About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, September 5, 2017

99. ஜிராக்ஸ் கடை

காலையில் எழுந்ததுமே ராமநாதனை எரிச்சலூட்டும் சம்பவங்கள் நிகழ ஆரம்பித்து விட்டன.

தினமும் அவர் பேப்பர் படிக்கத் துவங்கும்போதே காப்பி வந்து விடும். ஆனால் இன்று அவர் பேப்பர் படித்து முடித்த பிறகும் காப்பி வரவில்லை.

"நான் எழுந்து இவ்வளவு நேரமாச்சு. இன்னும் ஒரு வாய்க் காப்பிக்கு வழியில்லை!" என்று கத்தினார் பேப்பரைத் தூக்கிப் போட்டபடியே.

"டிகாக்‌ஷன் இறங்கவே இல்லை. நான் என்ன செய்யறது?" என்றாள் அவர் மனைவி பொன்னம்மாள். சற்று நேரம் கழித்துக் காப்பியைக் கொண்டு வைத்தவள், "கோவமாப் பேசறதைக் கொஞ்சம் குறைச்சுக்கங்க" என்றாள்.

"காப்பியை இவ்வளவு நேரம் கழிச்சுப் போட்டுட்டு எனக்கு உபதேசம் வேறயா?" என்று பாய்ந்தார் ராமநாதன்.

பொன்னம்மாள் ஒன்றும் பேசாமல் உள்ளே போய் விட்டாள். அவள் சொன்னதைக் கேட்டு விட்டு பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று அவருக்கு தாமதமாகத்தான் தோன்றியது.

அலுவலகத்திலும் பல எரிச்சலூட்டும் சம்பவங்கள். அவருக்குக் கீழே பணியாற்றியவர்களை வார்த்தைகளால் பொரிந்து தள்ளி விட்டார்.

"தப்பித் தவறி உள்ளே போயிடாதே. மனுஷன் கடிச்சுக் குதறிடுவாரு" என்று அவரது உதவியாளர் இன்னொருவரிடம் சொன்னது அவருக்குத் தெரியாது!

மாலை வீடு வந்த பிறகும் எரிச்சலுடன்தான் இருந்தார்.

"ஆஃபீஸ்ல இன்னிக்கு எல்லார் மேலயும் எரிஞ்சு விழுந்தீங்களா?" என்றாள் மனைவி.

"டென்ஷன் இருந்தா கோவம் வரத்தான் செய்யும். உனக்கு என்ன தெரியும்?"

"என்ன கோவமா இருந்தாலும் பேச்சிலே கடுமையைக் குறைச்சுக்கலாம் இல்லியா?"

"நீ எனக்கு புத்தி சொல்ற அளவுக்கு நான் இல்ல. போய் வேலையைப் பாரு."

சற்று நேரம் கழித்து "வெளியில போயிட்டு வரேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் ராமநாதன். ஜிராக்ஸ் எடுக்க அருகில் இருக்கும் கடைக்குத்தான் போனார். வேண்டுமென்றேதான் மனைவியிடம் சொல்லவில்லை. 

'எங்கே போறீங்க?' என்று அவள் கேட்க மாட்டாள். எங்கே போயிருக்கிறார், எப்போது வருவார் என்று தெரியாமல் கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருக்கட்டும்!

ஜிராக்ஸ் கடையை நடத்தி வந்த இளைஞன், தான் ஒருவனாகவே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். ஜிராக்ஸ், லாமினேஷன் போன்ற பணிகள் செய்வதைத் தவிர, பேனா போன்ற சில பொருட்களையும் விற்பனை செய்து வந்தான்.

பேனா, பென்சில், பேப்பர் என்று பல்வேறு பொருட்களை வாங்க வந்தவர்கள் சிலரும், ஒரு தாள் முதல், பல பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் வரை ஜிராக்ஸ் எடுக்க வந்திருந்தவர்கள் சிலரும் என்று ஐந்தாறு பேர் கடையில் நின்று கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவரும் தன்னை முதலில் கவனிக்க வேண்டும் என்று அவசரப்படுத்திக் கொண்டிருக்க, அந்த இளைஞன் அனைவரையும் சமாளித்துக் கொண்டிருந்தான்.

