About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, July 7, 2015

26. அவள் ஒரு சரித்திரம்!

கிருஷ்ணமூர்த்தி தன் இள வயதில் இறந்து போனபோது அவன் மனைவி அலமேல் மங்காவுக்கு அவன் விட்டுச் சென்ற சொத்துக்கள் மூன்று வயதில் ஒரு பையனும், ஒரு வயதில் ஒரு பெண்ணும்தான்.

"என்ன செய்யப் போகிறாய்" என்றான் அவள் அண்ணன் கார்த்திகேயன். "பேசாமல் என் வீட்டுக்கு வந்து விடு. உன் குழந்தைகளை நான் படிக்க வைக்கிறேன்" என்றான். அவன் மனைவி உமா மௌனமாக இருந்தாள்.

"அது சரியாக வராது. நான் ஏதாவது வேலைக்குப் போகிறேன்" என்றாள் மங்கா.

"உனக்கு என்ன வேலை கிடைக்கும்?" என்று ஆரம்பித்த கார்த்திகேயன் மனைவியின் முறைப்பைக் கவனித்து விட்டு, "சரி, வேலை கிடைக்கும் வரை என் வீட்டில் இருந்து கொள். உன்னால் எப்படி வாடகை கொடுக்க முடியும்?" என்றான்.

"அவர் ஆஃபிஸிலிருந்து ஏதாவது பணம் வருமா?" என்றாள் உமா.

"அவர் வேலைக்குப் போய் சில வருஷங்கள்தானே ஆகின்றன? அதனால் ஒன்றும் வர வாய்ப்பு இல்லை" என்ற மங்கா, "பரவாயில்லை அண்ணா. நான் என் வீட்டிலேயே இருந்து கொள்கிறேன். எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா என்று பார்" என்றாள்.

துக்கம் கேட்க வந்த வீட்டுக்காரரிடம், "சார்! உங்களிடம் ஆறு மாதம் அட்வான்ஸ் இருக்கிறது. எனக்கு மூன்று மாதம் அவகாசம் கொடுங்கள். அதற்குள் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்கிறேன். இந்த வீட்டில் தொடர்ந்து இருப்பதானால் மூன்று மாத வாடகையை அப்புறம் கொடுத்து விடுகிறேன்" என்றாள்.

வீட்டுக்காரர் கொஞ்சம் தயங்கி விட்டு "சரி" என்று சொல்லி விட்டுப் போனார்.

அடுத்த இரண்டு நாட்களில் கார்த்திகேயன் இரண்டு மூன்று முறை வந்தான். அவனுக்குத் தெரிந்த இடங்களில் சமையலுக்கும், வீட்டு வேலைக்கும் ஆள் தேவைப்படுவதாகச் சொன்னான். "அப்புறம் சொல்கிறேன் அண்ணா" என்று அவனை அனுப்பி விட்டாள் மங்கா.

இரண்டு நாள் கழித்து அவள் கணவன் வேலை செய்த அலுவலகத்துக்குப் போனாள். "சார், எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுக்க முடியுமா?" என்றாள்.

"என்ன படித்திருக்கிறீர்கள்?" என்றார் மானேஜர்.

"நான் அதிகம் படிக்கவில்லை சார். என் வீட்டில் பத்தாவதோடு என் படிப்பை நிறுத்தி விட்டார்கள். ஆனால் எந்த வேலையானாலும் சீக்கிரம் கற்றுக் கொண்டு செய்து விடுவேன். எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்களேன்' என்றாள்.

"உங்களுக்கு ஏற்ற வேலை இங்கே இல்லையே! அத்துடன் நாங்கள் யாரையும் வேலைக்கு எடுப்பதானால் பம்பாயில் இருக்கும் எங்கள் தலைமை அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும்"

"சார், நான் பம்பாய்க்குப் போய் உங்கள் தலைமை அலுவலகத்தில் கேட்டுப் பார்க்கட்டுமா?" என்றாள்.

மானேஜர் சற்று வியப்புடன் அவளைப் பார்த்தார். "சரி. நாளைக்கு எங்கள் ஜெனரல் மானேஜர் வருகிறார். நாளைக்கு வாருங்கள். அவரிடம் பேசிப் பார்க்கிறேன்."

