About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, August 20, 2017

93. மெல்லப் பேசுங்கள்!

மாதவனுக்கு நீண்ட நாட்களாக ஒரு குறை உண்டு. அவன் பேசினால் யாரும் கவனிப்பதில்லை என்பதுதான் அது.

அலுவலகத்தில் அவன் ஒரு குழுவை வழி நடத்துபவன். அவன் குழுவில் அவனைத் தவிர 5 பேர் இருந்தார்கள். அவ்வப்போது அவர்களிடம் தனித்தனியாகவும், அனைவரையும் கூட்டி வைத்தும் பேச வேண்டி இருந்தது.

அவன் பேசும்போது அவன் குழுவில் சிலர் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அல்லது அவனை இடைவெட்டிப் பேசுவார்கள். அல்லது அவன் பேசும் விஷயத்துக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம் பற்றிக் குறுக்கே பேசுவார்கள்.

அதிகாரத்தினால் அவர்களை மிரட்ட முடியாது என்று அவனுக்குத் தெரியும்.

சில சமயம் அவன் ஒரு குறிப்பிட்ட வேலையைக் குறிப்பிட்ட விதத்தில் செய்யச் சொன்னால், அதைச் சரியாகக் கேட்டுக் கொள்ளாமல் வேறு விதமாகச் செய்வார்கள். கேட்டால் "நீங்க அப்படியா சொன்னீங்க? சாரி" என்பார்கள்.

வேறு வழியின்றி, முக்கியமான செய்திகளை மின்னஞ்சல் மூலம் அனுப்ப ஆரம்பித்தான். தான் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பேசினாலே கேட்கக்கூடிய தூரத்தில் இருப்பவர்களுக்கு, வாயால் சொல்ல வேண்டிய செய்தியை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டியதை நினைக்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் வேறு வழி தெரியவில்லை.

அதற்குப் பிறகு அவன் ஏதாவது சொன்னால் அவர்கள் "மெயில் அனுப்பிடுங்களேன்" என்று பதில் சொல்ல ஆரம்பித்தது அவனுக்கு மேலும் எரிச்சலூட்டியது.

வன் அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்திருந்த ஒரு ஆலோசகர் இது போன்ற தகவல் தொடர்புப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கொடுப்பார் என்று பெயர் பெற்றிருந்தார். அவரைத் தேடித் சென்றான்.

அவன் தன் பிரச்னையைச் சொல்ல ஆரம்பித்ததுமே அவர் குறுக்கிட்டு, "மாதவன்! உங்கள் பிரச்னை என்னன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு? ஏன் முகத்தை இப்படிக் கடுகடுன்னு வச்சுக்கிட்டிருக்கீங்க?" என்றார்.

"என் மூஞ்சி இயல்பாகவே அப்படித்தான் சார் இருக்கும்!" என்றான் மாதவன் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு.

"இப்ப சிரிச்சீங்களே, அது மாதிரி எப்பவுமே இருக்கப் பழகுங்க."

" எப்படிப் பழகறது?"

அவர் சில பயிற்சிகளைச் சொன்னார். "இது மாதிரி ஒரு மாசம் பிராக்டீஸ் பண்ணுங்க. அப்புறம் உங்க முகத்தில எப்பவுமே இயல்பா ஒரு சிரிப்பு இருக்கும். அப்புறம் உங்க டீம் மெம்பர்ஸ் உங்க பேச்சை கவனிக்க ஆரம்பிப்பாங்க"

ரண்டு மாதம் கழித்து மாதவன் மீண்டும் ஆலோசகரைச் சந்தித்தான். "இப்ப எப்படி இருக்கு?" என்றார் அவர்.

"முன்னை விடப்  பரவாயில்ல. ஆனா இப்பவும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்  அவங்க கவனம் வேற பக்கம் போயிடுது" என்றான் மாதவன்.

