிரமம் என்று ஆகி விட்ட நிலையில், கடன் வாங்கிப் பெண்ணின் திருமணத்தை எப்படியோ நடத்தி விட்டார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவரது மகன் முருகையனின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது.

"ஊர்ச்சாமிக்கெல்லாம் சம்பாதிச்சுக் கொடுப்பாரு ஒங்கப்பா. ஆனா ஊர்ச்சாமிக எல்லாம் ஒங்கப்பாவை ஓட்டாண்டியாத்தான் வச்சிருக்காங்க" என்று முருகையனிடம் அங்கலாய்த்துக் கொள்வாள் தனபாக்கியம்.

"அண்ணனுக்கு டி பி வந்து சிங்கிப்பட்டி டி பி ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்களாம். போய்ப் பாக்கணும்" என்றார் சுந்தரலிங்கம்.

"கண்டிப்பாப் போய்ப் பாக்கத்தான் வேணும்! எவ்வளவு நல்லது பண்ணியிருக்காரு ஒங்களுக்கு!" என்றாள் தனபாக்கியம் எகத்தாளமாக.

அடுத்த சில நாட்களுக்கு வெளியூர்களிலிருந்து சிலர் அவரிடம் மத்தியஸ்தத்துக்கு வருவதாக முன்பே சுந்தரலிங்கத்துக்குத் தகவல் தெரிவித்திருந்ததால், அவரால் உடனே தன் அண்ணனைப் போய்ப் பார்க்க முடியவில்லை.

நான்கு நாட்கள் கழித்துப் போகலாம் என்று அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் எதிர்பாராமல் அவர் அண்ணன் மகன் சண்முகம் அவரைத் தேடிக்கொண்டு ஊருக்கு வந்து விட்டான்.

முதலில் தன் அண்ணனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று சுந்தரலிங்கம் பயந்தார். ஆனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில்தான் இருப்பதாக சண்முகம் சொன்னான்.

"நான் வந்த விஷயம் வேற..." என்று தயங்கியபடி ஆரம்பித்தான் சண்முகம். "அப்பாதான் என்னை இங்க அனுப்பிச்சாரு... மரணப் படுக்கையில கிடக்கறப்பதான் எங்கப்பாவுக்கு தான் பண்ணின தப்பு புரிஞ்சிருக்கு. ஒங்களுக்குப் பண்ணின துரோகத்தை நினைச்சுப் புலம்பிக்கிட்டே இருக்காரு. ஒங்க சொத்தையெல்லாம் ஒங்க பேரிலே மாத்தி எழுதிக் கொடுக்கறதுக்குத்தான் பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்து என்னை அனுப்பியிருக்காரு. நான் பத்திரமெல்லாம் எழுதிக் கொண்டு வந்திருக்கேன். நாளைக்கே ரிஜிஸ்தர் ஆஃபீஸ் போய் பத்திரத்தை ரிஜிஸ்தர் பண்ணிடறேன். நீங்க அப்பாவை மன்னிச்சாத்தான் அவரு நிம்மதியா சாவாரு" என்றான்.

"என்னப்பா! இப்படியெல்லாம் சொல்றே! என் அண்ணனை நான் எப்பவுமே தப்பா நினைச்சதில்ல" என்றார் சுந்தரலிங்கம்.

'நல்லவேளை, நாங்களும், எங்க புள்ளைங்களும் வறுமையில விழாம கடவுள்  காப்பாத்திட்டாரு' என்று நினைத்துக் கொண்டாள் தனபாக்கியம்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

பொருள்:  
நடு நிலைமையோடு நடந்து கொள்பவனின் செல்வம் அழியாமல் அவன் வாரிசுகளுக்கும் பயனளிக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 111
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

























No comments:

Post a Comment