அடுத்த நாள் ஜி.எம் (ஜெனரல் மானேஜர்) முன்பு கொண்டு நிறுத்தப்பட்டவள், தான் படிப்பில் சூட்டிகையாக இருந்ததையும், தனக்கு எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்பதையும், தன் விடாமுயற்சியையும், கடின உழைப்பையும் பற்றிப் பத்து நிமிடங்கள் பேசினாள். 

அவளைத் தடுத்து நிறுத்த முயன்ற பிராஞ்ச் மானேஜரை சைகையால் அடக்கி விட்டு அவள் பேசிய தமிழில் ஒரு வார்த்தை கூடப் புரியாத ஜி.எம் பொறுமையாக அவள் பேச்சைக் கேட்டார்.

பிராஞ்ச் மானேஜரிடம், "ஒன்று கவனித்தீர்களா? இந்தப் பெண்மணி தன்னிடம் இரக்கம் காட்டச் சொல்லிக் கேட்கவில்லை. தன் குடும்பக் கஷ்டங்களைச் சொல்லிக் கெஞ்சவில்லை" என்றார் ஜி.எம்.

"இந்தப் பெண்மணி தமிழில் பேசியது உங்களுக்கு எப்படிப் புரிந்தது?" என்றார் பிராஞ்ச் மானேஜர்.

"அவர்கள் பேசிய தொனியிலிருந்து புரிந்து கொண்டேன். இந்தப் பெண்மணியிடம் அசாத்தியமான தன்னம்பிக்கையும் உந்துதலும் இருக்கின்றன. இவர் நமக்குப் பயனுள்ளவராக இருப்பார் என்று நினைக்கிறேன். இவருக்கு ஏதாவது வேலை கொடுக்க முடியுமா என்று பாருங்கள்."

மானேஜர் கொஞ்சம் யோசித்து விட்டு, "வரும் கடிதங்களைப் பிரித்துத் தனித் தனி டிபார்ட்மென்ட்டுகளுக்கு அனுப்புவது, டெஸ்பாட்ச் போன்ற வேலைகளை டைப்பிஸ்ட்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இங்கே டைப்பிஸ்டுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் தன்னால் முடியவில்லை என்று அந்தப் பெண் புலம்பிக் கொண்டிருக்கிறாள். அத்துடன் அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி விட்டதால் இரண்டு மூன்று மாதங்களில் வேலையை விட்டுப் போய் விடுவாள். வரும் கடிதங்களைப் பிரித்து டிபார்ட்மென்ட்களுக்கு அனுப்புவது மற்றும் டெஸ்பாட்ச் வேலையை இவர்களுக்குக் கொடுக்கலாம். எப்படிச் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்" என்றார் மானேஜர்.

"குட் ஐடியா" என்ற ஜி. எம். மங்காவைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு 'யூ ஆர் அப்பாயின்ட்டட்" என்றார்.

"தாங்க் யூ சார்" என்றாள் மங்கா முதன்முதலாக ஆங்கிலத்தில்.

செய்யும் வேலையில் ஈடுபாடு, விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், கடின உழைப்பு ஆகிய குணங்களால் மங்கா விரைவிலேயே தனது வேலையைத் திறமையாகச் செய்யத் தொடங்கி விட்டாள். 

கடிதங்கள் பிரிவில் இருந்ததால் அலுவலகத்துக்கு வரும் கடிதங்கள், அலுவலகத்திலிருந்து செல்லும் கடிதங்கள் ஆகியவற்றைப் படித்து அந்த அலுவலகத்தில் நடக்கும் பணிகள் குறித்த விவரங்களை விரைவில் புரிந்து கொண்டாள்.

டைப்பிஸ்ட் பெண் வேலையை விடும் மனநிலையில் இருந்ததாலும் பெரும்பாலும் வேலை இல்லாமல் சும்மா இருந்ததாலும் அவள் உதவியுடன் தட்டச்சு இயந்திரத்தில் ஓரிரு விரல்களைப் பயன்படுத்தி ஓரளவு டைப் அடிக்கவும் பழகிக் கொண்டாள் மங்கா. 

