About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, October 30, 2017

104. கூடுதல் வட்டி

கைலாசம் வீட்டுக்கு அவரது உறவினர் சம்பந்தம் வந்தபோது கைலாசத்தின் அருகில் அமர்ந்து ஒரு இளைஞன் பேசிக் கொண்டிருந்தான்.

"யார் இவரு? நான் பார்த்ததில்லையே?" என்றார் சம்பந்தம்.

"எனக்குத் தெரிஞ்சவர்" என்றார் கைலாசம்.

உடனே அந்த இளைஞன், "சார்தான் எனக்கு வழிகாட்டி. அவர் எனக்கு செஞ்ச உதவியை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்" என்றான் சம்பந்தத்திடம்.

"அப்படியா? என்ன உதவி செஞ்சாரு?" என்றார் சம்பந்தம்.

"அதைப் பத்தி இப்ப என்ன? சுகுமார், இவரு என் சொந்தக்காரரு. நாம அப்பறம் பாக்கலாம்" என்று அந்த இளைஞனை வழியனுப்பி வைத்தார் கைலாசம்.

சுகுமார் விடைபெற்றுப் போனதும், "யாருப்பா இந்தப் பையன்? அப்படி என்ன உதவி செஞ்ச அவனுக்கு?" என்று கேட்டார் சம்பந்தம்.

"அது ஒண்ணுமில்ல" என்று ஆரம்பித்தார் கைலாசம்.

சில வருடங்களுக்கு முன் கைலாசம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு நிதி நிறுவனத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தார். மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்று வட்டிப்  பணத்தை வாங்கி கொள்ள வேண்டும். (நேரில் வர முடியாதவர்களுக்கும், வெளியூர்க்காரர்களுக்கும் தபால் மூலம் செக் அனுப்பும் முறை இருந்தது.)

இரண்டு மாதங்களுக்கு, சொன்ன தேதியில் வட்டித் தொகையைக் கொடுத்தார்கள். மூன்றாம் மாதத்திலிருந்து இன்னொரு நாள் வரச்  சொல்வது, அன்று போனால், வேறொரு நாள் வரச்சொல்வது என்று ஆரம்பித்தார்கள்.

ஒன்பது மாத முடிவில், ஆறு மாதங்களுக்குத்தான் வட்டி கொடுத்திருந்தார்கள். ஒரு மாத வட்டித்தொகையை வாங்க ஐந்தாறு முறை போக வேண்டியிருந்தது. கிடைக்கிற வட்டிப்பணத்தில் பெருந்தொகை போக்குவரத்துச் செலவுக்கே செலவழிந்து கொண்டிருந்தது.

ஒருமுறை வட்டித்தொகையை வாங்க அந்த அலுவலகத்துக்குப் போய்க் காத்திருந்தபோது, சுகுமாரைப் பார்த்தார் கைலாசம். அவன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவன் அங்கே பணம் டெபாசிட் செய்யத்தான் வந்திருக்கிறான் என்று ஊகித்த கைலாசம் அவனைத் தனியே வெளியில் அழைத்துப் போய்ப் பேசினார்.

"தம்பி, நான் இங்க அம்பதாயிரம் ரூபாய் பணம் போட்டுட்டுட்டு வட்டி வாங்கறத்துக்காக அலைஞ்சுக்கிக்கிட்டிருக்கேன். இங்க பணம் போடாதீங்க. பாங்க்கில போடுங்க. அதான் பாதுகாப்பு. நான் பண்ணின தப்பை நீங்களும் பண்ணாதீங்க" என்றார் கைலாசம்.

"பாங்க்கை விட இங்க அஞ்சு சதவீதம் வட்டி அதிகம் கொடுக்கறாங்களே!" என்றான் சுகுமார்.

"அது மாதிரி நெனைச்சுத்தான் நானும் இங்க பணத்தைப் போட்டுட்டுக் கஷ்டப்படறேன்" என்றார் கைலாசம்.

"பத்தாயிரம் ரூபாதான் சார் போடப் போறேன்? ரிஸ்க் எடுத்துத்தான் பாக்கறேனே!" என்றான் சுகுமார்.

