About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, February 1, 2018

126. ஆலய தரிசனம்

"எல்லாம் எடுத்துக்கிட்டியா?" என்றான் சரவணன்.

"எல்லாம்னா?" என்றாள் வனஜா எரிச்சலுடன்.

"நாம கடையில வாங்கி வச்ச பிஸ்கட், நொறுக்குத்தீனி வகையறாக்களைத்தான் சொல்றேன்."

"நாம கோவிலுக்குப் போறமா, பிக்னிக்குக்குப் போறமான்னு தெரியல!"

"கோவிலுக்குப் போறோம்கறதுக்காகக் காலி வயத்தோட போக முடியுமா? நாம டூரிஸ்ட் பஸ்ல போறோம். அவன் எப்ப சாப்பாடு போடறானோ அப்பத்தான். அதுவரையிலும் பசியைத் தாங்கிக்கிட்டு இருக்கணுமா என்ன?"

"இந்த மாத நாவல் எல்லாம் எதுக்கு எடுத்து வச்சிருக்கீங்க?"

"போரடிச்சா படிக்கத்தான்!"

"அதான் செல்ஃபோன்ல பாட்டு, கேக்கறதுக்கு இயர்ஃபோன் எல்லாம் இருக்கே!"

"பாட்டைக் கேட்டுக்கிட்டே படிக்கலாமே! சிப்ஸைக் கொறிச்சுக்கிட்டே பாட்டைக் கேட்டுக்கிட்டு, சுவாரஸ்யமா ஒரு கதையும் படிச்சுக்கிட்டிருந்தா எவ்வளவு ஆனந்தமா இருக்கும்!"

:இன்னும் ரெண்டை விட்டுட்டீங்களே!"

"எதை?"

"காதுக்குப் பாட்டு. கண்ணுக்குப் புத்தகம். வாய்க்கு சிப்ஸ். இன்னும் ரெண்டு புலன் தீனி இல்லாம இருக்கேன்னு கேட்டேன்!"

"சிப்ஸிலியே வாசனை இருக்கு. சொகுசான சீட்ல உக்காந்திருந்தா உடம்புக்கும் சுகம் கிடைச்சுடுது. அப்புறம் என்ன?"

"ஆகக்கூடி, கோவிலுக்குப் போனாக் கூட ஐம்புலனுக்கும் தீனி போடாம இருக்க முடியாது உங்களால!"

"ஐம்புலனுக்கும் தீனி போட்டாத்தான் மனசால நல்ல விஷயங்களைப் பத்தி நினைக்க முடியும்!"

ஸ்ஸில் அவர்களுடன் வந்த பலரும் சரவணனைப் போலவேதான் இருந்தனர். பஸ் கிளம்பியதுமே பலரும் ஹெட்ஃபோன்களை மாட்டிக்கொண்டு, தீனிப் பொட்டலங்களைப் பிரிக்கத் தொடங்கினர்.

அவர்கள் குழுவில் ஒரு இளைஞன் மட்டும் தனியே வந்திருந்தான். அவர்கள் சீட்டுக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி வந்தான்.

தங்கும் விடுதிக்கு வந்ததும், அறை கொடுக்கப்படுவதற்காக விடுதியின் முகப்பில் சற்று நேரம் அனைவரும் அமர்ந்திருந்தனர். அந்த இளைஞன் விடுதி நிர்வாகியிடம், "சார் ஒரு ஃபோன் பண்ணணும். பக்கத்தில பூத் ஏதாவது இருக்கா?" என்றான். 

அவர் "இங்கியே பண்ணிக்கங்க" என்றதும் அங்கிருந்த ஃபோனில் பேசினான். தன் பெற்றோர்களிடம் சுருக்கமாகத் தகவல் சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டான்.

அவன் ஃபோன் பேசி விட்டு வந்ததும், வனஜா அவனிடம், "ஏம்ப்பா, தனியாவா வந்திருக்க?" என்றாள்.

"ஆமாம் ஆன்ட்டி. அப்பா அம்மா ரெண்டு மாசம் முன்னாடி இதே டூருக்குத்தான் போயிட்டு வந்தாங்க. அவங்க சொன்னதனால நானும் போயிட்டு வரலாம்னு வந்திருக்கேன்."

உன் மொபைல் என்ன ஆச்சு? சார்ஜ் இல்லியா?"

"எடுத்துக்கிட்டு வரல!"

"ஏன்? மறந்துட்டியா?"

"இல்லை. இந்தக் கோவில் டூர் போற ஒரு வாரம் மட்டும் செல்ஃபோன் இல்லாம இருக்கலாம்னு பாத்தேன். செல்ஃபோன் இருந்தா ஏதாவது கால் வரும். அதில இருக்கிற ஃபோட்டோ, வீடியோ, பாட்டுன்னு ஏதாவது பாத்துக்கிட்டு, கேட்டுக்கிட்டு இருக்கத் தோணும். கோவிலுக்குப் போகும்போதாவது மத்த ஈடுபாடுகளைக் குறைச்சுக்கிட்டுக் கடவுள் சிந்தனையோடு இருக்கலாம்னுட்டுத்தான்!"

அவனுடைய சிறிய பையைப் பார்த்து விட்டு, "இவ்வளவுதான் உன் லக்கேஜா?" என்றாள்.

"ஆமாம். ஜாஸ்தி எடுத்துக்கிட்டு வரல, ரெண்டு மூணு வேஷ்டி சட்டைதான். வேஷ்டியை ராத்திரி ரூம்ல தங்கும்போது தோய்ச்சு உலர்த்திட்டுக் காலையில கட்டிக்கலாம்னு இருக்கேன். நிறைய டிரஸ் இருந்தா இதைப் போட்டுக்கலாமா, அதைப் போட்டுக்கலாமான்னு சிந்தனை போகும். அதெல்லாம் எதுக்குன்னுட்டுத்தான்."

வனஜா தன் கணவனைப் பார்த்தாள். அவன் இயர்ஃபோனை மாட்டிக்கொண்டு ஆனந்தமாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 
எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள்:  
ஆமை தன் உடல் உறுப்புக்களைத் தன் மீதுள்ள ஓட்டுக்குள் அடைத்து வைத்திருப்பது போல், இந்த ஒரு பிறவியில் நம் ஐம்புலன்களையும் அடக்கி வைத்தால், அது நமக்கு ஏழு பிறவிகளுக்கும் நன்மை பயக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

  குறள் 125 
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்






















No comments:

Post a Comment