About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, January 8, 2018

121. அரசியல் வாரிசு

முதலமைச்சர் வெற்றிவேல் தான் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்றும், தீவிர அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போவதாகவும் அறிவித்தது அவர் கட்சிக்குள் மட்டுமின்றி, ஊடகங்களிலும், பொதுமக்களிடையேயும் கூட ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆயினும் வெற்றிவேலின் ஓய்வுக்குப் பிறகு கட்சித் தலைவராகவும், தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவும் அவர் தம்பி திருமூர்த்திதான் வருவார் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.

"என்னங்க, தலைவர் அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போறதாக அறிவிச்சுட்டாரு. இன்னும் தேர்தலுக்கு ஒரு வருஷம்தான் இருக்கு. நாம என்ன பண்ணப் போறோம்?" என்றான் கதிர்.

"என்ன செய்யணும்?" என்றான் நீலவண்ணன்.

"நீங்கதான் அடுத்த தலைவரா வரணும்கறதுதான் தொண்டர்களோட எதிர்பார்ப்பு. உங்க தலைமையில தேர்தலைச் சந்திச்சா நமக்கு வெற்றி நிச்சயம். நீங்கதான் அடுத்த முதல்வர்."

"நீங்க சொல்லிட்டா போதுமா? தலைவர் என்ன நினைக்கிறார்னு தெரியலியே!"

"தலைவர் தன்னோட தம்பிதான் வரணும்னு நினைப்பாரு."

"அப்புறம் நான் எப்படி வர முடியும்?"

"நம்ப கட்சித் தொண்டர்கள் எல்லாம் உங்களைத்தான் விரும்பறாங்க. அவங்க திருமூர்த்தியை ஏத்துக்க மாட்டாங்க. மக்கள்கிட்டயும் உங்களுக்குத்தான் செல்வாக்கு. திருமூர்த்தி தலைமையில நாம தேர்தல்ல போட்டி போட்டா நாம படு மோசமாத் தோப்போம்."

"தலைவர் எல்லாத்தையும் யோசிச்சு முடிவு பண்ணுவாரு. அதுவரையிலும் பொறுமையா இருப்போம்."

"நீங்க இப்படி அடங்கிப் போறதனாலதான் திருமூர்த்தி ஆட்டம் போடறான். உங்களைத்தான் அடுத்த தலைவராக்கணும்னு செயற்குழுவில் நான் பேசப் போறேன். முக்காவாசிப் பேரு உங்களைத்தான் ஆதரிப்பாங்க" என்றான் கதிர்.

"அவசரப்பட்டு ஒண்ணும் செஞ்சுடாதீங்க. பொறுமையா, கட்சி வேலைகளைப் பாத்துக்கிட்டிருப்போம். எனக்குத் தலைவர் ஆகற தகுதி இருக்குன்னு நீங்க நினைக்கிற மாதிரி தலைவரும் மத்தவங்களும் நெனைச்சா, அப்ப, தானே எனக்கு வாய்ப்பு வந்துட்டுப் போகுது!" என்றான் நீலவண்ணன்.

"அரசியல்ல அதிரடியாச் செயல்பட்டாத்தான் ஜெயிக்க முடியும். உங்களை மாதிரி அடங்கிப் போறவங்களை, திருமூர்த்தி மாதிரி ஆட்கள் எல்லாம் ஒரேயடியா அமுக்கிடுவாங்க" என்றான் கதிர்.

வெற்றிவேலின் அறிவிப்பைத் தொடர்ந்து, தான் அப்போதே தலைவராகி விட்டது போல் திருமூர்த்தி செயல்பட ஆரம்பித்தான். தலைவரின் தம்பி என்பதால் அவனுடைய அத்துமீறல்களை எதிர்க்க யாருக்கும் துணிவு வரவில்லை. 

ஆட்சியிலோ, கட்சியிலோ எந்தப் பொறுப்பிலும் இல்லாத நிலையிலும் ஆட்சிக்கும் கட்சிக்கும் திருமூர்த்திதான் தலைமை வகிப்பது போன்ற தோற்றம் உருவாகியது. இது கட்சித் தொண்டர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் ஏற்படுத்திய அதிருப்தியையும் கோபத்தையும் பற்றித் திருமூர்த்தி கவலைப்படவில்லை.

தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதமே இருந்த நிலையில் வெற்றிவேல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

"நான் முன்பே அறிவித்தபடி, வரும் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தீவிர அரசியலிலும் இனி ஈடுபடப் போவதில்லை. எதிர்வரும் தேர்தலை நம் கட்சி ஒரு புதிய தலைவரின் தலைமையில் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம். எனவே வரும் பதினைந்தாம் தேதி காலை நான் என் ராஜினாமாவை ஆளுநரிடம் அளிக்க இருக்கிறேன். அன்று முற்பகல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். அதில் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அன்று மாலையே அவர் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொள்வார்."

"வரும் தேர்தலில் எப்படியும் இவர்கள் கட்சி  தோற்று விடும். அதனால் தன் தம்பி ஆறு மாதமாகவாவது முதல்வராக இருக்கட்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு!" என்று ஊடகங்கள் விமரிசித்தன.

"கோட்டை விட்டுட்டமே! திருமூர்த்தியைக் கொண்டு வரத்துக்குத் தலைவர் ஏற்பாடு பண்ணிட்டாரே!" என்று புலம்பினான் நீலவண்ணனின் ஆதரவாளனான கதிர். நீலவண்ணன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

ட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்குச் சில மணி நேரங்கள் முன்பு சற்றும் எதிர்பாராத வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்தது.

'இது போல் நடந்ததே இல்லையே! ஏதோ நடக்கப்போகிறது!' என்ற எதிர்பார்ப்பில் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதுமே தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பு அமர்ந்திருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வெற்றிவேல் பேசத் தொடங்கினார்:

"இந்தக் கட்சியை எனக்கு முன்பிருந்தவர்களும், நானும் எங்கள் கடின உழைப்பால் வளர்த்திருக்கிறோம். எத்தனையோ சோதனைகளைக் கடந்து நம் கட்சி இன்று ஒரு அசைக்க முடியாத கோட்டையாக இருக்கிறது என்றால் அதற்கு இந்தக் கட்சியை வழி நடத்திய தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அயராத உழைப்புதான் காரணம். எதிர்காலத்திலும் நமது கட்சியை வழி நடத்திச் செல்லும் திறமையும் தகுதியும் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர்களுக்கே உண்டு. அந்த வகையில் கடந்த பல வருடங்களாக நம் கட்சிக்காகக் கடினமாக உழைத்து உங்கள் எல்லோருடைய அன்பையும் பெற்றிருக்கும் என் அருமைத் தம்பி நீலவண்ணனையே நீங்கள் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்."

அவர் பேச்சை முடிக்கும் முன்பே கரவொலி அரங்கை அதிர வைத்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
        அடக்கமுடைமை      
குறள் 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

பொருள்:  
அடக்கம் நமக்கு உயர்வைத் தரும். அடக்கம் இல்லாமல் நடந்து கொள்வது நமக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

 குறள் 120 

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்
















No comments:

Post a Comment