"சார் இந்தாங்க. அஞ்சு பேனாதானே கேட்டீங்க? அம்பது ரூபா? சாரி சார். அஞ்சு ரூபா பேனா இல்லை. பத்து ரூபா  பேனாதான் இருக்கு...சார் இவ்வளவு பேஜ் எடுக்க டைம் ஆகும். கொடுத்துட்டுப் போங்க. எட்டு மணிக்கு வாங்க எடுத்து வைக்கிறேன்...ஏ-ஃபோர் ஷீட் தானே சார்?... இந்தாங்க. சார். ஒரு நிமிஷம். இதோ வந்துடறேன்."

"ஏம்ப்பா எவ்வளவு நேரம் நிக்கறது? ஒரு பேஜ் ஜிராக்ஸ் எடுத்துட்டு என்னை அனுப்பக்கூடாது?" என்று கத்தினார் ராமநாதன்.

இளைஞன் சிரிப்புடன் அவர் பக்கம் திரும்பினான். "சாரி சார். அவங்கள்ளாம் உங்களுக்கு முன்னால வந்தவங்க" என்றவன் இன்னொருவரைப் பார்த்து "சார்! பெரியவருக்கு ஒரு பேஜ் மட்டும் எடுத்துக் கொடுத்துட்டு வந்துடறேன்" என்று சொல்லி விட்டு, "சார் கொடுங்க" என்று அவரிடமிருந்து பேப்பரை வாங்கி ஜிராக்ஸ் எடுத்து அவரிடம் கொடுத்தான்.

அவர் பத்து ரூபாயை நீட்டினார்.

"சில்லறை இல்லையே சார்! பரவாயில்லை. அப்புறம் இந்தப் பக்கம் வரும்போது கொடுங்க" என்று சொல்லி விட்டு அடுத்தவரிடம் திரும்பினான்.

ராமநாதன் வீட்டுக்குத் திரும்பும்போது அந்த இளைஞனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார்.

'இவ்வளவு அழுத்தத்திலும் எப்படி அவன் சிரித்த முகத்துடன் இனிமையாகப் பேசுகிறான்? காலை முதல் மாலை வரை இப்படித்தான் இருப்பானோ? எப்படி அவனால் முடிகிறது?'

அவனுடைய அழுத்தமான சூழ்நிலையோடு ஒப்பிடும்போது அவரது டென்ஷன் எதுவுமே இல்லை என்று தோன்றியது. காலையில் காப்பி போடக் கொஞ்சம் நேரமாகி விட்டது என்பதற்காக மனைவியைக் கடிந்து கொண்டோமே என்று நினைத்துக் கொண்டார்.

'இனிமேல் மனைவி சொன்னது போல் பேச்சில் கடுமையைக் குறைத்துக்கொண்டு கொஞ்சம் பொறுமையாகப் பேசிப் பழக வேண்டும்?'

வீட்டுக்குப் போனதும் "ஜிராக்ஸ் எடுக்கப் போயிருந்தேன்" என்றார் மனைவியிடம்.

"நீங்க எங்கே போனா எனக்கென்ன?" என்றாள் மனைவி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது.

பொருள்:  
இன்சொல் பேசினால் இனிய பயன்கள் கிடைக்கும் என்று உணர்ந்த எவரும் கடுஞ்சொற்களைப் பேச மாட்டார்கள்.
பொருட்பால்                                                                                                      காமத்துப்பால்


























2 comments:

  1. சிரிப்பு தொத்து வியாதியோ இல்லியோ எனக்கு தெரியாது. ஆனா, கோவம் தொத்து வியாதின்னு நினைக்குறேன்ப்பா.

    அருமையான குறளும், அதற்குண்டான விளக்கமும், கதையும்கூட நன்று

    ReplyDelete