About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, September 14, 2017

100. துவர்ப்பு வாழை

நாகம்மையைப் பற்றித் தெரிந்தவர்கள் அவளிடம் அதிகம் பேச்சுக் கொடுக்க மாட்டார்கள். அவளுடன் வாக்குவாதம் செய்தால், அவள் வாயிலிருந்து வரும் சுடுசொற்களை யாராலும் தாங்க முடியாது.

நாகம்மையின் பேச்சைத் தாங்க முடியாமல் அவள் மாமியார் நிரந்தரமாகவே தன் இன்னொரு பிள்ளையிடம் போய் விட்டாள். 

அவள் சகோதரிகள் கூட அவளிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.

அவள் தங்கை சிவகாமி ஒருமுறை அவளைப் பற்றித் தன் இன்னொரு சகோதரியிடம் "நம்ப அப்பா அம்மா அவளுக்கு நாகம்மைன்னு சரியாத்தான் பேரு வச்சிருக்காங்க. பாம்பு விஷத்தைக் கக்கற மாதிரிதானே பேசறா அவ!" என்று சொல்லியிருக்கிறாள்.

நல்லவேளை! இது நாகம்மையின் காதுகளுக்கு எட்டவில்லை. எட்டியிருந்தால் தன் தங்கை சொன்னது எவ்வளவு உண்மை என்று இன்னொரு முறை நிருபித்திருப்பாள்!

அவள் கணவன் சண்முகம் அவள் பேச்சைச் சகித்துக்கொண்டு, வேறு வழியின்றி அவளுடன் குடித்தனம் நடத்தி வந்தான்.

அவர்களுடைய 12 வயது மகள் சுமதி மட்டும்தான் தன் தாய்க்கு ஈடு கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பவள். "ஏம்மா இப்படி சண்டை போடற மாதிரி பேசிக்கிட்டிருக்கே?" என்று அம்மாவைப் பலமுறை கடிந்து கொண்டிருக்கிறாள்.

"உனக்கு என்னடி தெரியும்? எனக்கு புத்தி சொல்ல வந்துட்ட!" என்று பதிலடி கொடுப்பாள் நாகம்மை.

ன்று சுமதி பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தபோது நாகம்மை தன் கணவனைப் பிடி பிடி என்று பிடித்துக் கொண்டிருந்தாள்.

"ஏங்க, எத்தனை வருஷமா கடைக்குப் போயி காய், பழம் எல்லாம் வாங்கிக்கிட்டு வந்துக்கிட்டிருக்கீங்க! இன்னும் பழமாப் பாத்து வாங்க உங்களுக்குத் தெரியலியே! எப்படித்தான் உங்க அம்மா உங்களை இப்படித் துப்பு இல்லாதவரா வளத்தாங்களோ தெரியல!"

"என்னம்மா விஷயம்?" என்றாள் சுமதி.

"இங்க பாரு உங்கப்பா வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்திருக்கிற லட்சணத்தை! வாழைப்பழம் வாங்கிட்டு வரச் சொன்னா வாழைக்காய் வாங்கிக்கிட்டு வந்திருக்காரு. இதைச் சாப்பிட முடியாது. பொறியல்தான் பண்ண முடியும்"

"அப்ப பொறியல் பண்ணிடு!" என்றாள் சுமதி.

"எரிச்சலைக் கிளப்பாதேடி. பாதிப்பழமா இருந்தா, பொறியலும் பண்ண முடியாது, பழமா சாப்பிடவும் முடியாது."

"அப்ப ரெண்டு நாள் வச்சிருந்து, பழுத்தப்பறம் சாப்பிடு!" என்றாள் சுமதி.

"ரெண்டு நாள் கழிச்சு சாப்பிடறதுக்கா இன்னிக்கு வாங்கிக்கிட்டு வரச் சொன்னேன்?"

"இல்லை நாகம்மை! போன தடவை வாங்கின பழமெல்லாம் சீக்கிரமே அழுகிப் போயிடுச்சுன்னு குத்தம் சொன்னே! அதுதான் கொஞ்சம் காவெட்டா வாங்கிக்கிட்டு வந்தேன்" என்றான் சண்முகம்.

"அதுக்காக இவ்வளவு காயாவா வாங்கறது? கடிக்கவே முடியலை அவ்வளவு காயா இருக்கு. வாயெல்லாம் துவர்க்குது" என்றாள் நாகம்மை.

"ஏம்மா வாழைப்பழம் காயா இருந்தா துவர்ப்பா இருக்கும்னு சொல்றியே, அதுமாதிரிதானே, நீ சண்டை போடற மாதிரி பேசறது மத்தவங்களுக்கு வருத்தமா இருக்கும்?" என்றாள் சுமதி, தான் பள்ளியில் படித்த குறளை நினைவு கூர்ந்தவளாக.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

பொருள்:  
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் கடிய சொற்களைப் பயன்படுத்துவது பழத்தை விட்டு விட்டுக் காயைப் பறிப்பது போன்றதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                    காமத்துப்பால்






















No comments:

Post a Comment