About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, January 6, 2018

119. ஆன்மீகச் சொற்பொழிவு!

நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கத்துக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. 

அதனால் பிரச்னையை ஒரு நடுவர் மூலம் தீர்த்துக் கொள்வது என்று இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.

ஒரு நடுவரை நியமிக்கும்படி இரு தரப்பினரும் தொழிலாளர் ஆணையரைக் கேட்டுக் கொள்ள, அவர் ஒய்வு பெற்ற அரசு அதிகாரி உமாபதியின் பெயரைப் பரிந்துரைத்தார். 

இரு தரப்பினரும் அவரை ஏற்காவிட்டால், ஆணையர்  வேறொரு நபரைப் பரிந்துரைப்பார் என்று ஏற்பாடு.

நிர்வாகத்தினர் அவரை உடனே ஏற்றுக்கொண்டு விட்டனர்.

தொழிற்சங்கத் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

"உமாபதி ஒரு நேர்மையான அதிகாரியா இருந்தவர்னு சொல்றாங்க. ஆனா நம்ம பக்க நியாயத்தைப் புரிஞ்சுப்பாரான்னு சந்தேகமா இருக்கு! பொதுவா இது மாதிரி ஒயிட் காலர் ஆசாமிகளுக்கெல்லாம் தொழிலாளின்னாலே கொஞ்சம் இளப்பம்தான்! நம்ம பக்கத்தில நியாயம் இருக்குன்னு ஒத்துக்குவே மாட்டாங்க" என்றார் செயலாளர் ஜெகதீசன்.

"அப்படி எல்லாரையும் பொதுப்படையா எடை போட்டுடக் கூடாது. அப்படிப் பாத்தா, நம்மளால யாரையுமே ஏத்துக்க முடியாது. இவரு எப்படிப் பட்டவர்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்" என்றார் தலைவர் செல்வராஜ்.

"தெரிஞ்சுக்கறதுக்கு என்ன இருக்கு? இவர் ஒரு பழமைவாதி. பழமைவாதிங்கள்ளாம் முதலாளிங்களுக்குத்தான் சாதகமா இருப்பாங்க!" என்றார் துணைத்தலைவர் முகுந்தன்.

"இவர் ஒரு பழமைவாதின்னு எப்படிச் சொல்றீங்க?" என்று கேட்டார் செல்வராஜ்.

"அவருதான் ஆன்மீகச் சொற்பொழிவெல்லாம் நிகழ்த்தவராச்சே!"

"அப்படியா? இன்னிக்கு அவரு சொற்பொழிவு ஏதாவது இருக்கான்னு பாருங்க!" என்றார் செல்வராஜ்.

முகுந்தன் அன்றைய பத்திரிகையைப் புரட்டிப் பார்த்து விட்டு "இருக்கு தலைவரே! நங்கநல்லூர்ல இன்னிக்கு சாயந்திரம் ராமாயணச் சொற்பொழிவு இருக்கு."

"அதுக்கு நாம மூணு பேரும் போவோம்" என்றார் செல்வராஜ் சிரித்தபடி.

மூவரும் நங்கநல்லூரில் உமாபதியின் சொற்பொழிவைக் கேட்டு முடித்தபின், செல்வராஜின் வீட்டில் கூடிப் பேசினர்.

"கடவுள் நம்பிக்கை இல்லாத மூணு பேரும் கதாகாலட்சேபத்துக்குப் போயிட்டு  வந்தீங்களே, எப்படி இருந்தது?" என்றாள் அவர்களுக்கு காப்பி கொடுத்து உபசரித்த செல்வராஜின் மனைவி கற்பகம்.

"பொதுவா, புராணக் கதைகள் சொல்றவங்கள்ளாம் புராணங்களில் வருகிற சம்பவங்களை நியாயப்படுத்தித்தான் பேசுவாங்க. ஆனா இவரு ராமர் பண்ணின சில விஷயங்களைத் தன்னால ஒத்துக்க முடியாதுன்னு சொன்னாரு."

"அது என்ன விஷயங்கள்?" என்றாள் கற்பகம் சற்று வியப்புடன்.

"நீயும் உக்காந்து கேளு. உனக்குத்தான் புராணக் கதைகள்ள ஆர்வம் உண்டே!" என்றார் செல்வராஜ்.

"சொல்லுங்க! ராமர் அப்படி என்ன தப்புப் பண்ணிட்டாராம்?" என்றாள் கற்பகம், அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி.

"சுவாரசியமான விஷயம் என்னன்னா, உமாபதி நேத்திக்குத் தன்னோட சொற்பொழிவில, ராமர் வாலியை மறைஞ்சிருந்து கொன்னது தப்புன்னு சொல்லியிருக்காரு. அவர் அப்படிச் சொன்னது புராணங்களை அவமதிக்கிற மாதிரியும், பக்தர்கள் மனசைப் புண்படுத்தற மாதிரியும் இருக்கறதா இன்னிக்கு ஆடியன்ஸில ஒருத்தர் ஆவேசமாப் பேசினாரு. அவருக்கு பதில் சொன்ன உமாபதி, ராமர் இன்னும் சில தப்புகளும் பண்ணியிருக்கறதா சொல்லி அவருக்கு ஷாக் கொடுத்தாரு!"

"வாலியைக் கொன்னதையே தப்புன்னு பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்க. இதில இன்னும் சில தப்பு வேறயா? அது என்ன?" என்றாள் கற்பகம்.

"பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு நீ சொல்றே! ஆனா தமிழ்ல ராமாயணத்தை எளிமையா எழுதின ராஜாஜியே, வாலியை ராமர் மறைஞ்சு கொன்னது தப்புன்னு சொல்லியிருக்கார்னு உமாபதி சொன்னாரு."

