About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, January 30, 2018

125. காடாறு மாதம்!

"பி.ஈ படிச்சுட்டு அவன் அவன் அம்பதாயிரம், ஒரு லட்சம்னு சம்பளம் வாங்கறான். நமக்கு என்னடான்னா பிச்சை போடற மாதிரி பத்தாயிரம் ரூபா ஸ்டைபெண்ட் கொடுக்கறாங்க. என்ன பொழைப்புடா இது?" என்று அலுத்துக் கொண்டான் சுகுமார்.

"இது ட்ரெயினிங் பீரியட்தானே? தங்க இடம் கொடுத்து, சாப்பாடு போட்டு, அதுக்கு மேல பத்தாயிரம் ரூபா கொடுக்கறாங்களே, அது போதாதா?" என்றான் ராம்குமார்.

"உன்னை மாதிரி பிச்சைக்காரனுக்கெல்லாம் இது பெரிய தொகையா இருக்கலாம். என்னை மாதிரி ராயல் ஃபேமிலில பொறந்து வளர்ந்தவங்களுக்கெல்லாம் இது ஒரு பிச்சைக்காசுதான். தண்ணி அடிக்கறதை விடு, சிகரெட்டுக்குக் கூடப் பத்தாதே இது!" என்றான் சுகுமார்.

"ஆறு மாசத்துக்குத்தானே இந்த ஸ்டைபெண்ட்? அப்புறம்தான் அம்பதாயிரம் சம்பளம் வருமே நமக்கு?" என்றேன் நான் சமாதானமாக, ராம்குமாரைப் பார்த்தபடி.

எங்கெங்கோ படித்து விட்டு, இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபின் அறிமுகம் ஆனவர்கள் நாங்கள். இந்த நிலையில் சுகுமார் ராம்குமாரைப் பிச்சைக்காரன் என்று தூக்கி எறிந்து பேசியது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் ராம்குமார் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதாது போல் மௌனமாக இருந்து விட்டான்.

"இந்தக் காட்டில ஒரு ட்ரெயினிங் ஸ்கூல் கட்டி, அதில நம்மளைத் தங்க வச்சிருக்காங்க. ஆறு மாசம் ஜெயில் வாழ்க்கைதான் நமக்கு. ஞாயித்துக்கிழமை ஒரு நாள்தான் ஜெயில் கைதிகள் பரோல்ல போற மாதிரி வெளியில போயிட்டு வர முடியும்!" என்று புலம்பினான் சிவசு என்கிற சிவசுப்பிரமணியன்.

று மாதங்கள் ஓடி விட்டன. எங்கள் பயிற்சிக் காலம் முடிந்தது. விடுதியில் கடைசி நாள். அனைவரும் ஒன்று கூடி இருந்தோம்.

"ஆறு மாசத்துல அறுபதாயிரம் ரூபா மொத்த சம்பளம்! ஒரே மாசத்துல சம்பாதிக்க வேண்டிய தொகை இது. என்ன செய்யறது? நீங்கள்ளாம் என்ன பண்ணினீங்களோ தெரியாது. நான் மாசா மாசம் எங்கப்பாகிட்டேயிருந்து செலவுக்குப் பத்தாயிரம் ரூபா வாங்கினேன்!" என்றான் சுகுமார்.

"நான் அவ்வளவு மோசம் இல்ல. அறுபதாயிரம் ரூபாயில ஒரு இருபதாயிரம் ரூபாய் மிச்சம் பிடிச்சிருக்கேன்" என்றேன் நான்.

ஒவ்வொருவரும் தாங்கள் சேமித்த தொகை எவ்வளவு என்று சொன்னார்கள். கடைசியாக ராம்குமார் என்ன சொல்லப் போகிறான் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"நானும் கொஞ்சம் மிச்சம் பிடிச்சிருக்கேன்" என்றான் ராம்குமார்.

"கொஞ்சம்னா, எவ்வளவு?"

"இங்க செலவு என்ன இருக்கு? லாண்டரி கூட ஃப்ரீதானே? மாசம் ஆயிரம் ரூபா செலவானா அதிகம். மீதி சுமார் அம்பத்தஞ்சாயிரம் ரூபா அப்படியே பேங்க் அக்கவுண்ட்டிலதான் இருக்கு!" என்றான் ராம்குமார்.

"கஞ்ச மகாப் பிரபுன்னு உனக்குப் பட்டம் கொடுக்கலாம்டா! உனக்கெல்லாம் எதுக்கு சம்பளம்? சாப்பாடு போட்டுட்டா போதும், நாய் மாதிரி உழைக்கத் தயாரா இருப்ப போலருக்கு!" என்றான் சுகுமார் எரிச்சலுடன்.

"சுகுமார்! திஸ் இஸ் டூ மச்! ராம்குமார் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருக்கலாம். அதனால சிக்கனமா இருக்கறது அவனுக்கு இயல்பா இருக்கலாம். இதுவரையிலும் அவன் தன் குடும்பத்தைப் பத்திஎதுவுமே சொன்னதில்லை. அவனை மட்டமாப் பேசறது தப்பு" என்றேன் நான்.

"நான் ஒண்ணும்  தப்பா சொல்லலியே! அவனுக்குப் பணமே அவசியம் இல்லேன்னு சொன்னேன். அவ்வளவுதான்" என்றான் சுகுமார்.

"சரி. ஹாஸ்டல் வாழ்க்கை இன்னியோட முடிஞ்சு போச்சு. இனிமே நாம சென்னையிலதான் தங்கப் போறோம். என் வீடு மாம்பலத்தில இருக்கு. உன் வீடு எங்கே இருக்கு?" என்றேன் ராம்குமாரிடம்.

"எம் ஆர் சி நகர்" என்றான் ராம்குமார்.

"அது மேட்டுக்குடி ஏரியா ஆச்சே! அங்க எங்கே தங்கப் போறே நீ? ஐயப்பன் கோவில் வாசலிலேயா?" என்றான் சுகுமார் இளக்காரமாக.

"உன் அப்பா என்ன செய்யறாரு?" என்றேன் நான்.

"ஒரு கம்பெனியில வேலை செய்யறாரு?"

"என்ன வேலை? எந்தக் கம்பெனி?"

"மேனேஜிங் டைரக்டர். நம்ப கம்பெனியிலதான்!" என்றான் ராம்குமார், அமைதியாக.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பொருள்:  
பணிவு என்பது அனைவருக்கும் ஏற்ற பண்பு. அதிலும் செல்வம் படைத்தவர்களிடம் இருக்கும் பணிவு அவர்களுக்கு இன்னொரு செல்வமாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 124 
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்

















No comments:

Post a Comment