About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, April 22, 2017

75. தம்பியிடம் கற்ற பாடம்!

"என்னங்க, ரொம்ப நாள் கழிச்சு உங்க தம்பி தன் குடும்பத்தோட வராரு. ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு வீட்டில இருங்களேன்" என்றாள் ரேவதி.

"என்ன பொறுப்பு இல்லாம பேசற? நான் எப்படி லீவு போட முடியும்?" என்றான் குரு.

"லீவு போடாட்டாலும் பரவாயில்லை. இப்படி எரிஞ்சு விழாமலாவது இருங்க" என்று முணுமுணுத்தாள் ரேவதி.

"என்ன முணுமுணுக்கற?"

"ஒண்ணுமில்ல. சீக்கிரமா ஆஃபீசுக்குக் கிளம்புங்க. லேட்டாயிடப் போகுது!"

"ஆமாம். இன்னிக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. எல்லாரும் எனக்காகக் காத்துக்கிட்டிருப்பாங்க."

ரவு குரு வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் ஒரே உற்சாகம். குருவின் மகள் தீபா, மகன் கார்த்திக் இருவரும் தங்கள் சித்தப்பா குடும்பத்துடன் மிக நெருக்கமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

குருவைப் பார்த்ததும் இருவரும் சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டார்கள்.

தம்பி மனைவி கலாவையும், அவர்கள் மகன்கள் விச்சு, நரேஷ் ஆகிய இருவரையும், விசாரித்து விட்டு, குரு தன் தம்பியிடம் சற்று நேரம் உரையாடினான்.

"இத்தனை நேரம் எல்லாரும் பெரிசா சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க. உங்க தலையைக் கண்டதும் நம்ப குழந்தைங்க ரெண்டு பேரும் அடங்கிட்டாங்க!" என்றாள் ரேவதி குருவிடம் தனிமையில்.

"நான் என்ன செஞ்சேன்?" என்றான் குரு கோபமாக.

"எதுக்கெடுத்தாலும் இப்படி வள்ளுன்னு விழறீங்களே, அது போதாதா? என்னிக்காவது குழந்தைங்ககிட்டயாவது, எங்கிட்டயாவது அன்பாகப் பேசி இருக்கீங்களா? உங்க தம்பி அவரு மனைவிகிட்டயும் பிள்ளைங்ககிட்டயும் எவ்வளவு அன்பா இருக்காரு!"

"என்ன பேசறே நீ? நான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு வசதி செஞ்சு கொடுத்திருக்கேன்? என் தம்பிக்கு வருமானம் கம்மி. என்னை மாதிரி அவன் பெண்டு பிள்ளைகளுக்கு செய்ய முடியுமா?"

"நீங்க பணத்தைப்பத்திப் பேசறீங்க! வசதி செஞ்சு குடுத்திருக்கீங்க. இல்லேங்கல. ஆனா எங்ககிட்ட அன்பா நடந்துக்க உங்களுக்கு நேரமும் இல்ல, அப்படி ஒரு சிந்தனையும் இல்ல. உங்களைக் கண்டாலே நம்ப குழந்தைங்க பயப்படறாங்க. உங்க தம்பி புள்ளைங்க அவங்க அப்பாகிட்ட எவ்வளவு நெருக்கமா இருக்காங்கன்னு பாருங்க."

"நம்ப வீட்டுக்கு வந்திருக்கறதினால என் தம்பி தன் பையன்களைக் கோவிச்சுக்காம இருப்பான். அவன் வீட்டில இருக்கும்போது என்னை மாதிரிதான் இருப்பான்."

"நிச்சயமா இல்ல. அப்படி இருந்திருந்தா உங்க தம்பி குழந்தைகளுக்கு அவர்கிட்ட பயம் இருக்காதா? நீங்க வேணும்னா நாளைக்கு கவனிச்சுப் பாருங்க."

குரு பதில் பேசாமல் மௌனமாக இருந்தான்.

டுத்த நாள் குரு அலுவலகத்துக்குப் போகாமல் வீட்டில் இருந்தான். தம்பி குழந்தைகள் அவர்கள் அப்பாவிடம் பேசுவதை கவனித்தான். 'தீபாவோ, கார்த்திக்கோ என்னிடம் இவ்வளவு சுதந்திரமாகப் பேசுவார்களா? ரேவதி சொல்வது சரிதானோ?'

தற்செயலாக சமையற்கட்டுப் பக்கம் போனபோது தீபா அவள் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தது குருவின் காதில் விழுந்தது. "ஏம்மா, விச்சுகிட்டயும், நரேஷ்கிட்டயும் சித்தப்பா எப்படி ஜாலியா சிரிச்சுப் பேசிக்கிட்டு இருக்காரு! ஏன் அப்பா மட்டும் எங்ககிட்ட எரிஞ்சு விழுந்துகிட்டே  இருக்காரு?"

குருவுக்கு, தன் தலையில் யாரோ ஓங்கி அடித்த மாதிரி இருந்தது.

வசதியான வாழ்க்கையைப் பெற்றிருக்கும் தன் குடும்பத்தை விட, வசதிக் குறைவான தன் தம்பியின் குடும்பம்தான் அதிக மகிழ்ச்சியுடன் வாழ்வதாகத் தோன்றியது. இதற்குக் காரணம் தன் தம்பி தன் குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வதுதானோ?

குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வதைப் பற்றித் தன் தம்பியிடம் தான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான் குரு.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து 
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருள்:
உலகில் இன்புற்று வாழ்பவர்கள் அடையும் சிறப்பு அவர்கள் அன்புள்ளம் கொண்டு விளங்குவதன் பலனாக அவர்கள் பெறுவதுதான்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















2 comments:

  1. நல்லா இருக்கு. அன்புடையார் எல்லாம் உடையார்தான்.

    ReplyDelete