About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, July 20, 2015

39. போலிகள் ஜாக்கிரதை!

சோமசுந்தரம் பல வருடங்களாக ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தார். அவர் கடையில் பொருட்கள் வாங்கினால் அது ஒரிஜினலாக இருக்கும் என்ற பெயர் இருந்ததால் அவரிடம் பல வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வந்தனர்.

அவரது வியாபாரம் சிறிய முதலீட்டில் நடைபெற்றதாலும், லாப சதவீதம் குறைவு என்பதாலும் அவருக்கு சுமாரான வருமானமே கிடைத்து வந்தது. உண்மையாகக் கணக்குக் காட்டி விற்பனை வரி, வருமான வரி ஆகிய வரிகளை முறையாகக் கட்டி வந்தார். இதுவும் அவர் குறைவான வருமானத்துக்கு ஒரு காரணம்.

ஆயினும் சோமசுந்தரம் தனது சீரான வியாபாரம் குறித்தும், பெரிய விற்பனையாளர்கள் கூட அவர் பெயரைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்குத் தனக்கு இருக்கும் நற்பெயர் குறித்தும் மனத் திருப்தியுடனேயே இருந்தார்.

ஒருமுறை அவரது பழைய நண்பர் வீரமுத்து அவர் கடைக்கு வந்தார். நீண்ட நாட்கள் கழித்துச் சந்தித்ததால் இருவரும் பல விஷயங்கள் பற்றி சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

பேச்சு வியாபாரம் பற்றித் திரும்பியது. சோமசுந்தரத்தின் வியாபாரம் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்த பின் வீரமுத்து சொன்னார்: "என்னப்பா பிழைக்கத் தெரியாதவனா இருக்கியே? இத்தனை வருஷமா வியாபாரம் செஞ்சதுக்கு நீ இந்த ஏரியாவில ஒரு பெரிய கட்டடத்தையே வாங்கியிருக்கணும். ஆனா நீ இன்னும் வாடகை இடத்துல இருந்துக்கிட்டு பெட்டிக்கடை மாதிரி நடத்திக்கிட்டிருக்கே. பிளாட்ஃபாரத்தில வியாபாரம் செய்யறவங்க கூட கிடுகிடுன்னு முன்னுக்கு வந்துடறாங்க. நீ இன்னும் இப்படியே இருக்கியே!"

"என்ன செய்யறது? அதிகமா முதலிடு செய்ய என்கிட்டே பணம் இல்லே. வர லாபம் குடும்பச் செலவுக்குத்தான் சரியா இருக்கு. ஆனா எனக்கு இதில ஒண்ணும் வருத்தம் இல்லை. எனக்கு மார்க்கெட்டில நல்ல பேரு இருக்கு. வர வருமானம் எனக்குப் போதும்."

"உன் லாபத்தை சுலபமா அதிகரிக்க நான் ஒரு வழி சொல்றேன்" என்று வீரமுத்து தனது யோசனையைச் சொன்னார்.

"அதெல்லாம் வேண்டாம்ப்பா. டியூப்ளிகேட் பார்ட் எல்லாம் வித்தா என் பேர் கெட்டுப் போயிடும். என்னோட நல்ல பெயர்தான் எனக்கு இருக்கிற ஒரே சொத்து." என்றார் சோமசுந்தரம்.

"நீ பல பார்ட்களை விக்கறே. நான் சொல்றது ஒரு பார்ட்டைப் பத்தித்தான். இந்த பேரிங்கைப் பத்தி மட்டும்தான். உன் மொத்த பேரிங் விற்பனையில ஒரு பத்து சதவீதம் டியூப்ளிகேட் பேரிங்கைக் கலந்து வித்துடு. பேரிங் எல்லாம் அடிக்கடி உடையறது சகஜம்தான். சரியா ஆயில் போடாதது, வண்டியை ஒழுங்கா ஒட்டாதது மாதிரி காரணங்களால கூட பேரிங் உடையும்.

"பேரிங் உடைஞ்சா பெரும்பாலும் அதை யாரும் பெரிசு படுத்த மாட்டாங்க. அதோட இந்த டியூப்ளிகேட் பேரிங் எல்லாம் உனக்கு பில் இல்லாமலேயே சப்ளை பண்ண நான் ஏற்பாடு செய்யறேன். நீயும் பில் கேட்காத கஸ்டமர்களாகப் பாத்து இந்த பேரிங்குகளைத் தள்ளி விட்டுடு. வாங்கறது, விக்கறது ரெண்டுமே கேஷ். ஒங்கிட்ட ரிகார்டே இருக்காது.

"யாராவது வந்து பேரிங் உடைஞ்சு போச்சேன்னு கேட்டா அது உன் கடையில வாங்கினது  இல்லேன்னு அடிச்சுச் சொல்லிடு. நூத்தில  ஒண்ணு ரெண்டு பேர்தான் அப்படி வந்து கேட்பாங்க. பில் கொண்டு வாங்க, மாத்தித் தரேன்னு சொன்னா போயிடுவாங்க. பில் வாங்கினமா இல்லையான்னே நிறைய பேருக்கு ஞாபகமே இருக்காது."

சோமசுந்தரம் "அதெல்லாம் வேண்டாம்ப்பா!" என்று முதலில் மறுத்தார். வீரமுத்து விடாமல் அவரிடம் பேசியதைத் தொடர்ந்து 'கொஞ்ச நாள் செஞ்சுதான் பாப்பமே! என்ன ஆயிடப் போவுது? ஏதாவது பிரச்னை வரும் போலத் தெரிஞ்சா உடனே நிறுத்திடலாம். நாம என்ன அக்ரிமென்ட்டா போடப் போறோம்?' என்று நினைத்து "சரி" என்றார்.

சோமசுந்தரம் டியூப்ளிகேட் பேரிங்குகளை விற்பனை செய்ய ஆரம்பித்து  இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. வீரமுத்து சொன்னது போல் வருமானம் அதிகரித்தது. பிரச்னை எதுவும் வரவில்லை.

ஒரு நாள் ஒரு உடைந்த பேரிங்கைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவர் வந்தார். "சார், இதை உங்க கடையிலதான் வாங்கினேன். ஒரு வாரத்துக்குள் உடைஞ்சு போச்சு. மெக்கானிக் இது டியூப்ளிகேட்னு சொல்றாரு" என்றார்.

சோமசுந்தரம் தன் பதட்டத்தை மறைத்துக்கொண்டு, பேரிங்கைக் கையில் வாங்கி உற்றுப் பார்த்தார். "ஆமாம். இது டியூப்ளிகேட் பேரிங்தான். ஆனா இது எங்க கடையில வாங்கினது இல்லையே. நாங்க ஒரிஜினல்தான் விக்கறது" என்றார்.

"இல்லை சார். நான்தான் வாங்கினேன். உங்க கடையிலதான் வாங்கினேன்."

"சரி. பில் குடுங்க. மாத்திக் கொடுக்கிறேன்."

"நீங்க பில் குடுக்கவே இல்லையே!"

"சாரி சார். நாங்க பில் இல்லாம விக்கறது இல்லை" என்றார் சோமசுந்தரம்.

வந்தவர் போய் விட்டார்.

இதற்குப் பிறகு சோமசுந்தரம் டியூப்ளிகேட் பேரிங்குகளை விற்பதை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைத்திருந்தார். வேறு யாரும் வந்து எதுவும் கேட்கவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டும் அவற்றை விற்கத் தொடங்கினார்.

ரு மாதத்துக்குப் பிறகு, அவருக்கு பார்ட்கள் சப்ளை  செய்யும் மும்பை நிறுவனத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவரிடம் அடிக்கடி பேசும் அதிகாரிதான் பேசினார். ஆனால் இந்த முறை, ''எப்படி இருக்கிறீர்கள்?' என்ற விசாரிப்புகள் இல்லாமல் பேச்சைத் துவங்கினார்.

"மிஸ்டர் சோமசுந்தரம். நீங்கள் இருபது வருடங்களாக எங்கள் பொருட்களை விற்று வருகிறீர்கள். இதுவரை நம் இருவரிடையேயும் எந்தப் பிரச்னையும் எழுந்ததில்லை. ஆனால் சமீபத்தில் நீங்கள் டியூப்ளிகேட் பாகங்கள் விற்பதாக எங்களுக்கு ஒரு புகார் வந்தது.

"உங்களிடம் பில் இல்லாமல் பேரிங் வாங்கிய ஒருவர் பேரிங் உடைந்ததைப் பற்றி உங்களிடம் புகார் செய்தபோது, நீங்கள் அது  உங்கள் கடையில் வாங்கியதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர் இது பற்றி எங்களிடம் புகார் செய்தபோது, முதலில் நாங்கள் அதை நம்பவில்லை. பிறகு அந்தப் புகார் உண்மையா என்று விசாரிப்பதற்காக எங்கள் ஆட்கள் சிலரை அனுப்பி  உங்கள் கடையில் இருந்து பேரிங் வாங்கச் செய்தோம். அவர்களில் இரண்டு பேருக்கு பில் இல்லாமல் நீங்கள் ட்யூப்ளிகேட் பேரிங் கொடுத்திருக்கிறீர்கள்."

"சார். இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. எனக்குத் தெரியாமல் என் கடையில் வேலை செய்யும் ஆட்கள் யாராவது இதைச் செய்திருக்கலாம். நான் விசாரிக்கிறேன். இதை உடனே நிறுத்தச் செய்கிறேன்..."

"தேவையில்லை மிஸ்டர் சோமசுந்தரம். நாங்கள் தீர விசாரித்து விட்டோம். உங்களுக்கு இந்த டியூப்ளிகேட் பேரிங்குகளை சப்ளை செய்வது யார், ஒரு மாதத்துக்கு எத்தனை பேரிங் வாங்குகிறீர்கள் என்ற எல்லா விவரங்களையும் நாங்கள் சேகரித்து விட்டோம். இன்றிலிருந்து நீங்கள் எங்கள் நிறுவனத்தின்  டீலர் இல்லை. இது பற்றி எங்களிடமிருந்து முறையான கடிதம் உங்களுக்குத் தபாலில் வரும். ஏற்கெனவே நாங்கள் சப்ளை செய்த பொருட்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தைக் கழித்துக்கொண்டு மீதமுள்ள உங்கள் டீலர் டெபாசிட் தொகையை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்."

"சார். தெரியாமல் தவறு  செய்து விட்டேன். இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள். இனி இந்தத் தவறு நேராது. இருபது வருடங்களாக நான் நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறேன்..."

"என் தனிப்பட்ட வருத்தம் அதுதான் சார். இருபது வருடங்களாக நீங்கள் காப்பாற்றி வந்த நேர்மையை இரண்டே மாதங்களில் தொலைத்து விட்டிர்களே! உங்களோடு இத்தனை வருடங்கள்  பழகியவன் என்ற வகையில் தனிப்பட்ட முறையில் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குட் லக்."

உரையாடல் முடிந்தது. உரையாடல் மட்டும்தானா?

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 
புறத்த புகழும் இல.

பொருள்:
அறநெறியில் செயல்படுவதன் மூலம் வருவதுதான் இன்பம். அறத்துக்கு மாறாகச் செயல்பட்டால்   நன்மையும்   கிடைக்காது, நற்பெயரையும் இழக்க நேரிடும். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












No comments:

Post a Comment