டைப்பிஸ்ட் பெண் வேலையை விட்டு விலகிய சமயத்தில் அவள் வேலையையும் தானே செய்வதாக மங்கா கூறியதை மானேஜர் ஏற்றுக்கொண்டார்.

ஒரு முறை தலைமை அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம் பற்றிய சர்ச்சை வந்தது. அந்தக் கடிதம் வரவேயில்லை என்று ஒரு ஊழியர் சாதித்தார். மங்கா தன் நினைவிலிருந்து அந்தக் கடிதத்தில் இருந்த விஷயத்தைச் சொன்னதுடன், தனது ரிஜிஸ்தரில் அந்தக் கடிதம் வந்திருப்பதைப் பதிவு செய்ததையும் தேடிக் கண்டு பிடித்துக் காட்டினாள். பிறகு அந்தக் கடிதம் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டது. 

இந்தச் சம்பவம்  அந்த அலுவலகத்தில் ஒரு திறமையான ஊழியர் விழித்துக் கொண்டு செயல்படுவதை அனைவருக்கும் உணர்த்தி மங்காவின் மீது தனி மதிப்பு ஏற்பட வைத்தது.

ங்காவின் பையனைப் பள்ளியில் சேர்க்கும் சமயம் வந்தது. மங்கா நகரின் மிகச் சிறந்த, ஆனால் நன்கொடை வாங்காத பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் பட்டதாரிப் பெற்றோர்களின் பிள்ளைகளைத்தான் அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

விண்ணப்பம் போட்டு விட்டு ஒரு சில நாட்களில் மங்கா பள்ளி முதல்வரைச் சந்திக்க நேரில் சென்றாள். முதலில் முதல்வர் யாரையும் பார்க்க மாட்டார் என்று சொல்லி விட்டார்கள். 

மங்கா முதல்வர் அறைக்கு வெளியே பல மணி நேரம் நின்று கொண்டிருந்தாள். இரண்டு மூன்று முறை வெளியே வந்தபோது அவளை கவனித்த முதல்வர் அவளை உள்ளே அழைத்தார்.

"மேடம்! உங்கள் பள்ளியின் அணுகுமுறை எனக்குப் புரிகிறது. நான் அதிகம் படிக்காதவள்தான், ஆனால் எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் என்று என் கணவர் வேலை செய்த அலுவலகத்தில் கேட்டேன். அவர்களும் கொடுத்தார்கள். இரண்டு மாதங்களில் வேலையைக் கற்றுக் கொண்டு ஒரு பட்டதாரி செய்யும் வேலைகளைச் செய்கிறேன்.

"அதுபோல் நீங்களும் எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் என் பையன் சிறப்பாகப் படிக்க என்னால் முடிந்ததை எல்லாம் செய்வேன். என் பையனுக்கு வீட்டில் படிப்பு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு எனக்குக் கல்வி அறிவு இல்லைதான். அதை நீங்கள் எதிர் பார்க்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அவன் எப்படிப் படிக்கிறான் என்று கூர்ந்து கவனித்து அவனை ஊக்குவித்து வழிநடத்த என்னால் முடியும்" என்றாள்.

முதல்வர் யோசித்தார்.

"உங்கள் பள்ளியில் என் பையனைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்த ஏரியாவிலேயே வீடு பார்த்திருக்கிறேன். அட்வான்ஸ் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி" என்றாள் மங்கா.

"அட்வான்ஸ் கொடுத்து விடுங்கள்" என்றார் முதல்வர்.

அலுவலகத்துக்குப் போனதும் அனுமதி கேட்டதை விட அதிகமான நேரம் தாமதமாகி விட்டதற்காக விளக்கம் சொல்வதற்காக மானேஜரின் அறைக்குப் போனாள் மங்கா.

அவள் "சாரி சார்" என்று ஆரம்பித்ததுமே அவளைக் கையமர்த்தி விட்டு, "கங்கிராசுலேஷன்ஸ் மிஸஸ் மங்கா. உங்கள் பையனுக்கு ஸ்கூலில் அட்மிஷன் கிடைத்து விட்டதாமே!" என்றார்.

"உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"பிரின்ஸிபால் ஃபோன் செய்தார்."

"எதற்கு? இதைச் சொல்வதற்காகவா?" என்றாள் மங்கா நம்ப முடியாமல்.

"அதற்காக இல்லை. உங்கள் சம்பளத்திலிருந்து உங்களால் ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியுமா என்று தெரிந்து கொள்ளத்தான்!"

"ஐயையோ!"

"பதறாதீர்கள். நான் சொன்னேன் 'மேடம், உங்கள் பள்ளிக் கட்டணம் எவ்வளவு என்று எனக்குத் தெரியாது. திருமதி மங்காவின் சம்பளம் எவ்வளவு என்றும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் என்னால் ஒன்று மட்டும் சொல்ல முடியும். நீங்கள் அவர் பையனுக்கு உங்கள் பள்ளியில் இடம் கொடுத்து விட்டால், அவர் எப்படியும் ஃபீஸ் கட்டி விடுவார்' என்று. முதல்வர் சிரித்து விட்டு ஃபோனை வைத்து விட்டார்."

"ரொம்ப நன்றி சார்" என்றாள் மங்கா கண்ணில் நீர் தளும்ப.

"ஆமாம். அந்தப் பள்ளியில் கட்டணம் ரொம்ப அதிகமாயிற்றே? எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?"

"அதுதான் சார் எனக்கும் புரியவில்லை. நீங்கள் பள்ளி முதல்வரிடம் சொன்னது போல்  எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என்ற அசட்டு தைரியத்தில்தான் இருக்கிறேன்."

"எல்.கே.ஜி,  யூ.கே.ஜி வரை சமாளித்து விடுங்கள். அப்புறம் நான் ஒரு யோசனை சொல்கிறேன்."

ரண்டு வருடம் கழித்து மங்கா மானேஜரிடம் கேட்டாள். "சார். என் பையன் இப்போது முதல் வகுப்புக்குப் போகிறான். எல்.கே.ஜி, யூ.கே.ஜி.யை எப்படியோ சமாளித்து விட்டேன். இந்த வருடத்திலிருந்து கட்டணம் அதிகமாக இருக்கும். என் பெண்ணை வேறு எல்.கே.ஜியில் சேர்க்க வேண்டும். அதே ஸ்கூலில் சேர்த்துக் கொள்வதாகச் சொல்லி விட்டார்கள். நீங்கள் ஏதோ யோசனை சொல்வதாகச் சொன்னீர்களே!"

"இரண்டு வருடத்தில் நீங்கள் கம்பெனியில் வேகமாக முன்னேறி என்னை எல்லாம் ஓவர்டேக் பண்ணி ஜி.எம். ஆகி விடுவீர்கள் என்று நினைத்து அப்படிச் சொன்னேன். ஆனால் நீங்கள் ஒரு ப்ரமோஷன்தானே வாங்கி இருக்கிறீர்கள்?" என்றார் மானேஜர் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.

மங்காவுக்கு அழுகை வரும்போல் இருந்தது. "சார்" என்றாள் தழுதழுத்த குரலில்.

"அப்செட் ஆகி விடாதீர்கள். சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருஷத்தில் ப்ரமோஷன் வாங்கியதே இந்தக் கம்பெனி வரலாற்றில் நீங்கள் ஒருவர்தான்!"

"உங்கள் ஊக்குவிப்பும் ஆதரவும்தான் சார் காரணம்."

"இல்லை மங்கா. உங்கள் ஊக்கமும் அசுர உழைப்பும்தான் காரணம். சரி.  உங்கள் மகன் விஷயத்துக்கு வருவோம். சில பிரைவேட் டிரஸ்ட்கள் இருக்கின்றன. அவை சத்தம் போடாமல் பலருக்குக் கல்வி உதவி அளித்து வருகின்றன. ஒரு டிரஸ்ட்டின் விலாசம் தருகிறேன். அங்கே போய்ப் பாருங்கள். இந்த டிரஸ்டைப்பற்றி என் நண்பன் ஒருவன் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ஆனால் இதை நான் சொன்னதாக அவர்களிடம் சொல்லக் கூடாது. சொன்னால் என் நண்பனுக்கு தர்ம சங்கடம் ஆகி விடும்" என்றார் மானேஜர்.

