About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, March 19, 2016

59. ருக்மிணியின் திட்டங்கள்!

நகரத்தில் பிறந்து வளர்ந்து, பட்டப்படிப்பு படித்தவளான ருக்மணி ஒரு கிராமத்தில் சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் தன்னை மணந்ததில் ஆரம்பத்தில் பாலகிருஷ்ணனுக்குப் பெருமையாகத்தான் இருந்தது. ஆனால் கல்யாணம் ஆன சில நாட்களிலேயே தன் மனைவியின் நாட்டம் பணத்தில்தான் இருந்தது என்பதைப் புரிந்து கொண்டபோது அவனுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.

"டவுன்ல பொறந்து வளர்ந்து காலேஜில படிச்சுட்டு ஏன் இந்தப் பட்டிக்காட்டுல வந்து வாழ்க்கைப்பட்டேன் தெரியுமா?" என்று ஒரு நாள் ருக்மிணியே அவனிடம் கேட்டாள்.

"என்னைப் புடிச்சதினாலதான்னு சொல்லிடாதே! சந்தோசம் தாங்காம என் இதயம் நின்னு போயிடப் போகுது!" என்றான் பாலகிருஷ்ணன் விளையாட்டாக. ஆயினும் மனதுக்குள் அவள் அப்படிச் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது.

"நான் அப்படியெல்லாம் பொய் சொல்ற ஆளு இல்லே! இது ஒரு பட்டிக்காடா இருந்தாலும், நீங்க ஒரு முதலாளி. சொந்த நிலத்தில பயிர் செஞ்சுக்கிட்டு வாழ்க்கையை நடத்தறவரு. டவுன்ல யாரையாவது நான் கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா, மத்தவங்க கிட்ட கை கட்டி வேலை பாக்கற ஒரு ஆளைத்தான் கட்டிக்கிட்டிருக்கணும். அவரு பியூனா இருந்தாலும் ஜெனரல் மானேஜரா இருந்தாலும் அடிமைத் தொழில் பாக்கிறவராத்தான் இருந்திருப்பாரு."

இந்த மட்டும் தன்  தொழிலுக்கு ஒரு மரியாதை கொடுக்கிறாளே என்று நினைத்துக் கொண்டான் பாலகிருஷ்ணன்.

"ஆனா உங்க வருமானம் பத்தாது. விவசாயத் தொழில்ல வருமானம் அதிகரிக்கறத்துக்கும் வாய்ப்பு இல்லே! அதனால நான் ஏதாவது தொழில் செய்யலாம்னு இருக்கேன்."

"தொழிலா? இந்த ஊர்லயா? அதோட, தொழில்ல முதலீடு செய்யறதுக்கெல்லாம் என்கிட்டே பணம் இல்லையே!"

'ஒரு பத்தாயிரம் ரூபா குடுங்க போறும். இன்னும் ஒரு வருஷத்தில வட்டியோட திருப்பித் தரேன். அப்படி உங்களால முடியாதுன்னா எங்க அப்பா கிட்டே வாங்கிக்கறேன். என்ன, வட்டி அவருக்குப் போகும்!"

"பத்தாயிரம் ரூபா என்னால குடுக்க முடியும். நாளைக்கே தரேன். ஆனா என்ன தொழில், எப்படிப் பண்ணப்போறேன்னு ஒண்ணுமே புரியல்லியே!"

"உலகத்திலேயே லாபமான தொழில் வட்டிக்குக் கடன் கொடுக்கறதுதான். இந்த ஊர்ல வட்டிக்குக் கடன் கொடுக்கறவங்க யாரும் இல்லை. வட்டிக்குக் கடன் வாங்க இந்த ஊர் ஜனங்களெல்லாம் பஸ் புடிச்சு டவுனுக்குத்தான் போறாங்கன்னு விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். எங்கிட்ட கடன் வாங்கினா பஸ் கட்டணம் மிச்சம் ஆகும், நேரம் அலைச்சல் எல்லாம் கூட மிச்சம் ஆகும்."

"வட்டித் தொழில் மட்டும் வேண்டாம் ருக்மணி!"

"ஏன்?"

"எங்க பரம்பரையே கொடுத்துப் பழக்கப்பட்ட பரம்பரை. எங்கப்பா, தாத்தா எல்லாரும் மத்தவங்களுக்கு தாரளமா உதவி செஞ்சிருக்காங்க. உதவின்னு கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டதில்லை. அப்படி இருக்கச்சே நீ வட்டிக்குக் கடன் குடுத்தா நம்ப குடும்பப் பெயரே அழிஞ்சுடும்."

"அதானே பார்த்தேன் உங்க பரம்பரையில சொத்துக்கள் எல்லாம் குறைஞ்சுக்கிட்டே வந்திருக்கேன்னு! கொடுத்துக் கொடுத்தே அழிச்சிருக்காங்க உங்க அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா எல்லாரும். அதான் நீங்க ஓட்டாண்டியா நிக்கறீங்க!"

