About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, July 22, 2018

192. பதவி உயர்வு!

கஜபதிக்கு அந்த அலுவலகத்தில் என்ன வேலை என்பது யாருக்கும் தெரியாது. உண்மையில் அவருக்கு வேலையே இல்லை.

அவர் அந்த நிறுவனத்தில் நீண்ட நாட்களாகப் பணியாற்றுபவர். நிறுவனத்தைத் தொடங்கிய சுந்தரமூர்த்தியின் நண்பர். நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இருப்பவர்.

சுந்தரமூர்த்தியை 'வாடா, போடா' என்று பேசும் உரிமை பெற்றவர். முதலாளி-ஊழியர் என்ற நிலையைத் தாண்டி இருவரும் நண்பர்களாகவே பழகி வந்தனர்.

அரசுக்குப் பல்வகைப் பொருட்களை விற்பனை செய்யும் ஏஜென்ஸி நிறுவனம் அது. ஆரம்பத்தில் பேப்பர், ஃபைல்கள் என்று தொடங்கி, பிறகு, ஃபர்னிச்சர், ஃபிட்டிங்ஸ் என்று பல்வேறு பொருட்களை சப்ளை செய்யும்
அளவுக்குக் குறுகிய காலத்திலேயே வளர்ந்து விட்டது அந்த நிறுவனம்.

ஆரம்ப காலத்தில் கஜபதி சுந்தரமூர்த்தியுடன் சேர்ந்து வியாபாரத்தைப் பெருக்கக் கடுமையாக உழைத்தவர்தான். ஆயினும், நிறுவனம் வளர்ந்ததும், ஒருபுறம் வியாபாரம் நிலை பெற்று விட்டதாலும், மறுபுறம் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டதாலும், கஜபதிக்கு வேலை குறைந்து விட்டது.

அந்த நிறுவனத்தில் யாருக்கும் பதவிப் பெயர்கள் இல்லை. துவக்கத்தில் ஒரு பொது மேலாளர் போல் செயல்பட்ட கஜபதி, நாளடைவில் தாமே தம் பொறுப்புகளைக் குறைத்துக் கொண்டார். 

மற்ற ஊழியர்களும் அவரை அணுகுவதைக் குறைத்துக் கொண்டு நேரே முதலாளியிடம் பேசும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டனர்.

கஜபதிக்கு இது வசதியாகவே இருந்தது. ஒய்வு பெற இன்னும் சில வருடங்களே இருக்கும் நிலையில், தம் இருக்கையில் அமர்ந்தபடி மற்ற ஊழியர்களிடம் அரட்டை அடித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

அவர்கள் அலுவலகம் கீழ்ப்பகுதியிலும், மாடியிலும் என்று இரண்டு தளங்களில் இருந்தது. சுந்தரமூர்த்தியின் அறை மாடியில் கடைசியில் இருந்தது. ஊழியர்கள் யாருக்கும் தனி அறை இல்லை - கஜபதி உட்பட. 

கஜபதியின் இருக்கை மாடிப்படியின் அருகில் இருந்தது. கீழிருந்து மேலே வருபவர்கள், மேலிருந்து கீழே வருபவர்கள் என்று எல்லோரையும் நிறுத்தி வைத்துப் பேசுவார். யாராயிருந்தாலும், சில நிமிடங்கள் அவர் இருக்கை அருகில் நின்று பேசி விட்டுத்தான் போக வேண்டி இருக்கும்.

பேச்சு அவர்கள் குடும்ப விஷயம், அவர்கள் பகுதியில் நடந்த குற்றங்கள், விபத்துகள், சினிமா, அரசியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று எது பற்றி வேண்டுமானாலும் இருக்கும். 

சில ஊழியர்கள் இதை ரசித்தாலும், சிலர் - குறிப்பாக, பெண்கள் - இதை விரும்பவில்லை. இயல்பாகவே அவருக்குச் சற்று உரத்த குரல். அதனால் அவர் பேசும்போது அவர் அருகில் உட்கார்ந்திருக்கும் சிலர் தங்கள் வேலையிலிருந்து கவனத்தைத் திருப்பி அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

கஜபதி ஒரு மூத்த ஊழியர் என்பதாலும், முதலாளியின் நண்பர் என்பதாலும், யாரும் இது பற்றிப் புகார் செய்யவில்லை. சுந்தரமூர்த்தியும் இதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

ருநாள் சுந்தரமூர்த்தி தன் அறையை மாடியிலிருந்து கீழ்ப்பகுதிக்கு மாற்றிக் கொண்டார். "ஏம்ப்பா ரூமை மாத்தற?" என்று கஜபதி கேட்டதற்கு, "சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான்" என்றார் சுந்தரமூர்த்தி.