"சரி பார்க்கலாம்" என்றவர், தன்னுடைய உதவியாளர்கள் 4 பேரை அழைத்தார். "இவங்கதான் உங்க டீம் மெம்பர்ஸ்ன்னு வச்சுக்கங்க. நீங்க உங்க டீம் மெம்பர்ஸுக்கு, அவங்க செய்ய வேண்டிய வேலையைச் சொல்ற மாதிரி இவங்க கிட்ட சொல்லுங்க" என்றார்.

மாதவன் அவர்களிடம் பேசினான். ஆலோசகர் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டு கவனித்தார். 15 நிமிடம் கழித்து, "போதும்"என்று சொல்லி, தன் உதவியாளர்களை அவர்கள் இருக்கைகளுக்குப் போகச் சொன்னார்..

"மாதவன்! நான் கவனிச்சதை வச்சு ஒரு விஷயத்தைச் சொல்றேன். நீங்க எதையும் சரியாகச் செய்யணும்னு நினைக்கிறவர். அதனால நீங்க சொல்றதை மத்தவங்க சரியாப் புரிஞ்சுக்கலேன்னா உங்களுக்குக்  கோபம் வருது. உங்க கோபம் உங்க வார்த்தைகள்ள வெளிப்படுது.."

"சார்! நான் இவங்ககிட்ட கோபமா எதுவும் பேசலியே?" என்றான் மாதவன்.

"நீங்க கோபமாப் பேசணும்னு நினைக்கல. ஆனா உங்க பொறுமையின்மையும் கோபமும் உங்களை அறியாம உங்க வார்த்தைகளிலும் உங்க தொனியிலும் வெளிப்படுது. கேக்கறவங்களுக்கு இது பிடிக்காது. அவங்க காயப்பட்டதா உணர்வாங்க. அதுக்கப்பறம் அவங்களை அறியாமலேயே  உங்க பேச்சை கவனிக்கறதை நிறுத்திடுவாங்க."

"நான் என்ன செய்யணும்?'

"நீங்க ரெண்டு விஷயங்கள்ள உங்களை மாத்திக்க வேண்டியிருக்கு. நீங்க முதல் தடவை வந்தபோதே நான் இந்த மாதிரி ஒரு மாக் செஷன் வச்சு உங்க பிரச்னையை முழுமையாப் புரிஞ்சுக்கிட்டிருக்கணும். அவசரப்பட்டு நீங்க மாத்திக்க வேண்டிய ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டு உங்களை அனுப்பிச்சுட்டேன்."

"சார்! நீங்க ஒரு நிபுணர். என்னை விடப்  பெரிய பதவியில இருக்கீங்க. ஆனா நீங்க எங்கிட்ட உங்க தவறைப் பத்திப் பேசறீங்க! "

"இனிமையாப் பேசப் பழகிட்டா, பணிவு தானாவே  வந்துடும். அல்லது பணிவா இருக்கப் பழகிக்கிட்டா, பேச்சிலே இனிமை தானா வந்துடும்!"

"கிரேட் சார்!"

"நீங்க என்ன செய்யணும்னு உங்களுக்குத் புரிஞ்சுடுச்சா?"

"எஸ் சார். நீங்க சொன்ன ரெண்டு விஷயங்கள். முகத்தை இனிமையா வச்சுக்கணும். இதுக்கு நான் பழகிக்கிட்டேன். ரெண்டாவது இனிமையாப்  பேசணும். இதையும் பழகிக்கறேன். ரொம்ப நன்றி சார்."

"குட். ஐ திங்க் யூ வில் சக்ஸீட் திஸ் டைம். உங்க பிரச்னை தீரலைன்னா ஒரு மாசம் கழித்து மறுபடி என்னை வந்து பாருங்க."

ஒரு மாதம் கழித்து மாதவன் மீண்டும் ஆலோசகரைப் பார்க்க வந்தான். ஆனால் இந்த முறை அவன் வந்தது அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக!

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
இன்சொ லினதே அறம்.

பொருள்:
மலர்ந்த முகத்துடன் நோக்கி, மனதிலிருந்து வரும் இன்சொற்களைப் பேசுவதே அறம்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 94
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















No comments:

Post a Comment