"நிச்சயம் சொல்ல மாட்டேன் சார்" என்று அவரிடம் விலாசம் வாங்கிக் கொண்டு அந்த டிரஸ்டுக்குப் போனாள் மங்கா.

நிர்வாகியைச் சந்தித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி, "இந்த டிரஸ்ட் பற்றி யார் உங்களுக்குச் சொன்னார்கள்?"

"எனக்குத் தெரிந்த ஒருவர் சொன்னார் சார்."

"நாங்கள் பெரும்பாலும் எங்களுக்குத் தெரிந்த குடும்பங்களுக்குத்தான் உதவி செய்து வருகிறோம். உங்களுக்கு எங்களைப் பற்றி யார் சொன்னது என்று சொன்னால்தான் உங்களுக்கு உதவ முடியுமா என்று பார்க்க முடியும்" என்றார்.

"மன்னிக்க வேண்டும் சார். உங்கள் டிரஸ்ட் பற்றி என்னிடம் சொன்னவர் அவர் சொன்னதாகச் சொல்லக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பெயரை என்னால் சொல்ல முடியாது."

"அப்படியானால் உங்களுக்கு என்னால் உதவ முடியாது."

"நன்றி சார். தொந்தரவு கொடுத்ததற்கு மன்னியுங்கள்" என்று எழுந்தாள் மங்கா.

அறைக் கதவைத் திறந்து கொண்டு அவள் வெளியேறும் தருவாயில் நிர்வாகி அவளை அழைத்தார். "உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். உங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்" என்றார்.

மங்கா தன் வேலை, குடும்பம் ஆகியவற்றைப் பற்றிச் சொன்னதும், "சரி. உங்கள் பையனுக்கு நாங்கள் ஸ்காலர்ஷிப் தருகிறோம். ஸ்கூல் ஃபீஸ், புத்தகச் செலவு என்று எல்லாவற்றுக்கும் சேர்த்து ஸ்கூலுக்கே நேரே பணத்தைச் செலுத்தி விடுவோம். ஆனால் ஒரு நிபந்தனை. உங்கள் பையன் ஒவ்வொரு வருடமும் எழுபத்தைந்து சதவீதத்துக்கு மேல்  மதிப்பெண்கள் பெற வேண்டும்"

"நல்லது சார். இந்த நிபந்தனை என் பையனுக்கு நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்கு ஒரு மோடிவேஷனாக இருக்கும்." 

"பொதுவாக யாரும் இந்த நிபந்தனையைக் கேட்டால், 'ஏதாவது ஒரு வருடம் எழுபத்தைந்து சதவீதம் பெறாவிட்டால் ஸ்காலர்ஷிப் நின்று போய் விடுமே' என்று கவலைப் படுவார்கள். ஆனால் நீங்கள் இதை பாஸிடிவாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்... ஆமாம், உங்கள் பெண்ணையும் ஸ்கூலில் சேர்க்கப் போகிறீர்களே, அவளுக்கும் ஸ்காலர்ஷிப் தேவைப்படும் இல்லையா?"

"ஆமாம் சார். ஆனால் அவளுக்கும் எப்படி உங்களிடமே கேட்க முடியும்?"

"கரெக்ட்தான். நாங்கள் ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் ஸ்காலர்ஷிப் கொடுப்போம். ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்குத் தெரிந்த இன்னொரு டிரஸ்டுக்கு உங்கள் பெண்ணுக்காக சிபாரிசு செய்கிறேன்."

"சார். நீங்கள் வயதில் பெரியவர். உங்கள் காலில் விழுந்தால் தவறில்லை" என்று தன் காலில் விழப் போன மங்காவைத் தடுத்தார் நிர்வாகி.

