About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, July 30, 2019

273. சித்தானந்தா, ஷில்பா மற்றும் பலர்!

"நம் சமுதாயத்தில் பெண்கள் மிகவும் உயர்வாக மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் இப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன. ஒவ்வொரு ஆணும் தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தாயாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ நினைக்க வேண்டும். இப்படி எல்லோரும் நினைக்க ஆரம்பித்து விட்டால், பெண்கள் மீது தவறான ஆசை யாருக்கும் வராது. பக்தி, யோகம், தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் இந்த மனநிலையைப் பெறுவது எளிதாக இருக்கும்..."

ஆத்திரத்துடன் ஷில்பா டிவி ரிமோட்டை படக்கென்று அழுத்தி டிவியை நிறுத்தினாள்.

"செய்யறது அயோக்கியத்தனம். பேசறது மட்டும் பெரிய புனிதன் மாதிரி. காவி கட்டிய காலிப் பய!" என்றாள் அவள் கோபத்துடன்.

"உன்னோட அட்மைரரைப் பற்றி அப்படியெல்லாம் பேசாதேடி!" என்றாள் அவள் தோழி நிஷா சிரித்தபடியே.

"இது சிரிக்கிற விஷயம் இல்லடி. இவன் செஞ்ச அயோக்கியத்தனத்தை வெளியில சொல்லாம விட்டது என் மேல தப்பு. பெண்கள் கிட்ட தப்பா நடந்துக்கிட்டு இப்படியெல்லாம் பேசினா ஆத்திரம்தான் வருது."

"என்ன செய்யப் போற? இது நடந்து அஞ்சாறு மாசம் ஆயிடுச்சு. அதோட போலீஸ்ல புகார் கொடுத்தாலும், என்ன ஆதாரம்னு கேப்பாங்க."

"போலீசுக்குப் போகப் போறதில்ல. வேற ஒண்ணு செய்யப் போறேன்."

"என்ன செய்யப் போற?"

"இப்ப 'மீ டூ' ன்னு ட்வீட்டர் டாக் ஒண்ணு வந்திருக்கில்ல அதில என்னோட அனுபவத்தை எழுதப் போறேன். அப்பத்தான் இவன் ஒரு அயோக்கியன்னு ஊருக்கெல்லாம் தெரியும்."

"யோசிச்சுப் பண்ணுடி. இதனால உனக்கும் பாதிப்பு வரும். உனக்கு எதுவும் நடக்கலேன்னாலும், நாலு பேர் உன்னைப் பத்தியும் தப்பா சொல்லுவாங்க.."

"அதைப் பத்தி நான் கவலைப்படல" என்றாள் ஷில்பா.

"ஆறு மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் என் தாய் தந்தை இருவரும் இறந்து விட்டனர். அப்போது விரக்தி அடைந்து மன அமைதி கிடைக்குமென்று நம்பி சித்தானந்தாவின் ஆசிரமத்துக்குச் சென்றேன். அவரிடம் என் வேதனையைச் சொன்னேன். மன அமைதி பெற ஒரு தியானம் கற்றுக் கொடுப்பதாகச் சொல்லி சித்தானந்தா என்னை ஒரு அறைக்கு அழைத்துப் போனார். அங்கே என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். எப்படியோ நான் தப்பி ஒடி வந்து விட்டேன். இப்போது அவர் பெண்களைத் தாயாகவும், சகோதரியாகவும், மகளாகவும் நினைக்க வேண்டும் என்று தொலைக்காட்சியில் பேசியதைக் கேட்டதும், அவருடைய வேஷத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்று நினைத்து இந்த உண்மையை இப்போது உலகுக்குத் தெரிவிக்கிறேன்."

ஷில்பா வின் 'மீ டூ' பதிவு பெரிய அளவில் பிரபலமாகி சர்ச்சையைக் கிளப்பியது.