புதிய அறைக்கு மாறி இரண்டு நாட்கள் கழித்து, கஜபதியைத் தன் அறைக்கு அழைத்தார் சுந்தரமூர்த்தி.

"கஜபதி! மேல என் ரூமை எதுக்குக் காலி பண்ணினேன் தெரியுமா?"

"கேட்டேன். சும்மாதான்னு சொன்னியே!" என்றார் கஜபதி.

"நீ ஆரம்பத்திலேந்து என்னோட இருக்க. உனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். நம்ம கம்பெனியில டெஸிக்னேஷன் எதுவும் கூடாதுங்கறது என் பாலிசின்னு உனக்குத் தெரியும். இல்லேன்னா உன்னை ஜெனரல் மானேஜர்னு டெஸிக்னெட் பண்ணி இருப்பேன். என்னோட அறையை உனக்காகத்தான் காலி பண்ணினேன். இதை விட அது பெரிசு. இனிமே உன் சீட் அங்கதான். சில முக்கியமான ஃபைல்களை உனக்கு அனுப்பறேன். நிதானமாப் பாரு. உனக்கு ஒர்க் பிரஷர் எதுவும் இருக்காது."

கஜபதி கொஞ்சம் மகிழ்ச்சியுடனும், கொஞ்சம் குழப்பத்துடனும் தலையாட்டினார்.

"ஆஃபீஸ்ல என் ரூமை கஜபதிக்குக் கொடுத்துட்டு நான் கீழ வந்துட்டேன்" என்றார் சுந்தரமூர்த்தி தன் மனைவியிடம்.

"ஏன் திடீர்னு?"

"அவன் கம்பெனிக்கு நிறையப் பண்ணியிருக்கான். கம்பெனி பெரிசானதும், அவனுக்கு ஏதாவது பொறுப்பு கொடுத்திருக்கணும். சரி, கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டும்னு விட்டுட்டேன். அவன் என்னடான்னா எல்லாரையும் இழுத்து வச்சுக் கதை பேசிக்கிட்டு ஆஃபீசையே கெடுத்துக்கிட்டிருந்தான். என்ன செய்யறதுன்னு தெரியல. நேரடியா சொன்னா அவன் வருத்தப்படுவான். புரிஞ்சுக்காம போனாலும் போகலாம். அதான் இப்படிப் பண்ணினேன்."

"இப்ப எப்படி இருக்காரு?"

மாடியில அவன் ரூம் கடைசியில இருக்கு. அதனால அந்தப் பக்கம் யாரும் அதிகம் போக மாட்டாங்க. அவனே வெளியில வந்துதான் யார்கிட்டயாவது பேசணும். அது மாதிரி அடிக்கடி செய்ய முடியாது. ரூம்லேந்து ஒண்ணு ரெண்டு பேரைக் கண்ணாடி வழியாப் பாத்து, கையை ஆட்டிக் கூப்பிட்டுப் பாக்கறான். ஆனா யாரும் உள்ள போறதில்ல. வேலை இருக்குன்னு சைகையாலேயே பதில் சொல்லிட்டுப் போய்க்கிட்டிருக்காங்க."

"பாவங்க அவரு!"

"இத்தனை நாளா ஆஃபீஸ் இல்ல பாவமா இருந்தது? பழகிடும். அதோட அவனுக்குக் கொஞ்சம் வேலையும் கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன். சொல்றதுக்கில்ல. கொஞ்ச நாள்ள, ஆரம்பத்தில இருந்த மாதிரி கடுமையா வேலை செய்ய ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவான்" என்று சிரித்தார் சுந்தரமூர்த்தி.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
நட்டார்கண் செய்தலிற் றீது.

பொருள்:  
பலர் முன் பயனற்ற சொற்களைப் பேசுவது, நண்பர்களிடம் அறத்துக்கு மாறாக நடந்து கொள்வதை விடத் தீயதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்































2 comments:

  1. ஐயா,,
    உங்கள் தளத்தை கூகுள் தேடு பொறி வாயிலாக இன்றுதான் அடைந்தேன்.
    சம காலக் கதைகளுடன் குறள் விளக்கம் மிகவும் அருமை.
    தினம் ஒரு குறள் கதையென மகனுக்கும் சொல்லித்தரலாம் என்றிருக்கிறேன்.
    தங்களின் சேவையைச் சிறப்பிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.
    மிக்க நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

      Delete