ல வருடங்கள் ஓடி விட்டன. மங்காவின் பையனும் பெண்ணும் படிப்பிலும், மங்கா தன் அலுவலகத்திலும் பல படிகள் முன்னேறிச் சென்று விட்டனர். மங்கா ஒரு மூத்த அதிகாரி என்ற நிலைக்கு உயர்ந்து விட்டாள். அவளை வேலையில் அமர்த்திய பிராஞ்ச் மானேஜர் இப்போது தலைமை அலுவலகத்தில் எக்ஸிக்யூடிவ் டைரக்டர் என்ற மிக உயர்ந்த பதவிக்குப் போய் விட்டார்.

மங்காவின் பையன் கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டுக்கு வந்து அவனுக்கு காம்பஸ் தேர்வில் நல்ல வேலையும் கிடைத்து விட்டது. மங்காவின் பெண் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.

ழக்கமாக முதல் ஆளாக அலுவலகத்துக்கு வந்து விடும் மங்கா அன்று அலுவலகத்துக்கு வரவில்லை. பிராஞ்ச் மானேஜர் உதவி பிராஞ்ச் மானேஜரைத் தன் அறைக்கு அழைத்தார்.

"ஒரு அதிர்ச்சியான செய்தி. மங்கா மாரடைப்பால் இறந்து விட்டாராம். இப்போதுதான் எனக்கு ஃபோன் வந்தது" என்றார்.

"என்னால் நம்ப முடியவில்லையே சார்! ஓயாமல் இயங்கிக் கொண்டிருந்த ஒரு இயந்திரம் திடீரென்று நின்று விட்டது போல் இருக்கிறது."

"இதை நான் உடனே ஈ.டிக்குத் தெரிவிக்க வேண்டும். மங்கா வேலையில் சேர்ந்தபோது இங்கே பிராஞ்ச் மானேஜராக இருந்தவர் அவர்தான்" என்று சொல்லித் தொலைபேசியில் ஈ.டியுடன் பேசினார்.

அவர் பேசி முடித்ததும், "ஈ.டி. என்ன சொன்னார்?" என்று கேட்டார் உதவி மானேஜர்.

"ஒரு நிமிஷம் அவருக்குப் பேச்சே வரவில்லை. 'எ ரிமார்க்கபிள் உமன்' என்றார். அதற்கு மேல் எதுவும் சொல்லத் தோன்றவில்லை அவருக்கு."

இருக்கையிலிருந்து எழ முயன்ற உதவி மானேஜரை, "ஒரு நிமிஷம்" என்று சொல்லி நிறுத்திய மானேஜர், "மங்கா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் நாளை நம் கம்பெனியின் எல்லா அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும் என்று ஈ.டி. அறிவித்திருக்கிறார். சர்க்குலர் அனுப்பி விடுங்கள்" என்றார்.

"ஆச்சரியமாக இருக்கிறது சார். இது போல் வேறு எந்த ஊழியர் விஷயத்திலும் நடந்ததில்லையே" என்றார் உதவி மானேஜர்.

"உண்மைதான். மங்கா  சரித்திரம் படைத்திருக்கிறார். அவரே ஒரு சரித்திரம்தான்" என்றார் பிராஞ்ச் மானேஜர்.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 3
நீத்தார் பெருமை
(நீத்தார் - புலன்களை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி நெறியோடு வாழ்பவர்)
குறள் 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

பொருள்:
மற்றவர்களால் செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவர்களைப் பெரியோர் என்று கருத வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்ய இயலாதவர்கள் சிறியோர்களாகத்தான் கருதப்படுவர்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

2 comments:

  1. கன கச்சிதமான கதை..
    மங்காவின் கதாபாத்திரத்தில் ஒரு புதுமைப் பெண்ணை தரிசித்தேன். அவர் மரணம் படித்து உண்மையில் துயர் கொண்டேன்.
    குறளுக்கு மிகப் பொருத்தமான கதை.
    நன்றிகள் கோடி..

    ReplyDelete
  2. மிக மிக நன்றி. எனக்கே மிகவும் படித்த கதை, மற்றும் பாத்திரம் இது.

    ReplyDelete