"இப்படி நெனச்சுப் பாருங்களேன். பத்தாயிரம் ரூபாய்க்கு அஞ்சு பர்சன்ட் வீ தம் பாத்தா வருஷத்துக்கு ஐநூறு ரூபா ஜாஸ்தி கிடைக்கும். ஐநூறு ரூபாய்க்காக பத்தாயிரம் ரூபாயைப் பணயம் வெக்கணுமா?" என்றார் கைலாசம்.

சுகுமார் யோசித்தான். ஆயினும் பணத்தை அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்யும் எண்ணத்தில் அவன் வலுவாக இருந்ததாகத் தோன்றியது.

"சரி. ஒண்ணு பண்ணுங்க. ஒரு மாசம் கழிச்சு வந்து போடுங்க. அதுக்குள்ளே யோசிக்கறதுக்கு உங்களுக்கும் கொஞ்சம் நேரம் கிடைக்கும்" என்றார் கைலாசம்.

"ஒரு மாசம் பணத்தை வீட்டிலே வச்சிருந்தா வட்டி நஷ்டம் ஆகுமே!" என்ற சுகுமார் "சரி சார். நீங்க சொல்றதுக்காக ஒரு வாரம் கழிச்சு வரேன்" என்று கிளம்பியவன், "உங்க ஃபோன் நம்பர் கொடுங்க" என்று கேட்டு வாங்கிக் கொண்டு போனான்.

"ப்புறம் என்ன ஆச்சு?" என்றார் சம்பந்தம் சுவாரசியமாக.

"அதுக்கப்பறம் ரெண்டு மூணு நாள்ள அந்த நிறுவனத்தை மூடிட்டாங்க. பணம் டெபாசிட் பண்ணினவங்களுக்கெல்லாம் பணம் போச்சு."

"உனக்கும் போச்சா? எங்கிட்ட சொல்லவேயில்லையே!"

"அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முட்டாள்தனமா நடந்துக்கிட்டதை எல்லார்கிட்டயும் சொல்லிப் பெருமை அடிச்சுக்க முடியுமா என்ன? இப்ப இந்த சுகுமாரைப் பத்தி நீ கேட்டதால இதைச் சொன்னேன்."

"பாத்தியா? சுகுமாரைப் பத்திப் பேச ஆரம்பிச்சு ஒங்கிட்ட வந்து நின்னுட்டோம்! அவனைப் பத்தி சொல்லு."

"கம்பெனி மூடினது தெரிஞ்சதும் எனக்கு ஃபோன் பண்ணி அவனோட அனுதாபத்தைத் தெரிவிச்சான். நான் சொன்னதுக்காக ஒரு வாரம் தள்ளிப் போட்டதால அவனோட பணம் போகாம தப்பிச்சதுல அவனுக்கு எங்கிட்ட ஒரு பெரிய நன்றி உணர்ச்சி ஏற்பட்டுடுச்சு. என் வீட்டுக்கு வந்தான். அப்புறம் அடிக்கடி வருவான். அதுக்கப்புறம் அவனுக்கு நான் எந்த யோசனையும் சொன்னதில்ல. ஆனா என்னை ஒரு வழிகாட்டின்னே சொல்லிக் கிட்டிருக்கான். ஏன்னா, அதுக்கப்புறம் எந்த முடிவு எடுத்தாலும் நல்லா யோசிச்சுத்தான் செய்யணும்ங்கிற பழக்கம் அவனுக்கு வந்துடுச்சாம்!"

"நீ அவனுக்குச் செஞ்ச உதவி சின்னதா இருந்தாலும் அதோட மதிப்பை அவன் புரிஞ்சுக்கிட்டதாலதான் உன்கிட்ட விசுவாசமா இருக்கான்" என்றார் சம்பந்தம்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

பொருள்:  
ஒருவர் செய்த உதவி மிகச் சிறியதாக இருந்தாலும், அந்த உதவியைப் பெற்றவர் அதன் பயனை உணர்ந்தவராக இருந்தால் அதை மிகப் பெரிதாகக் கருதிப் போற்றுவார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















"

No comments:

Post a Comment