About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, January 10, 2018

123. ஜூனியர், ஜூனியர்!

"இன்னும் சீனியர் வரலையே?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் ராஜேஷ்.

"இல்லை. வழக்கம் போல இன்னிக்கும் லேட்தான் நீ!" என்றான் சிவா.

"நேரத்துக்கு வீட்டுக்குப் போக முடிஞ்சா நேரத்துக்கு வரலாம்.தினமும் வீட்டுக்குப் போக ஒம்பது பத்துன்னு ஆகுது. காதலியோடு ஒரு சினிமாவுக்குப் போகக் கூட முடியல!"

"உனக்குக் காதலி இருக்காளா என்ன? எங்கிட்ட சொல்லலியே!"

"ஒரு பேச்சுக்குச் சொன்னேன். இனிமேதான் யாரையாவது தேடிப் பிடிக்கணும்! அதுக்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்குது, இந்த வக்கீலுக்கு ஜூனியரா இருக்கற தொழில்ல? 

"உன்னை மாதிரி வேலையைக் கட்டிக்கிட்டு அழ என்னால முடியாது. ஏன்தான் இந்த வக்கீலுக்குப் படிச்சமோன்னு இருக்கு. அவன் அவன் படிச்சு முடிச்சதும் ஏதாவது ஒரு வேலைக்குப் போயி, சம்பளம் வாங்கிக்கிட்டு ஹாயா இருக்கான்!

"நம்ம வக்கீல் தொழில்லதான் சீனியர் கிட்ட அடிமை சேவகம் பண்ணிட்டு அப்புறம்தான் பிராக்டீஸ் பண்ண முடியும்கற நிலைமை!"

"இரைஞ்சு பேசாதே! சீனியர் வர நேரம். நல்ல வேளையா டைப்பிஸ்ட் சுகந்தி கூட இன்னிக்கு லீவு!" என்றான் சிவா,

அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ராமதுரை உள்ளே நுழைந்தார்.

"உக்காருங்க, உக்காருங்க. என்ன சிவா, நான் சொன்ன ப்ரீஃபை ரெடி பண்ணிட்டியா?" என்றார்.

"முடிச்சுட்டேன் சார். உங்க டேபிள்ள வச்சிருக்கேன்" என்றான் சிவா.

"சரி. இப்ப என்ன செஞ்சுக்கிட்டிருக்க?"

"சார்! அடுத்த வாரம் மகாதேவனோட பிராப்பர்டி மேட்டர் ஹியரிங்குக்கு வருது. அதுக்கு ரெஃபரன்ஸ் ஜட்ஜ்மென்ட் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"குட். நம்ப லைப்ரரில சரியா ரெஃபரன்ஸ் கிடைக்கலேன்னா ஹைகோர்ட் லைப்ரரில போய்ப் பாரு. நீ கலெக்ட் பண்ணின ரெஃபரன்ஸை எல்லாம் நாளைக்கு நான் பாத்துட்டு வேற ஏதாவது வேணுமான்னு சொல்றேன். ராஜேஷ், நீ என்ன பண்ணிக்கிட்டிருக்க?"

"சார்! ராமகிருஷ்ணனோட இன்ஷ்யூரன்ஸ் கேஸ் டாகுமெண்ட்ஸை எல்லாம் அரேஞ்ஜ் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"மூணு நாளா இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கே! நான் ஆஃபீஸ்ல இல்லாதபோது நீ ஒரு வேலையும் செய்யறதில்ல போலருக்கே!"

"இல்ல சார்! பேப்பர்ஸ் எல்லாம் நிறைய இருக்கு..."

"எனக்குத் தெரியாதா? ரெண்டு மணி நேர வேலை இது. இங்க பாரு. என்னை மாதிரி ஒரு பிஸியான வக்கீல் கிட்ட ஜூனியரா இருக்கறது பெரிய லேர்னிங் ஆப்பர்சூனிட்டி. அதை சரியாப் பயன்படுத்திக்கலேன்னா உனக்குத்தான் நஷ்டம். சரி. நான் கோர்ட்டுக்குப் போகணும். சாயந்திரம் வந்து பாக்கறேன். முக்கியமா யாராவது என்னைப் பாக்க வந்தா எனக்கு ஃபோன் பண்ணுங்க" என்று சொல்லி விட்டு வெளியேறினார் ராமதுரை.

"கொடுக்கறது சுண்டைக்கா சம்பளம். வேலை மட்டும் மலை மாதிரி குவிஞ்சுக்கிட்டே இருக்கும்!" என்றான் ராஜேஷ், அவர் போனவுடன்.

"அவர்தான் சொன்னாரே, இது ஒரு லேர்னிங் ஆப்பர்சூனிட்டின்னு! இதை ஒழுங்காப் பயன்படுத்திக்கிட்டாத்தான் ஏர்னிங் ஆப்பர்ச்சுனிடி வரும்!" என்றான் சிவா.

