About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, September 7, 2018

199. பேச்சுக் கச்சேரி

வெளியூரில் நடந்த அந்தத் திருமணத்துக்கு எங்கள் குடும்பத்திலிருந்து நான் மட்டும்தான் போயிருந்தேன். திருமண மண்டபத்தில் எங்களுக்கு அறை ஒதுக்கியிருந்தார்கள்.

எனக்கும், இன்னும் நான்கு இளைஞர்களுக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டது. நாங்கள் தனியே வந்தவர்கள் என்பதால் இந்த ஏற்பாடு.

எங்களுக்குள் இதற்கு முன் பரிச்சயம் இல்லை. பெண் வீட்டுக்காரர்கள் எனக்கு தூரத்து சொந்தம்தான். ஆயினும் எங்கள் குடும்பத்திலிருந்து ஒருவராவது திருமணத்துக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பி என்னை அனுப்பி வைத்தார் என் அப்பா.

திருமணத்துக்கு வந்திருந்தவர்களில் என் மாமா மட்டும்தான் எனக்கு நெருக்கமானவர். அவர் தன் மனைவியுடன் வேறொரு அறையில் தங்கியிருந்தார்.

ஒரே அறை ஒதுக்கப்பட்ட நாங்கள் ஐவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். சற்று நேரத்தில் நெருக்கம் ஏற்பட்டுப் பழக ஆரம்பித்தோம்.

மறுநாள் காலையில்தான் திருமணம். இரவு உணவு முடிந்து அறைக்கு வந்ததும் நாங்கள் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம். அப்போதுதான் அறிமுகம் ஆகியிருந்தாலும், சினிமா நடிகைகள் பற்றிய கிளுகிளுப்புச் செய்திகள், அரசியல் அக்கப்போர், சமூக வலைத்தளப் பரபரப்புகள் என்று பேச ஆரம்பித்ததும் நெருங்கிய நண்பர்கள் போல் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டோம்.

எங்கள் ஐவரில், முகுந்தன் என்பவன் மட்டும் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். சில நிமிடங்கள் கழித்து, "எக்ஸ்க்யூஸ் மீ! நான் கொஞ்சம் வெளியில போய் உக்காந்துட்டு வரேன். இங்க ஒரே புழுக்கமா இருக்கு" என்று சொல்லி விட்டு எழுந்து போனான். போகும்போது கையில் செல்ஃபோனைத் தவிர, ஒரு நோட்டு போன்ற ஓரிரு பொருட்களையும் எடுத்துச் சென்றான்.

நாங்கள் சற்று நேரம் பேசி விட்டுத் தூங்கி விட்டோம். முகுந்தன் எப்போது உள்ளே வந்தான் என்று தெரியவில்லை.

மறுநாள் காலை முகூர்த்தம் முடிந்த பிறகு எங்கள் கச்சேரி மீண்டும் துவங்கியது. முகுந்தன் எங்களைப் பார்த்துச் சிரித்ததோடு சரி. பிறகு ஒரு மூலையில் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.

என்னைப் பார்க்க என் அறைக்கு என் மாமா வந்தார். என்னிடம் சற்று நேரம் பேசி விட்டு, "ஏன் அவர்  மட்டும் தனியே உட்கார்ந்திருக்காரு?" என்றார் முகுந்தனைப் பார்த்து.

"தெரியல. அவருக்கு நாங்க பேசற விஷயம் பிடிக்கல போலருக்கு" என்றேன் நான்.

மாமா எழுந்து சென்று முகுந்தன் அருகில் அமர்ந்து அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

மாலை ரிசப்ஷனுக்கு ஒரு கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். பாடகருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் வர முடியவில்லை என்று தகவல் வந்தது.

ரிசப்ஷன் துவங்கியதும், மாமா மேடைக்குச் சென்று, "பாட்டுக் கச்சேரி இல்லையென்பதால் பேச்சுக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இப்போது 'திருமண வாழ்க்கையின் அற்புதங்கள்' என்ற தலைப்பில் திரு முகுந்தன் பேசுவார்" என்று அறிவித்தார். சில வினாடிகள் மௌனத்துக்குப் பின் அவர் "முகுந்தன் திருமணம் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது!" என்றதும் அவையில் இலேசான சிரிப்பொலி எழுந்தது.

பேசப் போவது என் அறையில் இருக்கும் முகுந்தனா, அல்லது வேறு யாராவதா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே, என் அறையில் தங்கியிருக்கும் முகுந்தன் மேடையேறினான்.

அடுத்த ஒரு மணி நேரம் அனைவரையும் தன் பேச்சினால் கட்டிப் போட்டு விட்டான் முகுந்தன். 'திருமண வாழ்க்கை' என்ற ஒரு சாதாரண தலைப்பில் இவ்வளவு சுவாரசியமாகப் பேச முடியுமா என்று வியப்பாக இருந்தது. மனோதத்துவ உண்மைகள், உண்மைச் சம்பவங்கள், நகைச்சுவை என்று எல்லாம் கலந்து அவன் படைத்த பல்சுவை விருந்தை ரசிக்காதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம்.

அவன் பேசி முடித்ததும் நீண்ட கரவொலி எழுந்தது. நான் மேடைக்குச் சென்று அவனைக் கைகுலுக்கிப் பாராட்டினேன்.

என் மாமா தனிமையில் இருந்தபோது அவரிடம் கேட்டேன். "எப்படி மாமா இவன்கிட்ட இப்படி ஒரு திறமை இருக்கிறதைக் கண்டு பிடிச்சீங்க?"

"அவன் தனியா உக்காந்துக்கிட்டிருக்கறப்ப அவன்கிட்ட போய்ப் பேசினேன். 'நீ ஏன் அவங்களோட உக்காந்து பேசாம தனியா உக்காந்துக்கிட்டிருக்கே'ன்னு கேட்டேன். அவன் பதில் சொல்லாம சிரிச்சான். அவன் என்ன செய்யறான்னு பாத்தேன். ஒரு நோட்டில நிறைய விஷயங்கள் குறிச்சு வச்சிருந்தான். இலக்கியம், ஆன்மிகம், சமூக விஷயங்கள்னு பல விஷயங்களைப் பத்தி. இதையெல்லாம் எங்கேந்து சேகரிச்சேன்னு கேட்டேன். அவன் சொன்னான். 'பொதுவா எனக்கு சும்மா அரட்டை அடிக்கறதெல்லாம் பிடிக்காது. நான் படிச்சதில, கேட்டதில நல்ல விஷயங்களை இந்த நோட்டில குறிச்சு வைப்பேன். எனக்குத் தோணற விஷயங்களையும் குறிச்சு வைப்பேன். வெளியில எங்கேயாவது இருக்கறப்ப எனக்கு ஏதாவது தோணினா என் மொபைல்ல ரிக்கார்டு பண்ணி, வீட்டுக்குப் போனதும் அதை நோட்டில எழுதி வைப்பேன்'னு சொன்னான்.

"பாடகர் வர மாட்டார்னு மத்தியானமே தெரிஞ்சு போச்சு. 'நீ பேசறியா?'ன்னு முகுந்தன்கிட்ட கேட்டேன். முதல்ல தயங்கினான். அப்புறம் ஒத்துக்கிட்டான். நான் நெனச்ச மாதிரியே அற்புதமாப் பேசிட்டான். நீ என்ன நெனைக்கறே?" என்றார் மாமா.

"முகுந்தனும் கிரேட், நீங்களும் கிரேட்!" என்றேன் நான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ: 

    அறத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் 
மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.

பொருள்:  
மயக்கம் இல்லாத மாசற்ற அறிவுடையவர்கள் பயனற்ற சொற்களைக் கூற மாட்டார்கள்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

No comments:

Post a Comment