"வாய்க்கு வந்தபடி பேசாதே ருக்மணி. நாம வசதியா வாழற அளவுக்கு நமக்கு சொத்து இருக்கு. அதுக்கும் மேல, இந்த ஊர்ல நம்ப குடும்பத்தும் பேர்ல ஒரு மரியாதை இருக்கு. இப்ப உன்னை யாராவது வழியில பாத்தாக்கூட 'மகராசி'ன்னு வாழ்த்துவாங்க."

"மகராசின்னு வாயால வாழ்த்தினா போதுமா? மகாராணியா வாழணும். அதுக்கு நிறையப் பணம் வேணும். உங்க வருமானம் எல்லாம் ரெண்டு வேளை சாப்பிடறதுக்குத்தான் பத்தும். நமக்குப் பொறக்கப் போற குழந்தைகளை நல்லாப் படிக்க வைக்கணும். அவங்களுக்கு நிறைய சொத்து சேர்த்து வைக்கணும். இதுக்கெல்லாம் ஏத்த வருமானம் வட்டித் தொழிலில்தான் கிடைக்கும்."

"வேண்டாம் ருக்மணி. இந்தத் தொழிலை நான் அனுமதிக்க மாட்டேன்."

"நீங்க அனுமதிக்கலேன்னா எங்க அப்பா கிட்ட பணம் வாங்கி, இந்த ஊர்லேயே எங்கேயாவது ஒரு குடிசையைப் போட்டுக்கிட்டு இந்தத் தொழிலை நடத்தத்தான்போறேன்!"

அதற்கு மேல் பாலகிருஷ்ணனால் எதுவும் பேச முடியவில்லை.

ருக்மிணி தன் அப்பாவிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்டபோது, அவர் இது போதாது என்று சொல்லி ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க, ருக்மணியின் வட்டித் தொழில் விரைவிலேயே ஜாம் ஜாமென்று துவங்கியது.

ருக்மிணி எதிர்பார்த்தது போல், டவுனுக்குப் போய் கடன் வாங்கிய பலர் அவளிடம் கடன் வாங்கினார்கள். 1000, 2000 என்று சிறிய தொகையை மட்டும் கடனாகக் கொடுத்து, வட்டியும் அசலும் திரும்ப வர வர, அவள் முதலீடு சில மாதங்களிலேயே குட்டி போடத் தொடங்கியது.

வட்டியை ஒழுங்காகக் கொடுக்காதவர்கள், அசலைக் கொடுக்காதவர்கள் எல்லோரையும் ருக்மிணி அவர்கள் வீடு தேடிச் சென்று அவர்கள் மானம் போகும்படி உரத்த குரலில் கடுமையாகப் பேசினாள். அவளுடைய ஏச்சு அருவருக்கும் அளவுக்கு இருந்ததால், அதற்கு பயந்தே கடனாளிகள் பணத்தைக் காலத்தில் செலுத்தத் துவங்கினர்.

பாலகிருஷ்ணன் இதில் பட்டுக் கொள்ளாமல் இருந்தாலும் சிலர் அவனிடம் ருக்மிணி பற்றி அங்கலாய்த்தார்கள். பாலகிருஷ்ணன் பெரும்பாலும் பதிலே சொல்லவில்லை. சில சமயம், "இந்த வியாபாரம் என் பெண்டாட்டி செய்யறது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை" என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டான்.

ருநாள் அவன் நண்பன் காளிமுத்து அவனைத் தேடி வந்தான். "நடவுக்கு உங்கிட்ட வாங்கின ஐயாயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுக்கலாம்னு வந்தேன்" என்றான்.

"அதுக்கென்ன அவசரம்? இன்னும் அறுவடை ஆகலியே! இப்ப ஏது உன் கிட்ட பணம்?" என்றான் பாலகிருஷ்ணன்.

"என் கிட்ட பணம் இல்லைதான். என் மச்சான் கிட்ட கேட்டு வாங்கிட்டு வந்தேன்."

"எதுக்கு? நான் உன்னைப் பணம் கேட்டேனா?" என்றான் பாலகிருஷ்ணன்.

"நீ கேக்கல்ல. கேக்கவும் மாட்டேன்னு எனக்குத் தெரியும். ஆனா உன் சம்சாரம் வட்டிக்குப் பணம் குடுத்துக்கிட்டு இருக்கறச்சே, நான் வட்டி இல்லாத இந்தக் கடனை ரொம்ப நாள் வச்சுக்கறது நல்லாவா இருக்கும்? உன் சம்சாரத்துக்கு இந்தக் கடன் விஷயம் தெரிஞ்சு ஏதாவது சொல்லிட்டாங்கன்னா என்னால அதைப் பொறுக்க முடியாது" என்றான் காளிமுத்து.

பாலகிருஷ்ணன் தன் இயலாமையை நினைத்து மனம் நொந்தான்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

பொருள்:
குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை உள்ள மனைவி அமையாதவனால் தன்னை இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் முன் கம்பீரமாக நடக்க முடியாது.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















No comments:

Post a Comment