சித்தானந்தா ஊடகச் செய்தியாளர்களைத் தன் ஆசிரமத்துக்கு அழைத்து விளக்கம் அளித்தார்.

"அக்கினிப் பிரவேசம் செய்த பிறகு கூட சீதை மீது அவதூறு சொன்னார்கள். கிருஷ்ண பரமாத்மாவின் மீதே ஸ்யமந்தக மணியைத் திருடியதாகக் குற்றம் சாட்டினார்கள். விப்ரநாராயணர் போன்ற பல பக்தர்கள் மீது திருட்டுப் பட்டம் கட்டப்பட்ட வரலாறுகள் உண்டு. இப்போது நானும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். மீ டூ! என் உண்மையான பக்தர்கள் இது போன்ற பொய்களை நம்ப மாட்டார்கள்."  

இதைச் சொல்லி விட்டு, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்து சித்தானந்தா எழுந்து உள்ளே போய் விட்டார். 

சித்தானந்தாவின் மறுப்பு வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு 'மீ டூ' வில் இன்னொரு பதிவு வந்தது. "சித்தானந்தாவின் கற்பழிப்பு முயற்சியிலிருந்து சகோதரி ஷில்பா தப்பி விட்டார். ஆனால் என்னால் தப்பிக்க முடியவில்லை. இதை வெளியில் சொல்ல அவமானப்பட்டு இத்தனை காலம் மௌனமாக இருந்தேன். ஆனால் அவர் தான் பெரிய உத்தமன் என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் சொன்ன பிறகு, எனக்கு அவமானம் நேர்ந்தாலும் பரவாயில்லை, இந்தப் போலிச் சாமியாரின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று முடிவு செய்து இப்போது இதைச் சொல்கிறேன்" என்று இன்னொரு பெண் பதிவு செய்திருந்தாள்.

இதைத் தொடர்ந்து, சீட்டுக்கட்டில் ஒரு சீட்டு கீழே விழுந்ததும் அதைத் தொடர்ந்து இன்னும் பல சீட்டுக்கள் சரிந்து விழுவது போல், மேலும் பல பெண்களிடமிருந்து இது போன்ற பதிவுகள் வெளியாக ஆரம்பித்தன.

சித்தானந்தாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகச் செய்தி வெளியிட்ட பெண்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கைத் தண்டி மூன்று இலக்கங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தது!

"என்னடி, நீ ஒரு பந்தைத் தூக்கிப் போட்டதும் வரிசையா பந்து வந்து விழுந்துக்கிட்டே இருக்கே?" என்றாள் நிஷா.

"அவன் ஒரு வேஷதாரி. சினிமாவில எல்லாம் வருமே! வேஷம் போட்டவனுக்கு ஓரமா மீசை பிஞ்சு வரும், இல்லேன்னா டோப்பா கழன்று விழும். அதை வச்சு அவன் வேஷம் போட்டிருக்கான்னு கண்டு பிடிச்சுடுவாங்க. அது மாதிரிதான் இவன் விஷயத்திலேயும் நடந்திருக்கு. இவன் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. நான் அந்தப் பசுத்தோலைக் கொஞ்சம் கிழிச்சு உள்ளே இருக்கற புலியோட வரிகளை வெளியில காட்டினேன். இப்ப எல்லாருமா சேர்ந்து அவன் போர்த்தியிருந்த பசுத்தோலை மொத்தமா கிழிச்செறிஞ்சுட்டு அவன் ஒரு புலிதான்னு காட்டிட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்ற ஷில்பா, வாய் விட்டுச் சிரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

துறவறவியல்
     அதிகாரம் 28      
கூடாவொழுக்கம்   
குறள் 273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

பொருள்:  
மனத்தை அடக்க முடியாதவன் வலுவாக ஏற்படுத்திக் கொண்ட தவக்கோலம், பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போல் ஆகும்.
        பொருட்பால்                                                                                   காமத்துப்பால்













2 comments: