About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, July 17, 2015

36. இன்றே செய்க!

நாகராஜனுக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தது. ஆசை என்பது பொருத்தமான வார்த்தை இல்லை. ஆனால் இதைப் பற்றிப் பேசும்போதெல்லாம் நாகராஜன், 'எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு ஆசை' என்றுதான் சொல்வார்.

தான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. தன்னுடைய கல்வியறிவு, பண்பாடு, முன்னேற்றம் இவற்றுக்கெல்லாம் தான் படித்த பள்ளிதான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்ற நன்றி உணர்வு அவருக்கு எப்போதுமே உண்டு. அந்த நன்றியை வெளிப்படுத்தும் விதமாகப் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம். ஆனால் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன் சொந்த ஊருக்குப் போனபோது, தான் படித்த பள்ளிக்குச் சென்றார். அப்போது அங்கே தலைமையாசிரியராக இருந்தவரைச் சந்தித்துத் தன்னை ஒரு பழைய மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபோது தலைமையாசிரியர்  ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அந்தப் பள்ளி அரசு உதவி பெறும் தனியார் பள்ளி. அங்கே பத்தாம் வகுப்பு வரை கல்விக் கட்டணம் கிடையாது. ஆனால் பதினொன்றாம் வகுப்புக்கும், பன்னிரண்டாம் வகுப்புக்கும் கல்விக் கட்டணம் உண்டு.

மிகக் குறைந்த கட்டணம்தான் என்றாலும் அங்கே பத்தாவது வரை படித்த மாணவர்கள் பலருக்கு அந்தக் கட்டணத்தைக் கூடக் கட்டிப் படிக்கும் வசதி இல்லை என்பதால் பலர் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விடுவதாகச் சொன்ன தலைமை ஆசிரியர், அவரைப் போன்ற பழைய மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக அளித்தால், அதை வங்கியில் நிரந்தர வைப்புக் கணக்கில் போட்டு அதிலிருந்து வரும் வட்டி மூலம் சில ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அதிலிருந்து பெறலாம் என்றார். தன்னால் முடிந்ததைச் செய்வதாகச் சொல்லி விட்டு நாகராஜன் ஊர் திரும்பினார்.

தான் தொடர்பு வைத்திருக்கும் பள்ளித் தோழர்களை அணுகி இது பற்றிப் பேசினார். அவர்கள் யாரும் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. தன் சொந்த முயற்சியில் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தார். அவரது பொருளாதார நிலை ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தே இருந்தார். மாதாமாதம் ஒரு சிறு தொகை சேமித்துப் பார்த்தார். அது போதாது என்று தெரிந்தது.

இந்நிலையில் அவரது ஒரே மகனின் படிப்பு முடிந்து அவனுக்கு மிக நல்ல வேலை கிடைத்தது. சில மாதங்கள் கழித்து, வேலையில் அவன் நிலை பெற்ற பிறகு அவனிடம் தன் ஆசையைச் சொன்னார்.

"அப்பா! நான் இப்பதான் வேலையில் சேர்ந்திருக்கேன். என்னால இப்ப எதுவும் செய்ய முடியாதே!" என்றான் அவன்.

"நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். நீ இப்ப உன் சொந்தக் கால்ல நிக்கறே. நான் ரிடையர் ஆனதும் வரும் பி.எஃப் பணம் எனக்கும் உன் அம்மாவுக்கும் போதும். இதைத் தவிர, நான் வாலண்டரி பி.எஃபில் கொஞ்சம் பணம் போட்டுட்டு வந்திருக்கேன். அதில ஒரு அஞ்சு லட்ச ரூபாய் வரும். அதை நான் என் பள்ளிக்கூடத்துக்குக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். அதுல உனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே?" என்றார்.

"அப்பா. அது உங்க சேமிப்பு. நீங்க எப்படி வேணும்னா பயன்படுத்திக்கங்க. உங்க சேமிப்புப் பணம் எதையும் நான் எதிர்பார்க்கலே! காலம் முழுக்க உங்களைப் பாத்துக்கறது என்னோட பொறுப்பு" என்றான் மகன்.

"எதையும் நல்லா யோசனை பண்ணிச் செய்யுங்க!" என்றாள் அவர் மனைவி.

நாகராஜன் அலுவலகத்தில் பேசித் தனது வி.பி.எஃப் சேமிப்பில் இருந்த ஐந்து லட்சத்து சொச்சத்தைப் பெற்றார்.

பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னபோது அவர் மகிழ்ந்து, அன்றைய கட்டணங்களின் அடிப்படையில் ஐந்து லட்சம் ரூபாயை நிரந்தர வைப்பில் போட்டால், அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து நான்கு மாணவர்களுக்குக் கட்டணம் செலுத்த முடியும் என்றார். அடுத்த நாள் பாங்க்கில் டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து அனுப்புவதாகச் சொன்னார் நாகராஜன் .

அன்று இரவு நாகராஜனுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்ப் பட்டார். அடுத்த நாள் நினைவு திரும்பியதும், நாகராஜன் மகனிடம் முதலில் கேட்டது பாங்க் டிராஃப்ட் எடுப்பதைப் பற்றித்தான்.

"அதற்கென்ன அப்பா? நீங்கள் குணமாகி வீட்டுக்கு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றான் அவர் மகன்.

"நல்ல காரியங்களைத்  தள்ளிப் போடக்கூடாது. நான் ஏற்கெனவே ரொம்ப டிலே பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். நான் செக்குல கையெழுத்துப் போடறேன். நீ பாங்க்கில போய் டிடி வாங்கி இன்னைக்கே கூரியர்ல அனுப்பிடு!" என்றார்.

"சரி."

டிடி எடுத்து அதைப் பள்ளிக்கு கூரியரில் அனுப்பி விட்டதாக அன்று பிற்பகல் அவரிடம் சொன்னான் அவர் மகன். அதைக் கேட்டதுமே அவர் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. உடல் நிலை சரியாகி விட்டது போல் இருந்தது.

அன்று இரவு நாகராஜன் மருத்துவமனையில் இறந்து போனார்.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத் துணை

பொருள்:
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நற்செயல்களைச் செய்ய வேண்டும். ஒருவர் மறைந்த பிறகு கூட, அவர் செய்த நற்செயல்கள் அவருக்கு அழியாத புகழைத் தரும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












No comments:

Post a Comment