"இவரை மாதிரி ஆசாமிகள் எல்லாம் உன்னை மாதிரி இளிச்சவாயன் கிடச்சா அவன் தலையில நல்லா மொளகா அரைப்பாங்க! நாமளும் ஆறு மாசமா இவருகிட்ட ஜூனியரா இருக்கோம். என்னத்தைப் பெரிசாக் கத்துக் கொடுத்துட்டாரு நமக்கு?"

"டேய்! இது காலேஜ் இல்லை, யாராவது நமக்கு சொல்லிக் கொடுக்கறதுக்கு. வேலையை செஞ்சுக்கிட்டேதான் நாம வேலையைக் கத்துக்க முடியும். ரெண்டு வருஷம் பொறுமையா இருந்து அவர் சொல்ற வேலையைச் செஞ்சுக்கிட்டு அவர் செயல்படறதை கவனிச்சுப் பல விஷயங்களைக் கத்துக்கிட்டா அப்புறம் நாம தனியா பிராக்டீஸ் பண்ண முடியும்."

"நெனச்சுக்கிட்டிருக்க நீ! அவர் தொண்ணுறு வயசு வரையிலும் பிராக்டீஸ்  பண்ணுவாரு. அதுவரையிலும் நீ அவர் கிட்ட ஜூனியராத்தான் இருக்கப் போற! அவரும் உன்னை வளர விட மாட்டாரு. நீயும் தைரியமா வெளியில வர மாட்டே!"

"சரி, நீ என்ன பண்ணப் போற?"

"ஆறு மாசம் பாத்தாச்சு. இவரு நமக்கு நல்ல சம்பளமும் கொடுக்க மாட்டாரு. நாம கத்துக்கற அளவுக்கு முக்கியமான வேலையையும் நமக்குக் கொடுக்க மாட்டாரு. கோர்ட்டில போயி அவர் பக்கத்தில உக்காந்துக்கிட்டு அவருக்கு பேப்பர் எடுத்துக் கொடுக்கலாமே தவிர ஒரு நாளும் நீயும் நானும் கோர்ட்டில வாதாட முடியாது. இன்னும் ரெண்டு மாசத்துல பாரு. நானே தனியா கிளையன்ட்டைப் புடிச்சு பிராக்டீஸை ஆரம்பிச்சுடறேன்."

சொன்னபடியே ராஜேஷ் இரண்டு மாதங்களில் ராமதுரையிடமிருந்து விலகித் தனியே பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தான்.

ரு வருடம் கழித்து ஒரு பொது நிகழ்ச்சியில் ராஜேஷும், சிவாவும் சந்தித்துக் கொண்டனர்.

"உன் பிராக்டீஸ் எப்படிப் போயிக்கிட்டிருக்கு?" என்றான் சிவா.

"நான் எதிர்பார்த்தபடி வரல. அதனால, லாயர் சாமிநாதன் கிட்ட ஜூனியராச் சேந்துட்டேன்."

"நான் கேள்விப்பட்டதில்லையே அவர் பேரை! எப்படிப் போய்க்கிட்டிருக்கு?"

"என்னத்தைச் சொல்றது? அவருக்கு அதிகமா கேஸ் இல்லை. அதனால எனக்கும் வேலை அதிகமா இல்லை. சம்பளமும் ஒழுங்கா வரதில்லை. ராமதுரைகிட்டயே இருந்திருக்கலாம். அவசரப்பட்டுட்டேன். ஆமாம் நீ எப்படி இருக்கே?" என்றான் ராஜேஷ்.

"உனக்குத்தான் தெரியுமே, ராமதுரை சார்கிட்ட வேலை நிறைய இருக்கும். அதனால நிறையக் கத்துக்க முடியுது. அடுத்த வருஷம் நான் தனியே பிராக்டீஸ் பண்ணலாம்னு அவரே சொல்லிட்டாரு. அதனால இப்ப ரெண்டு மாசமா கோர்ட்டில் வாதம் பண்ண எனக்கு அப்பப்ப வாய்ப்புக் கொடுக்கறாரு."

"நீ அதிர்ஷ்டக்காரன்டா!" என்றான் ராஜேஷ்.

"அதிர்ஷ்டக்காரனோ என்னவோ எனக்குத் தெரியாது. பொறுமையா இருந்து, கஷ்டப்பட்டு உழைச்சுத் தொழிலைக் கத்துக்கிட்டா எதிர்காலத்தில் முன்னேறலாம்னு நெனச்சேன். அப்படி நடக்கும்னு நம்பிக்கை இருக்கு."

"நீ தனியா பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சப்பறம் சொல்லு. நான் உன்கிட்டயே ஜூனியரா சேர்ந்துடறேன்" என்றான் ராஜேஷ்.

ராஜேஷ் விளையாட்டுக்குச் சொல்கிறானா இல்லை உண்மையாகச் சொல்கிறானா என்று சிவாவுக்குப் புரியவில்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
ஆற்றின் அடங்கப் பெறின்.

பொருள்:  
அறிய வேண்டியவற்றை அறிந்து ஒருவன் அடக்கத்துடன் நடந்து கொண்டால், அந்தப் பண்பு பிறரால் அறிந்து கொள்ளப்பட்டு அவனுக்கு மேன்மையைத் தரும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்
















"

No comments:

Post a Comment