"அப்படியா? எனக்குத் தெரியாதே இது!" என்றாள் கற்பகம்.

"அதைச் சொல்லிட்டு, 'ராமர் இன்னும் ரெண்டு தப்பு பண்ணியிருக்கறதா நான் நினைக்கிறேன்'னாரு உமாபதி! சீதையை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னது ஒரு தப்பாம்..."

"இதில என்ன தப்பு? சீதை சுத்தமானவங்கதான்னு உலகத்துக்குக்  காட்டறதுக்காகதானே ராமர் அவங்களை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னாரு?" என்றாள் கற்பகம்.

"அப்படின்னா, தான் சுத்தமானவர்னு காட்டறதுக்கு ராமரும் இல்ல அக்கினிப் பிரவேசம் பண்ணி இருக்கணும்? ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமான்னு கேக்கறாரு உமாபதி!"

"என்னவோ! இப்படிக் கேள்வி கேக்கறதெல்லாம் எனக்கு சரியாப் படலை. சரி. இன்னொரு தப்பு என்ன?"

"கடைசியில சீதையைக் காட்டுக்கு அனுப்பினது!"

"ஏங்க, ஒரு அரசனா, தன்னோட கடமையைத்தானே அவர் செஞ்சாரு? நாட்டு மக்கள்ள ஒருத்தர் சீதையைப் பத்தித் தப்பாப் பேசினதுனாலதானே அப்படிச் செஞ்சாரு?"

"ஊர்ல யாரோ தப்பாப் பேசினா அதுக்காக மனைவிக்கு தண்டனை கொடுக்கறதா? இதை நான் கேக்கல. உமாபதிதான் கேட்டாரு! அதுதான் ஒரு தடவை அக்கினிப் பிரவேசம் செஞ்சு சீதை தன்னோட கற்பை நிரூபிச்சுட்டாங்களே, அதுக்கப்பறமும் யாரோ சொன்னதுக்காக அவங்களைக் காட்டுக்கு அனுப்பியது கொடுமை இல்லையான்னு கேட்டாரு?"

"அதுக்காக, ஒரு அரசர் மக்கள் பேசறதைப் புறக்கணிச்சுட முடியுமா?"

"இந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் டாப்! ராமர் என்ன செஞ்சிருக்கணும்? 'என் மனைவி குற்றமற்றவள். அவளை நீங்க சந்தேகப்பட்டப்பறம், அவளை நான் ராணியா வச்சுக்க முடியாது. அதுக்காக அவளைக் கைவிடவும் முடியாது. நான் அரசனா இருந்தாத்தானே இப்படியெல்லாம் பேசுவீங்க? நான் அரசனா இருக்கப் போறதில்ல. என் மனைவியோட எங்கியாவது போய் இருந்துக்கறேன், நீங்க வேற ஒரு அரசனைப் பாத்துக்கங்க'ன்னு சொல்லிட்டு ராமர் நாட்டை விட்டே போயிருக்கணும்கறது அவரோட கருத்து."

"அடேயப்பா! இப்படி ஒரு நியாயமா?"

"ஆமாம். கேள்வி கேட்டவருக்கு ஏன் கேட்டோம்னு ஆயிடுச்சு. 'இப்படியெல்லாம் பேசற நீங்க ஏன் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்திறீங்க?'ன்னு அவரு கோபமாக் கத்திப் பேசினாரு. அதுக்கும் உமாபதி பொறுமையா பதில் சொன்னாரு. 'நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான். ராமரை தெய்வமா வணங்கறவன்தான். ராமாயணத்தில் ராமர் என்கிற பாத்திரம் செஞ்ச சில தவறுகளைச் சொன்னேன். அவ்வளவுதான். ஒரு விஷயம் தப்புன்னு தோணிச்சுன்னா அதைத் தப்புன்னுன்னு சொல்றதுதான் நியாயம். நமக்குப் பிடித்தமானவங்க, நமக்கு வேண்டியவங்கங்கறதுக்காக அவங்க செய்யறதையெல்லாம் சரின்னு நியாயப்படுத்த முடியாதுன்னு அவர் கொடுத்த விளக்கம் எனக்குப் பிடிச்சிருந்தது."

"அப்ப என்ன  முடிவு எடுக்கப் போறோம்?" என்றார் ஜெகதீசன்

"நீங்களே சொல்லுங்க! நீங்களும்தானே அவர் பேச்சைக் கேட்டீங்க? ஒருத்தர் மனசில இருக்கறதுதான் வார்த்தையிலே வரும். அவர் அடிப்படையில எந்த விஷயத்தையும் நடுநிலையாப் பாக்கறவர்னுதான் எனக்குத் தோணுது. அதனாலதான் ஆன்மீகச் சொற்பொழிவுல கூட தன்னோட ஆடியன்ஸ் விரும்ப மாட்டாங்கன்னு தெரிஞ்சும் தனக்கு சரின்னு பட்டதைச் சொல்லியிருக்காரு. இப்படிப்பட்டவர் நம்ம பக்கத்தில இருக்கிற நியாயத்தை ஒத்துப்பார்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?" என்று செல்வராஜ் மற்ற இருவரையும் பார்த்தார்.

"நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்" என்றார் முகுந்தன். ஜெகதீசன் அதை ஆமோதித்துத் தலையாட்டினார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

பொருள்:  
சிந்தனை கோணல் இல்லாமல் நேராக இருந்தால், பேச்சும் நேர்மை தவறாமல் இருக்கும். இதுதான் நடுநிலைமை.
பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்

















No comments:

Post a Comment