About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, August 6, 2019

276. பரமகுருவின் மனக்குறைகள்


பரமகுரு தற்செயலாகக் காலண்டரைப் பார்த்தபோதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது. தேதி மூன்று ஆகி விட்டதே! இன்னும் ஏன் கௌதம் பணம் அனுப்பவில்லை?  

கைபேசியை எடுத்து குறுஞ்செய்திகளைப்  பார்த்தார். பண வரவு நிகழ்ந்திருப்பதற்கான செய்தி எதுவும் வரவில்லை. 

மணி மாலை 6. நியூஜெர்ஸியில் காலை 8.30 இருக்கும். கௌதம் அநேகமாக வீட்டிலிருந்து அலுவலகத்துக்குக் கிளம்பியிருக்க மாட்டான்.

வாட்ஸ் ஆப்பில் கௌதமை அழைத்தார். முதல் அழைப்பின்போது அவன் ஃபோனை எடுக்கவில்லை. ஒருவேளை காரில் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருப்பானோ?

அரை மணி நேரம் கழித்து மீண்டும் அழைத்தார். ஃபோன் உடனே எடுக்கப்பட்டது.

"என்னப்பா?" என்றான் கௌதம் எரிச்சலுடன். "டிரைவ் பண்ணிக்கிட்டிருக்கேன். 9 மணிக்கு மேல ஃபோன் பண்ணக் கூடாதா?" 

"இந்த மாசம் இன்னும் பணம் அனுப்பலியே நீ?" என்றார் பரமகுரு.

"ஆஃபீசுக்குப் போய்க்கிட்டிருக்கேன். போனதும் உடனே டிரான்ஸ்ஃபர் பண்ணிடறேன். இப்ப டிராஃபிக் சிக்னல்ல நிக்கறேன். இப்ப கிரீன் வந்துடுச்சு" என்று இணைப்பைத் துண்டித்தான் கௌதம்.

'மாசம் 7,000 டாலர் சம்பாதிக்கிறான். 5 லட்சம் ரூபாய்! அப்பாவுக்கு அனுப்பற பிச்சைக்காசு 25,000 ரூபாயை ஒண்ணாம் தேதி அனுப்பினா என்ன? பொறுப்பில்லாத பய!'

"உன் அம்மா போனதும் தனியே இருக்கிறேன். சமையல்காரன் ஏதோ சமைத்துப் போடுவதைக் கடனே என்று தின்று விட்டுக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது வரும் திடீர்ச் செலவுகளுக்குப் பணம் போதவில்லை. தீர்த்த யாத்திரை எல்லாம் வேறு போக வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். நீ அனுப்பும் 25,000 ரூபாய் போதவில்லை. அடுத்த மாதத்திலிருந்து 50,000 ரூபாய் அனுப்பு!" என்று வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி அனுப்பினார்.

கேட்டதற்கு 5,000 ரூபாயாவது அதிகம் அனுப்புவான். கிடைத்த வரை லாபம்தான்! 

மையற்காரர் மணி வந்தார். "ராத்திரிக்கு டிஃபன் பண்ணி வச்சுட்டேன். வீட்டுக்குக் கிளம்பறேன்" என்றார்.

"என்ன டிஃபன் பண்ணி இருக்கே?"

"நீங்க சொன்னபடி வெஜிடபிள் உப்மா, பெஸரட், சாம்பார்."

"சட்னி அரைக்கலியா?"

"இல்லை" என்றார் மணி தயக்கத்துடன்.

"ஏன்யா நீ என்ன எனக்கு அன்னதானமா செய்யற? என் வீட்டு சாமான்களை வச்சு சமைக்கற. கொஞ்சம் சட்னி அரைச்சா என்ன? ரெண்டு நிமிஷம் கூட ஆகாது. பெண்டாட்டி போனப்பறம் துறவி மாதிரி வாழ்ந்துக்கிட்டிருக்கேன். கொஞ்சம் வாய்க்கு ருசியா சாப்பிடக் கூட முடியல!" என்று அலுத்துக் கொண்டார் பரமகுரு.

"சரி சார். அரைச்சு வச்சுட்டுப் போறேன்."

"சரி. நாளைக்கு என்ன சமைக்கப் போற?"

"காலையில பொங்கல், ரவா தோசை. மத்தியானத்துக்கு பூசணிக்காய் சாம்பார், வாழைக்காய் கறி, புடலங்காய் கூட்டு, மைசூர் ரசம். வழக்கம் போல அப்பளமும் பொரிச்சுடறேன்."

"அதோட கொஞ்சம் கேரட் துருவி தேங்காய் கலந்து வச்சுடு. ஃபிரிட்ஜ்ல பாதி பழுத்த மாங்கா ரெண்டு இருக்கு. அதைத் திருத்தி வெல்லப் பச்சடி செஞ்சுடு."

"சரி சார்!"

"சிப்ஸ், காரா சேவு, ஓமப்பொடியெல்லாம் தீந்து போச்சு. அதெல்லாமும் கொஞ்சம் பண்ணி வச்சுடு. மத்தியானம் பசிக்குது. கொரிக்க ஏதாவது வேண்டியிருக்கு."

"சரி சார்! கிளம்பறேன்" என்றார் சமையற்காரர், நின்று கொண்டிருந்தால் பட்டியல் இன்னும் நீளும் என்று பயந்தபடியே.

ரவு 9 மணிக்கு பரமகுருவைப் பார்க்க அவர் நண்பர் செல்வரங்கம் வந்தார். இருவருக்குமே இரவில் தூக்கம் வராது என்பதால் இருவரும் 11 மணி வரை உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

"என்னப்பா, சாப்பாடு ஆச்சா?" என்றார் செல்வரங்கம்.

"ஆச்சு. எனக்கென்ன, துறவி வாழ்க்கைதானே? சாப்பாடு என்ன சாப்பாடு! கடனேன்னு எதையோ சமைச்சு வச்சுட்டுப் போறான். நானும் பசியைப் போக்கிக்கணுமேன்னு அதைத் தின்னுட்டு வாழ்ந்துக்கிட்டிருக்கேன்!" என்றார் பரமகுரு.

துறவறவியல்
     அதிகாரம் 28      
கூடாவொழுக்கம்   
குறள் 276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

பொருள்:  
மனதுக்குள் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்பவர் போல் இரக்கமற்றவர் யாருமில்லை.
       பொருட்பால்                                                                                   காமத்துப்பால்









No comments:

Post a Comment